சனி, 1 அக்டோபர், 2016

ஓவியர் ரவி வர்மா நினைவு தினம் அக்டோபர் 02.

ஓவியர் ரவி வர்மா நினைவு தினம் அக்டோபர் 2.

ராஜா ரவி வர்மா ( ஏப்ரல் 29 , 1848 -
அக்டோபர் 2, 1906 ) நவீன காலத்துக்கு ஏற்ற
முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை
அப்படியே இந்தியப் பாணி
ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ்
பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜா ரவிவர்மா கேரளாவின்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள
கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம்
ஆண்டில் உமாம்பா - நீலகண்டன்
தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே
சமஸ்கிருதம் , மலையாளம் ஆகியவற்றுடன்
ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா
ராஜவர்மாவிடமிருந்து
கற்றுக்கொண்டார்.
ஓவியக்கலையில்
ஈடுபாடு
ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத்
தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை
யெல்லாம்
கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர்
மன்னர் ஆயில்யம் திருநாள்
மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம்
ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில்
எண்ணெய் வண்ண ஓவியக்கலையை
அரண்மனை ஓவியர் ராமசாமி
நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள்
பயின்றார். சுதேசிமுறையில்
செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச
குடும்பத்தைச் சேர்ந்ததொரு
பெண்ணை
மணந்துகொண்டார்.
எண்ணெய்
வண்ண ஓவியக்கலை
இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண்
ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள்
தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள்
தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின்
எண்ணெய் வண்ண ஓவியங்களைப்
பற்றி சில உத்திகளைத் தெரிந்து
கொள்ளவேண்டும் என்று
ரவிவர்மா விரும்பினார். தியோடோர்
ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868
இல் அரண்மனை வந்திருந்தபோது அவர்
ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும்
அருகில் இருந்து கவனித்து அதன் மூலம்
தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக்
கற்றுக்கொண்டார். அந்நாளில்
அவர் சென்னை ஆளுனராகிய
பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த
ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது.
ஆயில்யம் திருநாள் மகாராஜா,
ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக
வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும்
உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 -
1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி
நிறைய ஓவியங்களைப் படைத்தார். [1]
மஹாராஜா மூன்றாம்
சத்யாஜிராவ் கெய்க்வாட்
(Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக்
காலத்தில் ரவிவர்மா பரோடா
சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின்
இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள்
தங்கினார். அவரது
பெரும்பாலான சிறந்த ஓவியங்கள்
அங்குதான் படைக்கப்பட்டன. தமது
வாழ்வின் பெரும்பகுதியை அவர்
மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894
இல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார்.
1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி
ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன்
உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899
இல் அச்சகத்தை ஸ்லிஷர் ( Slisher)
நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது
58ஆவது வயதில் அவர் இறைவனடி
சேர்ந்தார்.
புகழ்பெற்ற
ஓவியங்கள்
1873 இல் வியென்னாவில்
நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில்
ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டு சிறப்பான
விருதைப்பெற்றார். தென்னிந்தியப்
பெண்களை இந்துக்கடவுளரின்
உருவகங்களாகப் படைத்தார்.
பழம்பெரும் காவிய நாயகிகளான
துஷ்யந்தை , சகுந்தலை , தமயந்தி போன்றோரின்
உருவகங்களை வரைந்து உலகப்புகழ்
பெற்றார். " நவம்பர் 24 2002 இல்
டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது
யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம்
ரூபாய்க்கு ஏலம் போனது" [2] .
ரவிவர்மா குறித்த
விமரிசனங்கள்
இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது
ஓவியங்களில் வெறும் கதை
சொல்லும் (illustrative) தன்மையும்,
உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான்
காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை
வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல்
செய்யும், இந்தியக் கலையியலைப்
புறக்கணித்த ஓவியர் என்றும்
குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில்
அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர்
ஓவியர்' என்று அவரை கொச்சைப்
படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு
உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி
இந்திய வண்ண உத்தியை அவர்
அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.
.....................

ஓவியர் என்றால் எளிய மக்களிடமும்
அறிமுகம் கொண்டவர்
ராஜா ரவிவர்மா மட்டுமே. தனது
ஓவியங்கள் அரசர்கள் மற்றும்
செல்வந்தர்களின் மாளிகைகளை
அலங்கரித்த போதும், அவற்றின்
அச்சுப்பிரதிகள் சாமானியர்களின்
வீட்டுச்சுவர்கள், பூஜை அறைகளையும்
அலங்கரிக்க வகைசெய்தவர்.
இவரது அம்மா உமையாம்பாள்
தம்புராட்டி எழுதிய ‘பார்வதி
சுயம்வரம்’ படைப்பு குறிப்பிடத்தக்கது.
தனது அம்மாவின் மறைவுக்குப் பிறகு
ரவி வர்மாவால் அச்சிட்டு
வெளியிடப்பட்டது. சிறுவயதிலேயே
புராணங்களின் மீது நாட்டம் ஏற்பட
அவரது அம்மாவின் வளர்ப்பு
காரணமாக இருந்துள்ளது.
இந்திய ஓவிய மரபுகளில் தனித்துவம்
ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்திய
பெருமை இவரைச் சாரும். இந்திய
ஓவியங்கள் ரவி வர்மாவுக்கு முன், ரவி
வர்மாவுக்குப் பின் என்று
வகைப்படுத்தக் காரணமான
யுகபுருஷர் ஆவார். இளம் வயதிலேயே
ஓவிய ஆர்வம் மிகுந்த இவர் தனது
ஓவியப்பயிற்சியை தஞ்சை பாணி
ஓவியத்தில் துவக்கி, பின் மேற்கத்திய
தைல ஓவிய மரபினை தியோடர்
ஜென்சனிடம் பயின்றார். தைல
ஓவிய நுட்பங்களும் முறைகளும்
மேலைநாட்டவருடையது எனினும் இவர்தம்
படைப்புகள் நமது இந்திய
கலாச்சாரப் பண்புகளைச்
சார்ந்துள்ளதைக் காணமுடியும்.
மரபுவழி அறிவும், கலைப்பண்பும் இவரது
ஓவியங்களில் ஏற்படுத்திய தாக்கம்
ஒரு புதிய ஓவிய மரபு துவங்க
அடிகோலியது. நீர்ம
வண்ணங்களாகவும்
கோட்டோவியங்களாகவும் பல
நூற்றாண்டுகளாக நாம்
கண்டுவந்த கடவுள்களையும்
புராணக்காட்சிகளையும் நம்மைப் போல்
நகமும் சதையும் உள்ள இயல்
உருவங்களாக காணச்செய்த
பெருமை இவரையே சாரும்.
1873 இல் வியன்னாவில் நடந்த
ஓவியக் கண்காட்சியில் இவரது
ஓவியங்கள் பங்குபெற்றன. மேலும்
1893-ல் சிகாகோவில் நடந்த வேர்ல்ட்
கொலம்பியன் எக்ஸ்போசிசன்-ல்
மூன்று தங்கப்பதக்கங்களையும்
விருதுகளையும் பெற்றது இவர்
உலகப்புகழ் அடைவதற்கு
காரணமாக இருந்தன.
ரவிவர்மாவின் ஓவியங்களை
மூன்றுவகையாக வகைப்படுத்தலாம்.
உருவச்சித்திரம், உருவச்சித்திரம்
சார்ந்த படைப்புகள், புராண மற்றும்
சரித்திரக்கதைகள் சார்ந்த
காட்சிப்படைப்புகள். இந்தியப்
புராணங்களிலும் இலக்கியங்களிலும்
அவர் கொண்ட நாட்டமும்
மேலும் அவற்றைக் காட்சிப்படுத்த அவர்
கையாண்டிருக்கும் பாங்கும்
தனித்துவமானது. மேற்கத்திய மரபுடன்
பின்னிப்பிணைத்த தன்மையும் மற்றும்
மரபுகளை உடைத்து புதுமைபுகுத்திய
புரட்சியும் வியக்கும் வகையில் இவர்
படைத்த ஓவியங்கள், கிழக்கும் மேற்கும்
சந்திக்கும் களமாக இருப்பதை
அறியலாம்.
ரவிவர்மாவின் ஓவியங்கள் இந்திய
மண்ணில் தனித்துவமான சுவடை
ஏற்படுத்தின. அவர் காலத்தில் இருந்த
அரசர்கள் மற்றும் அரசியர்களை தீட்டிய
உருவச்சித்திரங்கள் இன்றளவும்
உயிர்ப்புள்ளவை. ஒரு நூற்றாண்டைத்
தாண்டியும் அவரது ஓவியங்கள்
புதுப்பொலிவுடன் உள்ளன.
அவர் ஓவியப்பொருட்களைப்
புரிந்துகொண்டு கையாண்ட
விதத்தையும் நாம் இதன்மூலம்
அறிந்துகொள்கிறோம். இவருடைய
ஓவியங்கள் திருவனந்தபுரம்
அருங்காட்சியகத்திலும், மைசூர்
ஜெகன்மோகன் அரண்மனையிலும்,
பரோடா லக்ஷ்மி விலாஸ்
அரண்மனையிலும் மிகுதியாக உள்ளன.
தனிநபர் சேகரிப்புகளிலும் இன்றும்
காணக்கிடைக்கின்றன.
இலக்கியம், புராணங்களிலிருந்து
இவர் ஓவியங்களில் காட்சிப்படுத்திய
நிகழ்ச்சிகள், பின்னர் புராண,
இதிகாசத் திரைப்படங்களுக்கும்
காலண்டர் ஓவியங்களுக்கும்
ஆதாரங்களாக விளங்கின.
இன்றளவும் புராணக் காட்சிகளை
இவரது ஓவியங்கள் வழியாகவே
நாம் சிந்திக்கும் நிலையில் உள்ளோம்.
பெண்மையைக்
கொண்டாடும் பாங்கிலும்
ரவி வர்மா இணையில்லாதவர்.
பிரமிக்க வைக்கும் நுணுக்கங்களை உடைய
ராணி லக்ஷ்மிபாயின் ஓவியம்
ஆகட்டும், அனைவரும் வியக்கும்
அன்னமும் தமயந்தியும், பதற்றம் மிக்க
சைரந்திரியான திரௌபதி, மையலும்
நாணமும் சேர்ந்த மத்ச்ஸ்கந்தா,
தனது மகனை ருக்மாங்கதனிடம்
கொல்லச் சொல்லும்
மோகினி, கவலையும் அழுகையுமாய்
கணவனால் விற்கப்பட்ட சந்திரமதி,
வெகுளியான பால்காரப்
பெண்ணின் நீர்ம ஓவியம்,
கம்பீரமான முகத்துடன் கள் விற்கும்
மலையாளப் பெண் போன்ற பல்வேறு
வாழ்க்கைப் பின்னணியிலுள்ள
பாரதப்பெண்களின் முகங்களை
இயல் ஓவியமாக தீட்டிய பெருமை
இவரையே சாரும்.
இசையும் லயமுமாய் தேசிய
ஒருமைப்பாட்டை தனது கேலக்சி ஆப்
மியூசியன்ஸ் படத்தில்
சித்தரித்துள்ளார். தத்தமது பிராந்திய
உடைகளுடன் பல இசைக்கருவிகளை மீட்டும்
கேரள, தமிழக, மராட்டி மற்றும்
வடக்கிந்தியப் பெண்களை ஒருசேரக்
காணும் வாய்ப்பு எவரையும் கவரும்
வண்ணம் உள்ளது.
இவரது ஓவியங்கள்
தொடர்பாக பல
விமர்சனங்கள் இருப்பினும், மிக
முக்கியமான முன்னோடியாகவும்,
பிதாமகராகவும் ராஜா ரவி
வர்மா இருக்கிறார்.
மங்கலப் பொருட்களாகவும்
வழிபாட்டுக்குரியதாகவும் விளங்கும்
இவரது தெய்வ உருவப்படங்கள்
அனைவரது இல்லங்களிலும் முதன்மை
பெற்றபின் மரபு வழி
ஓவியக்கடவுள் உருவங்கள்
காணாமல் போனதில் வியப்பில்லை.
பலரது இல்லங்களிலும் இன்றளவும்
சரஸ்வதி பூஜை அன்று ஏடு அடுக்கி வழிபட
நமக்கு கலைமகள் படம் அளித்த
தலைமகன் போற்றுதலுக்குரியவர்.

........
ஓவியங்கள் என்றால் மேற்குலகம் தான்
தனித்துவமானது என்கிற எண்ணம் பலருக்கு
இருந்தது. அப்பொழுது இந்தியாவின்
ஓவியக்கலையின் கம்பீரத்தை காட்டுகிற
அருஞ்செயலை இவர் செய்தார்
.கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ.
தொலைவிலுள்ள கிளிமனூர்
அரண்மனையில் உமாம்பா தம்புராட்டி,
நீலகண்டன் பட்டாதிரிபாதி எனும் அரச
குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக
பிறந்தார் இவர் .வீட்டில் இசை ஓவியம் என
ஒவ்வொரு துறையிலும்
ஒவ்வொருவர் சிறந்து விளங்கினார்
இவருக்கு ஓவியக்கலையின் மீது எல்லையில்லா
ஆர்வம் வருவதற்கு இவரின் மாமாவான
ராஜா ராஜவர்மா காரணம் .அவரிடம்
ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார்
.தஞ்சாவூர் ஓவியக்கலையை அவர் இவருக்கு
பயிற்றுவித்தார் .இந்திய ஓவியங்களில் ஒரு
சிக்கல் அதில் உபயோகிக்கப்படும் வண்ணங்கள்
.மரம், இலை, பூக்கள், கற்கள் ஆகியவற்றில்
இருந்து பெறப்பட்ட வண்ணங்கள்
ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டன
.ஓவியங்கள் காலப்போக்கில் மங்குவது
இதனால் நடக்க ஆரம்பித்தது.
வாட்டர் பெய்ண்டிங் முறையை ராமசாமி
நாயுடு கற்றுத்தந்தார் .தைலவண்ண
ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை
தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி
நாயுடுவிடமும் அறிந்து
கொண்டார்.அப்பொழுது
மேற்சொன்ன வண்ண சிக்கல்
எழுந்ததை கண்ட ரவிவர்மா ஆயில்
பெய்ண்டிங் பற்றி கேள்விப்பட்டார்
.அதைப்பற்றி தெரிந்த ஒரே நபரான மதுரையை
சேர்ந்த ராமசாமி நாயக்கர் அதை
சொல்லித்தர மறுத்துவிட்டார்
.அவரின் சீடர் ஆறுமுகம் பிள்ளை இரவோடு
இரவாக இவருக்கு அதன் நுணுக்கங்களை
சொல்லிவிட்டு போனார்
தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய
ஓவியரிடம் "ஆயில் பைன்டிங்" (oil painting)
எனப்படும் எண்ணெய் கலந்த
வண்ணக்கலவை கொண்டு ஓவியம்
வரையும் கலையைக் கற்றார்.பின்னர்
இந்தியாவின் இதிகாசங்களை தன்னுடைய
ஓவியத்தில் காண்பிக்க ஆரம்பித்தார்
.தமயந்தி,துஷ்யந்தன், தூது சென்ற
கிருஷ்ணர், ரிஷிகன்யா ஆகிய ஓவியங்களை
என எண்ணறற புராண
கதாபாத்திரங்களை அவர்
ஓவியமாக்கினார்
இந்தியாவின் செறிவான
வண்ணங்கள் அழகியல் ஆகியவற்றோடு
எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஐரோப்பிய முறையை
கலந்து கொண்டார் .இயல்பான
இயற்கை சூழலில் இந்திய தெய்வங்களை
அவர் வரைந்தது பலரைக்கவர்ந்தது .அவரின்
ஓவியங்களில் தெய்வங்களை கோயில்களில்
இருக்கும் சிலையைப்போல வரைவதை அவர்
தவிர்த்தார் .சேலை அணிந்த அழகிய
தென்னிந்திய பெண்களை
மாதிரியாக கொண்டு
தெய்வங்களை வரைந்தார்
வியன்னா உலக ஓவிய கண்காட்சியில்,
சிக்காகோ ஓவிய கண்காட்சியில் என உலகம்
முழுக்க தங்க பதக்கங்களை தன்
ஒவியங்களுக்காக அள்ளினார் .ஓவியம்
என்பது ஒருவரோடு போய்விடக்கூடாது
என்பதற்காக ஒலியோகிராபி பிரஸ் ஒன்றை
மும்பையில் ஆரம்பித்தார் .ஒரு சுவையான
சங்கதி பிரண்டிங் மற்றும் சித்திர
செதுக்கல் ஆகியவற்றை செய்து
தந்தவர் இந்திய திரைப்பட துறையின் தந்தை
தாதா சாகிப் பால்கே .இந்தியாவில்
லித்தோபிரஸ் முறையை அறிமுகம் செய்ததும்
இவர் தான் .ராஜா என்கிற பட்டத்துக்கு
அதிகாரப்பூர்வமாக உரியவர் இல்லை
என்றாலும் இவரின் திறமையை மெச்சி
இவருக்கு கைசர் இ ஹிந்த் பட்டத்தை வழங்கிய
பொழுது ஆங்கிலேய அரசு ராஜா
ரவிவர்மா என அழைத்தது
அவர் எந்த அளவுக்கு பிரபலமாக
இருந்தார் என்றால் அவரின் ஓவியங்களை
கேட்டு வந்த கடிதங்களை பெறுவதற்காகவே
அவர் ஊரில் ஒரு தனி அஞ்சல் நிலையம்
திறந்தார்கள் .நம் வாழ்வில் ராஜா
ரவிவர்மா நீக்கமற கலந்து இருக்கிறார்
எப்படி என்கிறீர்களா ?இன்றைக்கும் நம்
காலேண்டர்களில் பார்க்கும் லக்ஷ்மி,
சரஸ்வதி, பரமசிவன், விஷ்ணு, விநாயகர்
எல்லாமும் இவரின் ஓவியங்களே அல்லது
அவரின் தாக்கத்தில் எழுந்தவை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக