புதன், 12 ஏப்ரல், 2017

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி ( Good Friday )



புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி  ( Good Friday )

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி ( Good Friday ) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
இயேசு கல்வாரி மலையில்
சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இயேசு இறந்த ஆண்டு
இயேசு கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று இறந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். சிலர் இயேசுவின் சாவு கி.பி. 34ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
விவிலிய ஆதாரங்கள்
இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து
சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை நற்செய்தி நூல்கள் ஆகும். கீழ்வரும் பகுதிகளைக் காண்க:
மத்தேயு நற்செய்தி 26:36-75; 27:1-61
மாற்கு நற்செய்தி 14:32-72; 15:1-47
லூக்கா நற்செய்தி 22:39-62; 23:1-56
யோவான் நற்செய்தி 18:1-40; 19:1-42
விவிலிய உரைக்கூற்றுகளின்படி இயேசுவின் துன்பமும் சிலுவைச் சாவும்
நற்செய்திச் சான்றுப்படி, எருசலேம் கோவில் காவலர்களும் யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவை கெத்சமனி தோட்டத்தில் கைதுசெய்தார்கள். இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைக் கூலியாகப் பெற்றிருந்தார். கைதுசெய்யப்பட்ட இயேசுவை முதலில் அன்னாஸ் என்பவரின் முன் கொண்டு சென்றார்கள். இவர் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவரின் மாமனார். பின் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார்.
இயேசுவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இயேசு எருசலேம் கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி எழுப்புவதாகக் கூறினார் என்றொரு குற்றச்சாட்டு. அவர் தம்மைக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு.
அப்போது தலைமைக் குரு இயேசுவை நோக்கி, "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார். அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்" என்று பதிலிறுக்கவே தலைமைக் குரு இயேசு கடவுளைப் பழித்ததாகக் கூறினார். உடனே, கூடியிருந்த மக்கள் "இவன் சாக வேண்டியவன்" என்று பதிலிறுத்தார்கள்.
இதற்கிடையில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் ஓடிவிட்டார்கள். தலைமைச் சீடராய் இருந்த
பேதுரு கூட "இயேசுவை அறியேன்" என்று கூறி மும்முறை மறுதலித்தார். ஆயினும் பின்னர், தாம் இவ்வாறு கோழையாக நடந்து கொண்டதற்காகவும் தம் குருவும் ஆண்டவருமான இயேசுவை மறுதலித்ததற்காகவும் மனம் நொந்து அழுதார்.
அதன்பின், இயேசுவை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்து என்பவரின் முன் கொண்டுசென்றார்கள். பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, அவரிடத்தில் யாதொரு குற்றமும் இல்லை என்று மக்கள் கூட்டத்திடம் சொல்லிப் பார்த்தார். இயேசு கலிலேயப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்து பிலாத்து அவரைக் கலிலேயாவை ஆண்ட ஏரோதிடம் அனுப்பினார். யூதர்களின் பாஸ்கு விழாவுக்காக ஏரோது எருசலேமில் இருந்தார். ஏரோது கேட்ட கேள்விகளுக்கு
இயேசு பதில் ஒன்றும் தராமல் அமைதி காத்தார்.
பின்னர் பிலாத்து இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலை செய்ய முனைந்தார். ஆனால் மக்களோ இயேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றும், பரபா என்னும் குற்றவாளியை விடுதலை செய்யவும் கூறினார்கள். இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டதற்கு மக்கள், "சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்தினார்கள்.
இயேசுவை விடுதலை செய்தால் பெரிய கலவரம் நிகழும் என்றும் தன் பதவி பறிபோகும் என்று அஞ்சிய பிலாத்து, "இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை" என்று கூறித் தன் கைகளைக் கழுவினார்.
படைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தார்கள். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மீது வைத்து, அவரது வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர்முன் முழந்தாட்படியிட்டு, "யூதரின் அரசரே, வாழ்க!" என்று சொல்லி ஏளனம் செய்தனர். அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர். இவ்வாறு ஏளனம் செய்த பிறகு, அவருடைய பழைய ஆடைகளை அவருக்கு மீண்டும் உடுத்தி, அவருடைய தோள்மீது சிலுவையைச் சுமத்தினார்கள். இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" (கல்வாரி - Calvary = the place of the skull) என்னும் இலக்கு நோக்கி நடந்தார்.
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவினார். பெருந்திரளான மக்கள் இயேசுவுக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக எழ வேண்டாம்; மாறாக, உங்களுக்காகவும் உங்க்ள் மக்களுக்காகவும் அழுங்கள்" என்றார்.
"மண்டை ஓடு" எனப்படும் இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் ஏற்றினார்கள்.
இதுவே நற்செய்தி நூல்கள் இயேசுவின் துன்பங்கள் பற்றியும் அவர் சிலுவையைச் சுமந்து சென்று, ஒரு குன்றின்மேல் சிலுவையில் அறையப்பட்டது பற்றியும் தரும் சான்றுகளின் சுருக்கம்.
சிலுவையில் தொங்கிய இயேசு
இயேசு சிலுவையில் தொங்கியபோது, மிகுந்த வேதனைக்கு நடுவிலும் சில சொற்களைக் கூறினார். அவற்றை நான்கு நற்செய்தியாளரும் சிறிது வேறுபட்ட விதத்தில் பதிவு செய்துள்ளனர். அவற்றின் தொகுப்பு வருமாறு:
மாற்கு 15:33-34
“ நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.
பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" என்று உரக்கக் கத்தினார். "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது அதற்குப் பொருள். ”
லூக்கா 23:32-34
“ வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.
மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது (இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். ”
லூக்கா 23:39-43
“ சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். ”
லூக்கா 23:44-48
“ ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். ”
யோவான் 19:25-27
“ சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.
பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். ”
யோவான் 19:28-29
“ இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். ”
யோவான் 19:30
“ அந்தப் புளித்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். ”
இயேசுவின் துன்பங்களையும் சாவையும் திருச்சபை நினைவுகூர்தல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது:


மிகப் பழைமையான வழக்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்:
1) இறைவாக்கு வழிபாடு
பெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும். இவ்வாசகங்கள் கீழ்வருமாறு:
எசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16; 5:7-9
யோவான் 18:1-19:42
விவிலியம் இயேசு அனுபவித்த துன்பங்களையும் சாவையும் முன்னறிவித்தது எசாயா நூலில் உள்ளது. இயேசுவின் வாழ்க்கையின் இறுதியில் நடந்த நிகழ்ச்சிகளை வரலாறு போல எடுத்துரைக்கின்ற உரைக்கூற்று
யோவான் நற்செய்தியில் உள்ளது.
எபிரேயர் நூல்) இயேசு அனுபவித்த துன்பத்தின் பொருள் என்னவென்று விளக்குகிறது.
இந்த வாசகங்கள் முடிந்ததும் கீழ்வரும் பொது மன்றாட்டுகள் மக்கள் பெயரால் எழுப்பப்படும்:
திருச்சபைக்காக
திருத்தந்தைக்காக
திருநிலையோர் மற்றும் பொதுநிலையோருக்காக
திருமுழுக்குப் பெற தங்களைத் தயாரிப்போருக்காக
கிறித்தவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதற்காக
யூத மக்களுக்காக
இயேசுவை ஏற்காதோருக்காக
கடவுளை ஏற்காதோருக்காக
பொதுப்பணி புரிவோருக்காக
சிறப்புத் தேவையுடையோருக்காக
2) சிலுவைக்கு வணக்கம் செலுத்துதல்
இயேசு உயிர்துறந்த சிலுவை கிறித்தவர்களுக்குத் தனிப் பொருள் வாய்ந்த அடையாளம் ஆகும். எனவே, பெரிய வெள்ளிக் கிழமையன்று திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். எரியும் மெழுகுவத்திகள் நடுவே சிலுவை பவனியாகக் கொண்டுவரப்படும். குருவும் மக்களும் சிலுவையைத் தொட்டு முத்தமிடுவது வழக்கம். அப்போது இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை மக்கள் பாடுவார்கள்.
3) நற்கருணை விருந்து
இயேசு சிலுவையில் உயிர்துறந்து மக்களுக்கு விண்ணக வாயிலைத் திறந்துவைத்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அவர் இறந்த நிகழ்ச்சியைத் திருப்பலியாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், பெரிய வெள்ளிக்கிழமையன்று தனியாகத் திருப்பலி நிகழ்வதில்லை. ஏனென்றால் இயேசுவே இப்பலியைக் கல்வாரி மலைமேல் ஒப்புக்கொடுத்தார். தம்மையே மனிதரின் மீட்புக்காகக் கையளித்தார். இவ்வாறு தம்மை அன்புக் காணிக்கையாகக் கொடுத்த இயேசுவோடு அன்புறவு கொள்ளும் விதத்தில் கிறித்தவர்கள் இயேசுவின் உடலை அப்ப வடிவில் அடையாளமாக உண்பார்கள்.
பின்னர் அனைவரும் அமைதியாகப் பிரிந்து செல்வார்கள்.
பெரிய வெள்ளியன்று சிலுவைப் பாதை நிகழ்வு
புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர், மேதகு மிக்கேல் அகுஸ்தீன் ஆண்டகை புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை செய்யும் காட்சி
முதன்மை கட்டுரை: சிலுவைப் பாதை
பெரிய வெள்ளிக் கிழமையன்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற இன்னொரு முக்கிய நிகழ்ச்சி சிலுவைப் பாதை ஆகும். இது அதிகாரப்பூர்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பொதுமக்கள் விரும்பி நடத்துகின்ற ஒரு இறைவேண்டல் கொண்டாட்டம் ஆகும். தவக் காலத்தின் வெள்ளிக் கிழமைகளிலும், அதிலும் சிறப்பாகப் பெரிய வெள்ளிக் கிழமையில் சிலுவைப் பாதைக் கொண்டாட்டம் தனிப் பொருள் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. ஏனென்றால் இயேசு அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, தாங்கள் கடவுளுக்கும் பிறருக்கும் எதிராக நடப்பதே இயேசு துன்புற்றுச் சாவதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக சிலுவைப் பாதை அமைகின்றது.
உரோமையில் திருத்தந்தை நிகழ்த்தும் சிலுவைப் பாதை தொலைக்காட்சி வழியாக உலக மக்கள் அனைவரையும் சென்றடைகிறது. முன்னாளைய திருத்தந்தையர்களாகிய ஆறாம் பவுல் (சின்னப்பர்) , மற்றும் இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) ஆகியோர் தாமாகவே சிலுவையைச் சுமந்துகொண்டு, உரோமையில் அமைந்துள்ள முன்னாளைய கேளிக்கை அரங்கமாக இருந்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் களமாக மாறிய
கொலொசேயம் என்னும் இடத்தில் சிலுவைப் பாதை ஆண்டுதோறும் நிகழ்த்துவது வழக்கம். அவர்களைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் அங்கு சிலுவைப் பாதை நிகழ்த்தியுள்ளார். 2011ஆம் ஆண்டிலும் பெரிய வெள்ளியன்று (ஏப்ரல் 22) சிலுவைப் பாதையை நிகழ்த்தினார்.
2012ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் பெரிய வெள்ளி ஆகும்.

2013 பெரிய வெள்ளி கொண்டாட்டம்

2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
திருத்தந்தை பிரான்சிசு பெரிய வெள்ளிக் கொண்டாட்டத்தை 2013 மார்ச்சு 29ஆம் நாள் பிற்பகலில் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்தினார். மாலை வேளையில் உரோமையின் பண்டைய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகிய
கொலொசேயம் என்னும் வட்டவடிவ அரங்கில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டபோதிலும் தம் பகைவரை மன்னித்தது போன்று இன்றைய உலகிலும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று
திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.

2014 பெரிய வெள்ளி கொண்டாட்டம்

2014 ஏப்ரல் 18ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகரின் 2000 ஆண்டு வரலாறு மிக்க வட்டவடிவ அரங்கமான
கொலொசேயம் என்னும் இடத்தில்
சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இது திருத்தந்தை பிரான்சிசு கொலொசேயத்தில் இரண்டாம் ஆண்டாகத் தலைமை தாங்குகின்ற சிலுவைப் பாதை ஆகும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்நீத்த நிகழ்ச்சியை சிலுவைப் பாதை நினைவுகூர்கின்றது. வத்திக்கானின் மறையுரையாளரான தந்தை ரனியேரோ காந்தலமேசா என்பவர் மறையுரை வழங்கினார். பேராசையும் பொருளாசையும் உலகில் பல தீமைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்று அவர் கூறினார். மேலும், மனிதர்கள் பிற மனிதர்களை விற்பனைப் பொருள் போல நடத்தும் இழிவைச் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழலை மாசுறச் செய்வது மனித இனத்திற்குப் பெரும் தீங்கு விளைப்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதையின் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் "எல்லாராலும் கைவிடப்பட்ட மக்களை நாம் கைவிடலாகாது." என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், "தீமை ஒருபோதும் வெற்றியடையாது. அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே இறுதியில் வெற்றிபெறும்" என்றுரைத்தார்.
சிலுவைப் பாதையின் 14 நிலைகளில் தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டன. உலகத்தின் பலபகுதிகளில் சிறுவர்கள் போர்ச்செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வறுமை, அரசியல் ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் தம் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பெயர்ந்து செல்ல முனைவோர் பலர் சாவுக்கு உள்ளாகின்றனர். சிறைக்கூடங்களில் கைதிகள் இடவசதியோ பிற வசதிகளோ இன்றி அவதிப்படுகிறார்கள். முதியோர் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பலவிதமான அநீதிகளும் தீங்குகளும் இன்றைய உலகில் இன்னும் நீடிக்கின்றன. அவற்றை அகற்றிட இயேசுவின் சிலுவைச் சாவு மனிதருக்கு ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும் என்ற சிந்தனை சிலுவைப் பாதை வழிபாட்டின்போது வழங்கப்பட்டது.



புனித வெள்ளி சிறப்புக் கட்டுரை
2000 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா பண்டிகையின் போது, குற்றமற்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து. அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. மரணம் என்பது முடிவல்ல; அதிலிருந்தே உலகிற்கான விடுதலை தொடங்குகிறது. மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசுவின் மரணம்.
தேவ ஆட்டுக்குட்டி
தங்களது பாவங்கள், குற்றங்கள், குறைகள் ஆகியவற்றை மன்னிக்கும்படி கடவுளிடம் கெஞ்சும் மனிதர்கள் ஆடு அல்லது மாடு ஒன்றை பலி செலுத்துவதை பாரம்பரியமாகச் செய்து வந்தனர். உலகின் எல்லா நாகரிகங்களிலும் இந்த பரிகாரப் பலியைக் காணமுடியும். இவ்வாறு ஒருவர் தவறுக்கு மற்றொரு உயிரை பலியாகத் தரும்போது அது ஆடு எனில் அதை ’ பலியாடு’ என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருப்பதை அவதானிக்க முடியும்.
இயேசுவை ’தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்க, மனிதர்களின் பாவங்களுக்கு பலியாக தனது இன்னுயிரை அவர் ஈந்ததே காரணம். இந்த உயிர் ஈகையை விவிலியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் அதேநேரம், இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் நோக்கும்போது இன்னும் பல புனித உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
யூத மதத்தின் வீழ்ச்சி
இயேசு பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட காலகட்டத்தில் யூதமதத்தில் பல பிரிவுகள் தோன்றி யிருந்தன. அதற்குக் காரணம் எருசலேமின் வீழ்ச்சி. முதல் நூற்றாண்டின் யூத வரலாற்றாசிரியர் ஜொஸிஃபசின்(Josephus) ‘யூத தொன்மையியல் வரலாறு (Antiquities of the Jews c. 94) என்ற வரலாற்று நூல் நமக்கு இதை எடுத்துக் கூறுகிறது.
இயேசுவின் காலகட்டத்தில் யூத மதத்தின் அதிகார மட்டத்தில் யூத ஆட்சியாளர்களுக்குச் சமமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இரண்டு உயர் வர்க்கப் பிரிவினர் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள். மதத்தின் பெயரால் பொதுமக்களை மிரட்டி கைப்பாவைகளாக தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த இவர்களே இயேசுவை ’மேசியா’( மக்களை மீட்டுக் காக்க வரும் வலிமை மிக்க அரசன் என்பது பொருள்) என்று சாமன்ய யூத மக்கள் அவரை அழைப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்தவர்கள்.
யூத மதத்தை பல்வேறு பிரிவுகளாக்கி நீர்த்துப்போகச் செய்த சதுசேயர்களையும் பரிசேயர்களையும் பற்றிக் குறிப்பிடும் ஜொஸிஃபஸ், இவர்கள் கிரேக்கப் பண்பாடு மற்றும் தத்துவத்தில் மூழ்கிக்கொண்டிருந்ததை எடுத்துக் காட்டுகிறார்.
செலூக்கிய ஆட்சியாளர்கள் எருசலேமை வென்றபோது பரலோகத் தந்தையின் வீடாகிய எருசலேம் ஆலயத்தைக் கைப்பற்றி அதில் ஜியஸ் கடவுளின் சிலையை பிரதிஷ்டை செய்தபோது கிரேக்க மதத்திற்கும் யூத மதத்திற்கும் இடையிலான வெறுப்பும் இறுக்கமும் அதன் உச்சத்தை எட்டியது. யூதா மக்கபே என்ற யூதத் தலைவர் இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் பெரும் படைத்திரட்டி கிளர்ச்சி செய்து ஆலயத்தை மீட்டார்.
மக்கபேயர்களின் எழுச்சிக்குப் பிறகு தத்துவங்களின் அடிப்படையில் யூத மதத்தில் மேலும் பல உட்பிரிவுகள் தோன்றின. இவை யூத சமூகத்தின் மீது மேலும் ஆதிக்கம் செலுத்த போட்டியிட்டன. இவ்வாறு யூத மதம் கடும் விரிசலை சந்திக்க காரணமாக இருந்தார்களை ஆராய்ந்தால் பரிசேயர்களும் சதுசேயர்களும் வந்து நிற்கிறார்கள்.
பரிசேயர்களும் சதுசேயர்களும்
பரிசேயர்கள் என்ற வார்த்தைக்கு ‘பிரிந்திருப்பவர்கள்’ என்ற பொருளையும் தருகிறது யூத மொழியின் மூல அகராதி. பரிசேயர்கள் சமூக அடுக்கில் கல்வியில் சிறந்து விளங்கி, வேத நூல்களில் புலமை பெற்றவர்களாக வாழ்ந்தவர்கள். சடங்காச்சாரங்களிலிருந்து தங்களைப் பிரித்துக் கொண்ட இவர்கள், யூதத் திருச்சட்டங்களுக்கு விளக்கம் கொடுப்பதில் புதிய முறையை உருவாக்கினர்.
அதுவே வாய்மொழிச் சட்டம் என்று மக்கள் மீது திணிக்கப்பட்டது. சீமோனுடைய ஆட்சியின்போது அவர்கள் மேலும் செல்வாக்கு பெற்று வளர்ந்தனர். மதவிவகாரங்களில் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் மூப்பர்களின் ஆலோசனை சபையில் இடம்பெறாத பரிசேயர்கள் தங்கள் செல்வாக்கால் இடம்பிடிக்கத் தொடங்கினர். அந்த ஆலோசனை சபையே பிற்பாடு நியாயச் சங்கம் என்று அழைக்கப்பட்டது.
இந்த நியாயச் சங்கத்திடம்தான் ரோமானிய ஆளுநரான பிலாத்து, இயேசுவை ஒப்படைத்து “ இவர்மீது நான் எந்தக் குற்றமும் காணவில்லை.” என்று இயேசுவைக் கைகழுவி, பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் பகையை சம்பாதித்துக் கொள்வதிலிருந்து தப்பித்து தன் பதவியை தக்க வைத்துக் கொண்டர்.
அதேபோன்று சதுசேயர்கள் சாலொமோனின் காலத்திலிருந்தே மதகுருமார்களாக உயர்பதவியில் இருந்து சேவை என்ற பெயரில் ஆடம்பரங்களை அனுபவித்து வந்தவர்கள். மக்கள் மீது கடும் செல்வாக்கைச் செலுத்தி வந்தவர்கள். இந்த இரண்டு தரப்பினருமே புனிதம் என்ற பெரில் யூத மதத்தை கீழான கோட்பாடுகளின் கூடாரமாக மாற்றினர்.
இயேசு மீது வன்மத்தை விதைத்தது எது?
பிறப்பால் யூதரான இயேசு, பரலோகத் தந்தை கையளித்த கட்டளைகளை மீறி நடந்துகொண்டிருந்த யூத மதப் பழக்கவழக்கங்களையும், ஒழுங்கீனங்களையும் எதிர்த்து விமர்சித்தார். யூதம் கற்பித்த கீழ்மைகளுக்கு எதிர்நிலையில் நின்று அவற்றுக்கு மேலானதைப் போதித்தார். இதனால் இயேசுவின் போதனைகள் தங்களது செயல்பாடுகளுக்கும் வாழ்க்கைமுறைக்கும் எதிரானதாக இருப்பதை உணர்ந்து அவர் மீது பரிசேயர், சதுசேயர் மற்றும் உயர்குடி யூதர்கள் கடுஞ்சினம் கொண்டனர்.
“கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்” என்பது யூத மதத்தின் கடுமையான அணுகுமுறை. “எதிரிக்கும் அன்பு செய் - ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு”. இது இயேசுவின் அன்புமுறை. “பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்றனர் யூதர்கள்.
“உங்களில் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்று கூறி மன்னிப்பை போதித்தார் இயேசு. யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் கீழானவை என்று தீண்டாமையை போதித்தது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தி அனைவரும் சமம் என்றார் இயேசு.
மத குருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள் - அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்றது யூத மதம். ஆனால் தன் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு “உங்களில் தலைமை தாங்க விரும்பும் யாரும் முதலில் எல்லோருக்கும் பணியாளாக இருந்து தொண்டு செய்ய துணிவு இருக்க வேண்டும்” என்றவர் இயேசு.
பெரு நோயாளிகளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது யூத மதம். இயேசுவோ அவர்களை குணமாக்கி சமூக நீரோட்டத்தில் இணைத்தார். கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும் பாவமே காரணம். அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்றது யூத மதம். இயேசுவோ தானே பாவங்களை மன்னித்து குணமளித்தது யூதர்களைக் கொதித்தெழச் செய்தது.
தந்தையின் விருப்பம்
நாளை புனித வெள்ளி. இயேசு நமக்காக கொடூரமான மரணத்தை ஏற்றுக்கொண்ட தினம். சீர்திருத்த ஞானத்தைப் போதித்து ஒரு தலைசிறந்த குருவாக விளங்கி, பாவங்களை மன்னித்து நோய்களிலிருந்து மக்களை விடுவித்து வாழ்வளித்தவர் இறைமகன் இயேசு. அவர் யார் என்ற கேள்விக்கான பதில் அவரது மரணத்தின் மூலமாகவே முழுமையாக வெளிப்படுகிறது.
மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாத நிலையில், தம் சீடராலும் கைவிடப்பட்ட நிலையில், பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இயேசு நிலைகுலையாமல், தாம் ஆற்ற வந்த பணியை நிறைவேற்றுவதிலேயே முனைப்புடன் இறுதிவரை நின்றார்.
தாம் மனிதனாகப் பிறந்து வந்ததன் நோக்கம் என்னவென்பதை அவரே அறிவித்திருந்தார்: “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு செய்வதற்கும் பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்காகவுமே வந்தார். (மாற்கு 10:45). இவ்விதம் அவர் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார்”(மாற்கு 14:36).



புனித வெள்ளி தினத்தின் சிறப்பு தெரியுமா?

உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூரப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண தினம் மட்டுமே, குட் பிரைடே என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர். இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் மக்கள் பின்பற்றவில்லை. பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34வது வயதில் பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார். இயேசு தனது முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும், ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். பஸ்கா பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான். பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர். மறுநாள் ரோம அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல், கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை. இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது, என கைகளை கழுவி, இவரை இஷ்டப்படி செய்யுங்கள், என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூத மதக்குருக்கள் அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, கபாலஸ்தலம் எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர். இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்: 1.கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது, இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
2.தனது வலது பக்கத்தில் இருந்த கள்ளனை பார்த்து, நீ இன்றைக்கும் என்னுடனே பரதீசிலிருப்பாய்.
3.தன் தாயை நோக்கி, இதோ உன் மகன் என்றும், சீசன் யோவானை நோக்கி, இதோ உன் தாய் என்றார்.
4.கடவுளே, கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்.
5.தாகமாயிருக்கிறேன்.
6. எல்லாம் முடிந்தது.
7.கடவுளே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். நற்செயல்கள் புரிந்து, சிலுவை மரணத்தைச் சந்தித்து, மனிதகுலத்துக்காக, இயேசுநாதர் பாவமன்னிப்பை பெற்ற நாளே பெரிய வெள்ளி தினமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக