செவ்வாய், 14 ஜூன், 2016

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாள் ஜூன் 17


இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  வாஞ்சிநாதன் நினைவு நாள் ஜூன் 17
வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) [திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்..

வாழ்க்கைச் சுருக்கம்
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில்  பணியாற்றினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.

வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு.எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது.

ஆஷ் துரை கொலை
1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்க்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது.

கௌரவிப்பு

வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு பெயர்ப்பலகை
மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயரிட பாராளுமன்றத்தில் குமரி அனந்தன் வலியுறுத்தினார்.[4] முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்கள்
வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொலை செய்த இடத்தில் விட்டுச் சென்ற கடிதத்தில் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கொண்டு அவர் சாதி, சனாதன உணர்வுகளைக் கொண்டிருந்தார் என்றும் விமர்சனம் செய்யப்படுகிறது. அவர் பஞ்சமன் என்று எழுதவில்லை, ஐந்தாம் ஜார்ஜ் என்பதை ”பஞ்சயன்” என்றே எழுதினார் என்று இந்த விமர்சனத்தை மறுப்போரும் உளர்.

வீர வாஞ்சிநாதன்

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றிய நிகழ்ச்சி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி. இன்றோடு 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது என்றாலும், இன்றும் பேசப்படும் நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மிணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். ஆனால், அவரை வாஞ்சி என்றே அனைவரும் அழைத்துள்ளனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த வாஞ்சி, திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

கல்லூரியில் படிக்கும்போது பொன்னம்மாளுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து, புனலூர் வனத்துறையில் பணியாற்றினார் வாஞ்சி. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம்.

அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட புரட்சியாளர்களுக்கு, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் இருந்து உதவிகள் கிடைத்து வந்தன. அங்குள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வாஞ்சி, அரசுப் பணியில் இருந்து விலகி, புரட்சிப் பாதைக்கு மாறினார். நண்பர்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்.

புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் வீட்டில் வாஞ்சி தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்தித்துள்ளார். இந்தியர்கள் நடத்தி வந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தப் பாடுபட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் துரையைக் கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.

1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிட அறை நோக்கி ஓடினார். அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.

வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி - மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக