திங்கள், 13 ஜூன், 2016

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் ஜூன் 16


இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் ஜூன் 16 
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.

இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.

அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.

இளமைக்காலம்
1870- ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் நாள் வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோஹன் தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். பூபன் தாஸ் சிறந்த அறிவாளி. பிரம்ம சமாஜத்தில் தீவிர நம்பிக்கை உடையவர். மிகுந்த நாட்டுப் பற்று உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப் பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம். சித்தரஞ்சன் தாஸ் அவரது முதல் மகன். அவருக்கு ஒரு தமக்கை உண்டு. சித்தரஞ்சன் தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் 1890-இல் இங்கிலாந்து சென்று இந்தியக் குடிமைப் பணி தேர்வு எழுதினார். இந்தியா திரும்பி 1894-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அவரது இளைய சகோதரர் பி. ஆர். தாஸ் பாட்னா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். வங்கப்பிரிவினையின்போது அரவிந்தர், பிபின் சந்த்ர பாலுடன் இணைந்து "வந்தே மாதரம்" என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார்.

அனுஷீலன் சமிதி
அரவிந்தரும் சித்தரஞ்சன் தாஸும் சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான அனுஷீலன் சமிதியின் துணைத்தலைவர்கள் ஆவர். இவ்வியக்கம் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கிழக்கு இந்தியாவின் முக்கிய ஆயுதம் ஏந்திய இயக்கம் ஆகும். ஆயுதப்புரட்சி மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதே இதன் குறிக்கோள் ஆகும். ஜதீந்திரநாத் பானர்ஜி, ஜதீந்திரநாத் முகர்ஜி, யதீந்திர கோஷ் (அரவிந்தரின் இளைய சகோதரர்), ராஷ் பிஹாரி போஸ் ஆகியோர் இதன் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். சித்தரஞ்சன் தாஸ் ஐரோப்பிய இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். அவர் சாகர் சங்கீத், நாராயண்மாலா, கிஷோர்-கிஷோரீ, அந்தர்யாமி போன்ற இலக்கியங்களை எழுதியுள்ளார். மேற்கத்திய கல்விமுறை ஆத்மா முன்னேற்றத்திற்குப் பயனற்றது என்று கருதினார். பிரம்ம சமாஜ நூல்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர் நூல்கள் ஆகியவற்றை ஆழ்ந்து படித்தார். விவேகானந்தரின் கருத்துகள் இவரைக் கவர்ந்தன. புகழ்பெற்ற அறிஞர்களான பக்கிம் சந்திரர், D.L. ராய், கிரீஷ் கோஷ், இரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் நூல்களையும் அவர் ஆழ்ந்து படித்தார். எல்லோரும் கல்வி கற்க வேண்டியது அவசியம் என்று கருதினார். ஈஷ்வர் சந்த்ர வித்யா சாகரின் விதவை மறுமண இயக்கத்திற்கு உதவினார். அவர் 1890-லிருந்து 1894 வரை இங்கிலாந்தில் இருந்த காலத்தில் தாதாபாய் நௌரோஜிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஜான்மெக்கலன் என்பவரின் இந்திய விரோதப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கிளாட்ஸ்டோன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசினார். அரவிந்தரின் அலிப்பூர் குண்டுவழக்கில் தாஸின் வாதத் திறமையால் அரவிந்தர் விடுவிக்கப்பட்டார். அதனால் அவரது புகழ் பரவியது. தும்ரோன் அரசரின் தத்தெடுப்பு குறித்த வழக்கிலும் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறாக அவர் சிவில், கிரிமினல் இரண்டிலுமே தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். 1920-ல் அவரது மாத வருமானம் ரூ.50,000 ஆகும். அவரது தந்தை தாராள குணத்தாலும், ஆடம்பரத்தாலும் திவாலாகி இருந்தார். 1913-ல் தாஸ் தனது தந்தையின் கடன்களை அடைத்தார். இது அவரது உயர்ந்த தர்ம நியாய உணர்ச்சியைக் காட்டுகிறது. 1921- ஆம் ஆண்டு விக்ராம்பூரில் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அதே ஆண்டு அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றம், அஸ்ஸாம்-வங்காள ரயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தினார்.

அலிப்பூர் குண்டு வழக்கு
குதிராம் போஸ் என்ற இளைஞர் நாட்டுப்பற்று மிகுந்தவர். தனது 13-ஆவது வயதிலேயே சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான யுகாந்தர் இயக்கத்தில் இணைந்தவர். வங்கப்பிரிவினையை எதிர்த்து நடந்த குண்டு வீச்சுகளில் தீவிரமாகப் பங்கு பெற்றவர்.வங்காளத்தில் முசாபூர் நகரத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்ஸ்போர்டு என்பவர் மீது குண்டுவீச குதிராம் போஸும் அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் சென்றனர். 1908-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி கிங்ஸ்போர்டின் வாகனத்தின் மீது குண்டு வீசினர். அந்த வாகனத்தில் வந்த வேறு ஒரு பெண்மணியும் அவரது மகளும் இறந்தனர். பிரபுல்ல சாஹி பிடிபட்ட உடன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். குதிராம் போஸ் 1908-ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட போது அவரது வயது 18 ஆகும். அப்போதும் அவர் "வந்தே மாதரம்" என்றே முழங்கினார். இந்த வழக்கில் அரவிந்தரும் கைது செய்யப்பட்டார். ஆனால் தாஸின் வாதத் திறமையால் அரவிந்தர் விடுவிக்கப்பட்டார். 1921-ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசத் தொண்டாற்றுவதற்காக புகழ்பெற்ற, திறமை வாய்ந்த வழக்கறிஞரான தாஸ் தனது தொழிலைத் துறந்தார். அவரது இந்த தன்னலமற்ற தியாகம் நாடுமுழுவதும் அவருக்கு இருந்த நன்மதிப்பை அதிகரித்தது. வேல்ஸ் இளவரசரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சித்தரஞ்சன் தாஸ் மனைவி பசந்தி தேவி, மகன் சிரா ரஞ்சன், சகோதரி ஊர்மிளா தேவி, கிரண் சங்கர் ராய், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ல் காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதால் காங்கிரஸிலிருந்து விலகி சுயராஜ்ஜியக் கட்சி துவங்கினார்.

சுயராஜ்ஜியக் கட்சி
1923-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி காந்திஜியை எதிர்த்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் சுயராஜ்ஜியக் கட்சி துவங்கப்பட்டது. இதில் முக்கியமானவர்கள் சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு(ஜவஹர்லால் நேருவின் தந்தை), நரசிம்ம சிந்தாமன் கேல்கர் (கேல்கர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாலகங்காதரத் திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்.1910-ஆம் ஆண்டிலிருந்து 1932-ஆம் ஆண்டு வரை "கேசரி" இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார்.), ஹூசேன் சாஹித் ஜராவார்டி(பின்னாளில் பாகிஸ்தான் பிரதமராகப் பணிபுரிந்தார்), நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விதால்பாய் படேல் (வல்லபாய் படேலின் மூத்த சகோதரர். இவரும் அமிதவாதப் போக்கு உடையவர். 1923-ஆம் ஆண்டு மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும், 1925-ஆம் ஆண்டு சபாநாயகராகவும் விளங்கினார். சுபாஷ் சந்திர போஸின் தேசப்பணிகளால் கவரப்பட்ட விதால்பாய் படேல் அவரது ரூ.1,20,000 மதிப்புடைய சொத்தை போஸின் தேசப்பணிகளுக்காகக் கொடுத்தார். ஆனால் காந்திஜி அந்தத் தொகையை காங்கிரஸ் கட்சியின் விருப்பத்திற்கேற்பதான் செலவிட வேண்டும் என்றார். போஸ் மறுத்ததால் வழக்கு நீதிமன்றம் சென்றது. உயில் தெளிவாக இல்லாததால் போஸ் அந்தத் தொகையை இழந்தார்.) போன்றோர் ஆவர். இவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் அரசாங்கத்தின் நியாயமற்ற கொள்கைகளை எதிர்க்க நினைத்தார்கள். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து சுதந்திரம் பெற்று சுயராஜ்ஜியம் அமைப்பதே இவர்கள் குறிக்கோள் ஆகும். சித்தரஞ்சன் தாஸ் "ஃபார்வார்டு" என்ற பத்திரிக்கை ஆரம்பித்து சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்படைத்தார். 1924-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்கத்தா மாநகராட்சி தேர்தலில் சுயராஜ்ஜியக்கட்சி வெற்றி பெற்றது. மாநகராட்சி மேயராக சித்தரஞ்சன் தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக சுபாஷ் சந்திர போஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்கத்தா மாநகராட்சியில் பல சீர்திருத்தங்களைச் செய்து மக்களிடம் பேராதரவைப் பெற்றனர். சிறந்த செயல்பாட்டால் 1925-ஆம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தாராள குணம்
1925-ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று டார்ஜிலிங்கில் தனது 55-ஆவது வயதில் இறந்தார். அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர். தாகூர் சித்தரஞ்சன் தாஸைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவரது தியாகமும் ஆக்கசக்தியும் நம்மை வழிநடத்தும் என்று கூறுகிறார். அவரது தாராள குணம் நினைத்துப் போற்றத்தக்கது. அவரது இல்லம் "சித்தரஞ்சன் சேவாசதன்" என்ற பெயரில் மருத்துவமனையாகச் செயல்படுகிறது.

மேற்கு வங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர் 1919-1922 காலப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக் கட்சியை ஆரம்பித்தார்.

ஃபோர்வார்ட் (Forward) என்ற செய்திப் பத்திரிகையை பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக ஆரம்பித்து நடத்தினார். இப்பத்திரிகை பின்னர் விடுதலை (liberty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு சாகர் சங்கீத் என்ற பெயரில் புகழ் பெற்றவை.


தேசபந்து’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ்  நினைவு  நாள்  ஜூன் 16 இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந் தவர். மாணவப் பருவத் திலேயே விடுதலை இயக் கங்களில் கலந்துகொண்டார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். 1894-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

 தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். ‘தேசபந்து’ (தேசத்தின் நண்பன்) என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

 அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளி யேற்ற விவகாரம், ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகிய போராட்டங்களில் பங்கேற்றார். திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். 1910-ல் இருந்து 1932 வரை ‘கேசரி’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

 1920-ல் இவரது மாத வருமானம் ரூ.50 ஆயிரம். பின்னாளில் ஒரு வழக்கு நடத்த ரூ.1 லட்சம் வரை கட்டணம் வாங்கியவர். வழக்கறிஞர் தொழில், வருமானம், வசதியான வாழ்க்கையைத் தியாகம் செய்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டது.

 ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922-ல் சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். இதன் கொள்கைகளைப் பரப்ப ‘ஃபார்வர்டு’, ‘பங்களாசுதா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார்.

 அரவிந்தரும் இவரும் சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான அனுஷீலன் சமிதி இயக்கத்தின் துணைத் தலைவர்கள்.1909-ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் வாதாடி அரவிந்தருக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.

 1923-ல் நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924-ல் நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்றது. சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டுவந்தவர்.

 பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் விதவை மறுமண இயக்கத்துக்கு உதவினார். தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முழங்கியவர்.

 இலக்கியத்திலும் ஆர்வம் உடையவர். பிரம்மசமாஜ நூல்கள், ராமகிருஷ்ணர் உபதேசங்கள், பக்கிம் சந்திரர், டி.எல்.ராய், கிரீஷ் கோஷ், தாகூர் ஆகியோரது புத்தகங்களை ஆழ்ந்து படித்தார். சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள், திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார்.

 தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதிவைத்தார். 55-வது வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக