புதன், 15 ஜூன், 2016

உலக அகதிகள் நாள் ஜூன் 20



உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர் நடந்துகொண்டே இருக்கிறது. போரின் கோரக் கரங்களிலிருந்து உயிர்பிழைக்க, குடும்பம்குடும்பமாக மக்கள் இடம்விட்டு இடம் செல்ல நேர்கிறது. ஒவ்வொரு நிமிடமும் எட்டுப் பேர் தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வேற்றிடம் தஞ்சம் புகுகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இத்தகைய அகதிகளின் நிலைபற்றிய ஒரு ஆய் வரங்கை ஐ.நா. 1951-ல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக 2000-ல் ஐ.நா. இயற்றிய ஒரு தீர்மானத்தில் 1951 கூட்டத்தின் 50-வது ஆண்டுவிழாவை ஒட்டி, ஜூன் 20-ம் தேதியை அகதிகளுக்கான ஒரு உலக நாளாக அறிவித்ததையொட்டி, 2001 முதல் அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

உலகத்தில் 2011-ம் ஆண்டு வரை அகதிகளாக மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள் சுமார் 4 கோடியே 33 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குழந்தைகள். தங்களுக்கு அடைக்கலம் தருமாறு பல்வேறு நாடுகளுக்கு அகதிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 171 நாடுகளில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக இடம் பெயர்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கும் ஐ.நா. உதவிசெய்கிறது. 64 நாடுகளில் வசிக்கும் 35 லட்சம் பேரை நாடற்ற மனிதர்கள் என்று ஐ.நா. அடையாளம் கண்டுள்ளது. உலக அளவில் அவர்களது எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகள் இந்தியாவிலும் உண்டு.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் அகதியானவர்கள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் உள்ள அகதிகளில் முக்கியமானவர்கள். நாகரிகம் வளராத காலத்தில் உணவுக்காகப் புதிய இடங்களைத் தேடிச்சென்ற மனிதர்கள், இன்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலைந்துதிரிகிறார்கள்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக