ஞாயிறு, 2 அக்டோபர், 2016

விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம் அக்டோபர் 4,

விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம் அக்டோபர் 4,

திருப்பூர் குமரன் ( அக்டோபர் 4, 1904 - ஜனவரி
11 , 1932 ) இந்திய விடுதலைப் போராட்ட
தியாகி ஆவார். இவர் ஈரோடு
மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில்
பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு
இயக்கம் மீண்டும் தொடங்கிய போது
தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய
நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற
உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு
செய்த மறியல் போராட்டத்தில்
தீவிரமாகப் பங்குகொண்டு, 1932
ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று
கையில் தேசியக் கொடியினை ஏந்தி,
தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று,
அணிவகுத்துச் சென்றபோது
காவலர்களால் தாக்கப்பட்டு
தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய
தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி
விழுந்து, பின்னர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.  ஜனவரி 11 இல்
உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் .
இதனால், கொடிகாத்த
குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இளமைப்பருவம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை
அருகிலுள்ள செ.மேலப்பாளையம்
என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி,
நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு
முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப
சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை
ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக்
கொண்டார். கைத்தறி
நெசவுத் தொழிலை செய்து
வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில்,
14 வயது ராமாயியை மணம் முடித்தார்.
கைத்தறி நெசவுத் தொழிலில்
போதிய வருமானம் இல்லாததால்,
மாற்றுத் தொழில் தேடி திருப்பூர்
சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி
கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும்
பணியில் சேர்ந்தார். காந்தி
கொள்கையில் அதிக ஈடுபாடு
கொண்ட குமரன், நாட்டு
விடுதலைக்காக காந்தி அறிவித்த
போராட்டங்களில் எல்லாம் கலந்து
கொண்டார்.
இறுதி ஊர்வலம்
ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல்
மருத்துவமனையில் அதிகாலையில்
உயிரிழந்தார். பொதுமக்கள்
அவரது இறுதி ஊர்வலத்தில்
பங்குகொண்டனர். முதலில்
அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன்
தேசத்தின் பொதுச்சொத்து
என்று கூறி ராஜ கோபால அய்யர்,
மாணிக்கம் செட்டியார்,
வெங்கடாசலம் பிள்ளை என பலரும்
இறுதிச் சடங்கான கொள்ளி
வைத்தனர்.
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர்
வந்த மகாத்மா காந்தி, அவரது
குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன்
குடும்பத்தினருடன் அவ்வப்போது
தொடர்பு கொண்டு
விசாரிப்பார்.
துணைவியார்
இவரது துணைவியார் ராமாயி
அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் உயிர் நீத்தார். [4]
நினைவகம்
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன்
தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில்
திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை
அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல்
நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று
செயல்பட்டு வருகின்றது. மேலும்
இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின்
படங்கள் வரைந்து பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தபால் தலை
இவரது நூறாவது பிறந்த நாளைச்
சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல்
சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய
அரசால் வெளியிடப்பட்டது.
..........................................
கொடி காத்த குமரன்
..........................................
இந்தியரை அடிமைப்படுத்திய
வெள்ளையரிடமிருந்து உரிமை
பெறுவதற்காக 1930ம் ஆண்டு
காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகப்
போராட்டத்தை அறிவித்தார்.
உப்பு இல்லாமல் மனிதன் உயிர்
வாழ முடியாது. அது கடற்கரையில்
தானாக விளைகிறது. கடல் நீரை
பாத்திகளில் தேக்கி வைத்து, கதிரவனின்
வெம்மையால் உலர்த்தி
தயாரிக்கப்படுகிறது. இயற்கை நமக்கு
இலவசமாகக் கொடுத்துவரும்
உப்பை ஆங்கில அரசாங்கம் தனதாக்கிக்
கொண்டு அதற்கும் வரி விதித்தது.
வரி செலுத்தியவருக்கே உப்பு எடுக்கும்
உரிமை உண்டு.
இதைக்கண்ட காந்தியடிகளின் “உப்புக்கு
வரி போட்டது தவறு. நீருக்கும் காற்றுக்கும் வரி
போட்டால் நாம் ஒப்பமாட்டோம். உப்புக்கு
வரி போட்டதை நாம் அற முறையில் எதிர்ப்போம்”
என்று அறிவித்தார்.
காந்தியடிகள் அறிவிப்பு மக்களை
வீறுகொள்ளச் செய்தது.
மக்கள் ஆங்காங்கே அச்சட்டத்தை எதிர்க்கத்
திரண்டு வந்தனர். “உப்பு விளையும்
கடற்கரையில் உப்புச் சட்டத்தை மீறி
உப்பெடுப்போம். அதோடல்லாமல் மற்ற
இடங்களிலும் உப்பு மண்ணை நீரில் கரைத்துக்
காய்ச்சி உப்புச் சட்டத்தை அமைதியான
முறையில் எதிர்ப்போம். முதலில் நான்
இச்சட்டத்தை மீறுகிறேன். அதன் பிறகு நாடு
முழுவதும் என்னைப் பின்பற்றி
உப்புச்சத்தியாகிரகம் செய்யுங்கள்”
என்று அறிவித்து தண்டி என்னுமிடத்தில்
உப்பளத்தை நோக்கி தொண்டர்களுடன்
சென்று சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சிட
முயன்றார்.
தமிழகத்தில் வேதாரண்யத்தில்
இராஜாஜியும், சென்னைக்
கடற்கரையில் ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு
என்ற தலைவரும், தொண்டர்களும்
உப்புச் சட்டத்தை மீறினார்கள். தமிழகம்
முழுவதும் உப்புச் சத்தியாகிரகம்
தீவிரமாகவும், வலுவாகவும்
நடைபெற்றது.
இந்தியா முழுவதிலும், தமிழகம் எங்கும்
நடைபெற்ற உப்புச் சட்ட எதிர்ப்புப்
போராட்டம் திருப்பூரிலும் நடைபெற்றது.
கொடி காத்த குமரன் என்று
பெருமையுடன் அழைக்கப்படும்
தியாகியின் வரலாறு
எழுச்சியூட்டுவதாகும். அப்போதைய கோவை
மாவட்டம், தற்போது ஈரோடு மாவட்டம்,
சென்னிமலை என்ற சிறு நகரில் ஒர் ஏழை
நெசவாளர் குடும்பத்தில் 1904ம்
ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாச்சிமுத்து
முதலியாருக்கும், கருப்பாயி என்பவருக்கும்
புதல்வனாக குமரன் பிறந்தார்.
குமரன் பள்ளியில் கல்வி மீது மிகவும்
நாட்டம் கொண்டு படித்தார்.
ஆனால் பெற்றோரின் வறுமை அவருடைய
கல்விக்குத் தடை விதித்தது. ஐந்தாம் வகுப்போடு
குமரனின் கல்வி முடிந்துவிட்டது.
பெற்றோர் தம் பிள்ளைக்குச் சூட்டிய
பெயர் குமாரசாமி என்பதாகும்.
அப்பெயர் அவ்வருமைப் பிள்ளை விடுதலைப்
போரில் ஈடுபட்டு அமரன் ஆன பின்னர்
“குமரன்” என்று மாறியது.
பள்ளிப்படிப்பைக் கைவிட்ட குமரன்
பள்ளிப்பாளையத்திற்குச் சென்று
நெசவுத் தொழிலில்
ஈடுபட்டார் குமரன். பட்டுச் சேலை
நெய்வதில் சிறந்த நிபுணராக
விளங்கினார். பின்னர் தமது
சொந்த ஊரான
சென்னிமலைக்கு வந்து
அத்தொழிலைச் செய்து
குடும்பத்தின் வருவாயைப்
பெருக்கினார். குமரனுக்கு 19 வயதில்
இராமாயி என்னும் பெண்ணைத்
திருமணம் செய்து வைத்தனர்
பெற்றோர்.
குமரனின் குடும்பம் நெசவுத்
தொழிலில் இருந்து கிடைத்த
வருமானம் போதாமல் வறுமையில் உழன்றது.
வேறு வேலை தேடும் நோக்கத்தூடன் ஈரோட்டிற்குச்
சென்றார். அங்கு பல
நிறுவனங்களில் வேலை கேட்டும் வேலை
கிடைக்காமல், திருப்பூரில் பஞ்சு
வியாபாரக்கடையில் வேலை செய்தார்.
பின்னர் எடை பதிவு செய்யும்
குமாஸ்தா வேலை
கொடுக்கப்பட்டது. அதையும் திறம்பட
செய்தார். குமரன் தமக்கு
கொடுக்கப்பட்ட வேலையின்
பொறுப்பு நிலையுணர்ந்து,
முதலாளிக்கு நட்டம் ஏற்படாத வகையில்
மிகவும் கவனித்து எச்சரிக்கையாகப்
பணியாற்றி வந்தார்.
குமரன் தமிழ்மறையான திருக்குறள் மீது
ஆர்வம் கொண்டு பயின்றார்.
குமரன் எப்போதும் சுத்தக் கதராடையையே உடுத்தி
வந்தார். நாள்தோறும் கைராட்டையில் நூல்
நூற்று வந்தார்.
குமரனுக்கு வீர உணர்வையும், தியாக
உணர்வையும் எவரும் ஊட்டவில்லை அது
அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில்
இராஜாஜி தலைமையில் நடைபெற்ற
உப்பு சத்தியாகிரகத்தில்
கலந்துக்கொள்ளத் துடித்தார்.
ஆனால் அவரது பெற்றோர்களும்,
முதலாளியும் தடுத்து விட்டனர்.
அப்பொழுது நடைபெற்ற
போராட்டம் உப்புச் சட்டத்தை மீறுதல் என்ற
அளவில் நின்றுவிடவில்லை. நாடு முழுவதும்
பரவியது. அப்போராட்டம் நிலவரி
கொடா இயக்கமாகவும்
வளர்ந்தது. மதுபானக் கடைகள்,
அயல்நாட்டுத் துணிக்கடைகள் முன்பு மறியல்
போராட்டங்களும் நடைபெற்றன.
போராட்டத்தின் விளைவால் ஆங்கிலேயர்
ஒப்பந்தம் போட முன் வந்தனர். அதுதான்
காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஆகும். அந்த
ஒப்பந்தத்தின் மூலம் உப்புவரி நீக்கப்பட்டது.
இர்வின் பிரபு தனது பதவிக்காலம்
முடிந்து இங்கிலாந்துக்குச்
சென்றுவிட்டார். அவருக்குப் பிறகு
ஆங்கில அரசின் பிரதிநிதியாக
ஏகாதிபத்திய வெறி பிடித்த
வெல்லிங்டன் பிரபு என்பவர் பதவி
ஏற்றார். அவர் இந்திய விடுதலைப்
போராட்டத்தை வெறுப்பவர். இந்திய
மக்களுக்கு இம்மியளவும் உரிமை
கொடுக்கக்கூடாது என்ற
கொள்கை உடையவர். எனவே காந்தி
– இர்வின் ஒப்பந்தத்தை
கிழித்தெறிந்தார். ஒப்பந்தம் மூலம்
வழங்கப்பட்ட உரிமைகளைப் பறித்தார்.
அந்த சமயத்தில் லண்டனில் நடந்த
வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள்
கலந்து கொண்டு இந்திய
விடுதலைக்கான கருத்துக்களை முன் வைத்தார்.
ஆங்கில ஏகாதிபத்தியம் அவற்றை ஏற்றுக்
கொள்ளவில்லை.
இந்தியா வந்த பின்னர் காந்தியடிகள்
கைது செய்யப்பட்டார். அவரைத்
தொடர்ந்து நேரு, வல்லபாய் படேல்
போன்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுதந்திரப் போரில் இரண்டில் ஒன்றைப்
பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக்
கொண்டிருந்த
தொண்டர்களும்,
பொதுமக்களும் தலைவர்களின் கைது
செய்தியைக் கேள்விப்பட்டவுடன்
கொதித்தெழுந்தனர். மீண்டும்
சட்டமறுப்பு மறியல்கள் கடுமையாக
நடைபெற்றன. போராட்டத்தை ஆங்கிலேய
அரசு கண்மூடித்தனமாக அடக்கு முறைகளை
மேற்கொண்டு ஒடுக்க முயற்சித்தது.
தமிழகம் முழுவதும் போராட்டம்
தீவிரமடைந்தது. திருப்பூரில் தேசபந்து வாலிபர்
சங்கத்தினர் மறியல் நடத்துவதற்கான
ஏற்பாட்டைச் செய்தனர். குமரன் அதை
அறிந்து அச்சங்கத்தினருடன் இணைந்து
செயல்படத் துணிவு
கொண்டார். குடும்பத்தினர்களும்
நண்பர்களும் தடுத்தும் குமரன்
போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு
செய்துவிட்டார். குடும்பத்தைப் பற்றியும்,
மனைவியைப் பற்றியும் கவலைப்படாமல் தேச
விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு
பெறவும், குண்டாந்தடிகள்
தாக்கினாலும், குண்டுகள் நெஞ்சைப்
பிளந்தாலும், கொடுஞ்சிறையில்
அடைக்கப்பட்டாலும், செத்து
மடிந்தாலும் கவலை இல்லை, இந்தியாவின்
விடுதலையே தனது இலட்சியம் என்று உறுதி
கொண்டார்.
மறியல் போராட்டத்தில் கலந்து
கொள்ளச் செல்லும் முன்பு
குமரன் தன் தாயாரிடம் வணங்கி, ஆசி
கூறி அனுப்பும்படி வேண்டினார். மகனை
அனுப்ப விருப்பம் இல்லாத தாய்
கருப்பாயி, ஒருவாறு மனதை
தேற்றிக்கொண்டு மகனின்
உணர்ச்சியைக் கண்டு கண்ணீருடன் ஆசி கூறி
அனுப்பினார்.
திருப்பூரில் மங்கள விலாஸ்
மாளிகையின் முன்பு கூடினார்கள் மறியல்
போராட்ட வீரர்கள். அவர்களை மாதரசிகள்
மனங்கனிந்து முன்வந்து ஆரத்தி எடுத்து,
திலகமிட்டு, வாழ்த்தி வழி அனுப்பினர்.
“உடல், பொருள், ஆவி” என்ற
மூன்றையும் இந்திய தேச விடுதலைப்
போராட்டத்தில் இழந்தாலும் சரி என்று
போராட்டக்களம் நோக்கி புறப்பட்டனர்.
பின்னர் குமரன் என்று வழங்கப்பட்ட
குமாரசாமி தேசியக் கொடியை
கையில் பிடித்துக்கொண்டு
தலைநிமிர்ந்து ஏறுநடை போட்டுச் சென்றார்.
தொண்டர்படை சென்ற
வீதியில் தான் காவல் நிலையம் இருந்தது.
தொண்டர் படையைக் கண்டதும்,
சுமார் 30 காவலர்களும், 2 காவல்
அதிகாரிகளும் தடிகளுடன் காவல்
நிலையத்திலிருந்து ஓடி வந்தனர்.
தொண்டர் படையின் அருகில்
வந்ததும் கண்மூடித்தனமாக சுதந்திரப்
போராட்ட வீரர்களைத் தாக்கினார்கள்.
“கொடியை பிடித்துக்
கொண்டு ஊர்வலம் போவது
சட்டவிரோதமாகும் என்று அறிவித்து
இருக்கிறோம். ஆகையால் அணிவகுத்துச்
செல்வதைத் தடை செய்கிறோம். கலந்து
போய்விடுங்கள். இல்லையென்றால்
வன்முறையைக் கையாண்டு உங்களைச் கலைக்க
முற்படுவோம்” என்று எச்சரிக்கை ஏதும்
செய்யாமல் காவலர்கள் எடுத்த
எடுப்பிலேயே தடியால் தாக்கினார்கள்.
தொண்டர்கள் காவலர்களுக்கு
எவ்விதத் துன்பமும் செய்யவில்லை.
தடியால் வெறிநாயை அடிப்பது போல்
அடித்தார்கள். அதன் மூலம் சுதந்திர
உணர்வை, ஆர்வத்தை அழித்துவிடலாம் என்று
நினைத்தார்கள். தடியால் கடுமையாகத்
தாக்கியதுடன், தொண்டர்களின்
கரங்களிலிருந்து தேசியக் கொடியைப்
பிடுங்கி எறிந்தனர். காவலர்கள் தாக்கிய
போதும், குமரன் தனது கையில் பிடித்திருந்த
தேசியக் கொடியை காவலர்களிடம்
பறிகொடுக்காமல்
கெட்டியாகப் பிடித்திருந்தார்.
காவலர்கள் குமரனின் கரங்களிலிருந்து
பலவந்தமாக தேசியக்கொடியை
பிடுங்கி எறிந்தனர்.
குமரனும், இராமன் நாயர் என்ற
தொண்டரும் நினைவிழந்து இரத்த
வெள்ளத்தில் கிடந்தனர். அரசாங்க
மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். காவலர்களின்
தாக்குதலால் குமரனின் மண்டை சிதறி மூளை
பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால்
மருத்துவர்களால் காப்பாற்ற
முடியவில்லை. 11.01.1932 அன்று குமரனின்
உயிர் பிரிந்தது. குமரனின் இறுதி ஊர்வலம்
காவல்துறையால் மிகவும் இரகசியமாக
வைக்கப்பட்டு, மக்கள் கலந்து
கொள்வது தடுக்கப்பட்டது.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு
தனது இன்னுயிரை ஈந்த தியாகி குமரனை
'கொடிகாத்த குமரன்' என்று தேசம்
போற்றுகிறது. குமரனின் தியாகம் போற்றுவோம்!
அவர் புகழ் பரப்புவோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக