செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.



தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.

சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ்
நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில்
இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.

இளமைக் காலம்

ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார்.
இலண்டனில் இருந்தபடியே
சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா,
தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின்
சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
பத்திரிகைப் பணி
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில்,
தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச்
சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி , சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே
தினத்தூது , தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ்
ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
அரசியலில் ஆதித்தனார்
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி
சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து,
இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.

மறைவு

இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.


'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார்

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.
தந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். லண்டனில் படிக்கும் போதே நிருபராக பணியாற்றி படிப்புச் செலவிற்கு பணம் சம்பாதித்தார். சுதேசமித்திரன் இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் லண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு லண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் இவரே. லண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.
லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஓ. ராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது, நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி. பா. ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச் சுற்றி வந்தது. அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ் நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார். “ அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன மிஞ்சும் ? இருப்பதும் போய்விடும் ” எனக் கூறி இதழ் நடத்துவதை தடுத்தார். ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும் ஒத்துக் கொண்டார்.
முதன் முதலில் 'மதுரை முரசு' என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, 'தமிழன்' என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதல் தான்
.
மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் , கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள். ஆதித்தனார் "மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.
அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி 'மதுரை முரசு' இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில் நாட்டின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ் நடையில் விளக்கினார். "ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்" என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார்.
பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப் படங்கள் இவற்றைக் கையாண்டார். அரசியல் , பொருளாதாரம், வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழக மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உதவினார்.
தமிழகத்தில் இன்று 'தினத்தந்தி' நாளிதழ் 12 நகரங்களிலிருந்தும், புதுச்சேரி, மும்பை , பெங்களுர் முதலிய பெருநகரங்களிலிருந்தும் வெளி வருகிறது. பட்டித்தொட்டியெங்கும், ஊர்தோறும் தினத்தந்தி நாளிதழ் பரவி பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. மேலும், தினத்தந்தி குழுமத்திலிருந்து தினத்தந்தி, மாலை முரசு, ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ் போன்ற வார, மாத இதழ்களும் வெளியிடப்படுகிறது.
சி.பா. ஆதித்தனார் 1942 முதல் 1953 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டார். 'தமிழ்ப்பேரரசு' என்னும் நூல் மூலம் தமிழின முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டியவைகளை வலியுறுத்தினார்.
1942 ஆம் ஆண்டு 'தமிழரசுக் கட்சி'யைத் தொடங்கி நடத்தினார். பின்பு. 1958 ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' இயக்கத்தையும் தொடங்கி செயல்படுத்தினார்.
1960 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். அதே போன்று 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி. மு. க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றது முதல் சட்ட மன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராக பணியாற்றினார்.
திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா. ஆதித்தனார் 'இதழாளர் கையேடு' என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல் இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.
'உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா. ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானர். அவரது புகழ் இதழியல் உள்ளவரை நிலைத்து நிற்கும்.


ஒரு மொழி ஒரு நாடு-தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்...

1. கேள்வி:
திராவிடர்கள் யார்?
பதில்: திராவிடர்கள் என்போர்
தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம்,
கலிங்கம், தெலுங்கானம் ஆகிய
மூன்று தெலுங்கு நாடுகளில்
வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே
திராவிடர்கள்.
2.கேள்வி:
திராவிடர் என்ற சொல்லைத்
தமிழர்களுக்குப் பயன்படுத்துவது
பொருந்துமா?
பதில்: பொருந்தாது. 1875ஆம்
ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல்
தெலுங்கர்களை மட்டுமே குறித்து
வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல்
என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய
புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை
மட்டுமே குறிப்பிட்டு வந்த ‘திராவிடர்’
என்ற சொல்லைத் தமிழர்களைக்
குறிப்பதற்கும் பயன்படுத்தப்
போவதாகத் தெரிவித்து அதன்படியும்
எழுதினார்.
அவர் கையாண்டது தவறான கருத்து.
ஏனென்றால் முன் காலத்தில் இருந்து
மூன்று தெலுங்கு நாடுகளைத் தான்
திரிவடுகம் என்றும், திராவிடம்
என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள்.
திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே
வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச்
சொல் பொருந்தும் என்று கால்டுவெல்
எழுதியது தவறான கண்ணோட்டம்.
அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று
குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற
சொல்லைப் பயன்படுத்தியதும்
தவறாகும்.
தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும்.
திராவிடன் என்பது தமிழ்ச்
சொல் அல்ல. வடவர்கள்
தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.
3.கேள்வி:
திராவிடம் என்று பழந்தமிழ்
இலக்கியத்தில் இருக்கிறதா?
பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும்
திராவிடம் என்ற சொல் கிடையவே
கிடையாது. அந்தச் சொல்லை முதன்
முதலில் பயன்படுத்திய கால்டுவெல்
என்கிற வெள்ளைக்காரர் வட
மொழியியிலிருந்து தான் திராவிடம்
என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக்
கூறியிருக்கிறார்.
4.கேள்வி:
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட
நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு
இருக்கிறாரே?
பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும்
‘திராவிடம்’ என்ற சொல்லைத் தான்
நான் கையாண்டேன் என்று
கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர்
எழுதியுள்ளார். அதற்குப் பிறகு
சுந்தரம் பிள்ளை எழுதிய
மனோன்மணீயம் இன்றைக்கு 70
ஆண்டுகளுக்கு முன்பு
எழுதப்பட்டதாகும்.
5.கேள்வி:
இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில்
கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத்
தாங்கள் மறுப்பது ஏன்?
பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த
இலக்கியத்திலும் திராவிடன், திராவிட
நாடு என்ற சொற்களே இல்லை. மிக
அண்மைக் காலத்தில் அந்நியர்களால்
எழுதப்பட்ட நூல்களில் தான்
திராவிடம் என்ற சொல்
காணப்படுகிறது.
6.கேள்வி:
தெலுங்கு, மலையாளம், கன்னடம்
ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த
மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி
ஒன்றுபடக் கூடாது?
பதில்: கல்தோன்றி மண் தோன்றக்
காலத்தே வாளோடு முன்தோன்றிய
இனம் தமிழினம். தமிழ்மொழி தான்
உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும்.
அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா?
ஒரு மொழி ஒரு நாடு
என்பது தான் உலக நியதி…
சிவபாரதி எழுதிய ‘தமிழர்
தந்தை சி.பா.ஆதித்தனார்’
நூலிலிருந்து…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக