வியாழன், 28 செப்டம்பர், 2017

உலக வெறி நாய்க்கடி நோய் நாள் செப்டம்பர் 28.


உலக வெறி நாய்க்கடி நோய் நாள் செப்டம்பர் 28.

வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் ( Rabies ) என்பது மனிதர் ,
விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய்க்காரணிகளுள் ஒன்றான ரேபீஸ் தீநுண்மத்தால் (rabies virus),
இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளில் ஏற்படும் மூளையழற்சி
நோய் ஆகும். பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு
தொற்றுநோய் ஆகும்.

நோய் பரவல்

காடுகளில் வாழும் சிலவகை வௌவால் ,
நரி, ஓநாய் , மற்றும் வீட்டு விலங்கான
நாய்போன்ற ஒரு சில விலங்குகளின் உடலில் வழக்கமாய் வாழும் இந்த வைரசு, அவ்விலங்குகள் கடிப்பதால் நேரடியாகவோ, அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் கடிப்பதாலோ இந் நோய் ஏற்படுகிறது. கொல்லைப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கான நாயிலிருந்தே இந்நோய் பொதுவாக மனிதர்களுக்குப் பரவுகின்றது.
இந்த வைரசு அதிக அளவாக ஐந்து ஆண்டுகள் வரை 'உறக்கத்தில்' இருந்துவிட்டுக் கூடத் தாக்கலாம் .

நோயின் தன்மை

மூளையழற்சி ஏற்படுத்தி, மைய நரம்பு மண்டலத்தைக் கடுமையாகப் பாதித்து, பின்னர் மூளையையும் பாதித்து இறுதியில் மரணத்தை விளைவிக்கும் இந்த தீநுண்மம், உமிழ்நீரில் அதிகமாக வாழ்ந்து கொண்டு, இந்நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களைக் கடிக்கும்போதோ ,ஏற்கனவே உள்ள ஆறாத காயத்தில் உமிழ்நீர் படுவதாலோ மிக எளிதாக மனிதரின் இரத்தத்தில் கலந்துவிடுகிறது.

நோய் தடுப்பு

இந்த வைரசால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விலங்கு கடித்துவிட்டால் உடனடியாக நோய்த்தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். முதலிலேயே சரியான தடுப்பு மருந்து (anti-rabies vaccine-ARV) பயன்படுத்துவதன் வாயிலாக வீட்டு விலங்குகளை இந்நோய் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


வெறிநாய்க் கடி அசட்டை வேண்டாம்

ராபிஸ் உயிர் பலி எண்ணிக்கையில் ஆசிய அளவில் இந்தியா முதலிடத்தையும், வங்கதேசம் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. இந்தியாவில் வெறி நாய்க் கடியால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.
ராபிஸ் நோய் தாக்கினால் மரணம் நிச்சயம். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணத்தை முற்றிலும் தடுக்கலாம். நாய்களுக்கு வரும் இந்த நோய் ராபிஸ் என்றும் மனிதர்களுக்கு ஹைட்ரோ போபியா என்றும் அழைக்கப்படுகிறது.

தடுப்பூசி
முதலாவதும் முக்கியமானதும், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அவசியம் ஏ.ஆர்.வி. தடுப்பூசி போட வேண்டும். 3 மாதக் குட்டியாக இருக்கும்போது முதல் ஊசியும், 6 மாதமாக இருக்கும்போது இரண்டாவது ஊசியும், தொடர்ந்து ஆண்டுதோறும் ஏ.ஆர்.வி. போட்டுவர வேண்டும்.
வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டரின் நினைவு நாளான செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறி நோய் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு முதல் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
முதலுதவி என்ன?
# கடிபட்ட இடத்தில் ஏற்பட்ட காயத்தை நீரும் சோப்பும் இட்டுக் கழுவ வேண்டும்.
# ஏதாவது ஒரு கிருமி நாசினி (டிஞ்சர் அயோடின்) அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.
# காயத்துக்குக் கட்டு போடக் கூடாது.
அறிகுறிகளும் சிகிச்சையும்
வெறி நாய் கடிக்கு ஆளாகும் நோயாளிகளுக்குத் தண்ணீரைக் கண்டால் வலிப்பு, உடல் நடுக்கம் ஏற்படும். லேசான காற்று, ஒலிகூட வலியை உண்டாக்கி விடும்.
வெறி நாய் கடித்தால் தற்போது தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போட வேண்டியதில்லை. Vero Rab என்னும் மருந்தை ஆறு முறை ஊசி மூலம் சதைப் பகுதியில் செலுத்திவிட்டால் போதும். தடுப்பூசி போட்டுக்கொண்ட நேரத்தில் உணவுப் பத்தியம் எதுவும் கிடையாது. கர்ப்பிணிகளும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.
10 நாட்கள் ஏன்?
வெறிநாய் கடித்தவுடன் 10 நாட்கள் அந்த நாய் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது ஏன் தெரியுமா? நாயின் உமிழ் நீரில் இக்கிருமி பெரும்பாலும் காணப்படும். நோயின் குறிகுணங்கள் நாய்க்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அதன் உமிழ் நீரில் இக்கிருமி காணப்படுகிறது. உமிழ் நீரில் நோய்க் கிருமி வந்த பிறகு, சாதாரணமாக ஒரு வாரம்தான் அக்கிருமி உயிருடன் இருக்கும்.
வெறிநாய் என்பதால் 10 நாட்களில் இறந்துவிடும் என்றில்லை. சில சந்தர்ப்பங்களில் அதைத் தாண்டி பல மாதங்களுக்கு நாய் உயிருடன் இருந்தது உண்டு. அதனால் வெறி பிடித்த எந்த நாய் கடித்தாலும் ஏ.ஆர்.வி. ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
நாயைக் கொல்லலாமா?
கடித்த வெறி நாயை உடனே அடித்துக் கொல்லும் பழக்கம் சில இடங்களில் உண்டு. இது முற்றிலும் தவறு. கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வது நல்லது. இறந்த நாயின் மூளையில் Nigri Bodies உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம்.
(உலக ராபிஸ் நாள்: செப். 28).

நாய்க் கடி ஆபத்தானதா?
நாய்க் கடி என்றால், முதலில் நமக்குத் தெரிய வேண்டிய தகவல், அது நல்ல நாயா, வெறிபிடித்ததா என்பதுதான். வெறிபிடித்த நாய் என்றால் பயந்தடித்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சமயத்தில் அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த நாய்க்கு வெறிநோய் ஊசி போட்டிருந்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் பிரச்சினைதான். ஆனால் எப்படியானாலும் நாய்க் கடித்த உடனே அந்த இடத்தை நன்கு கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். உடனடி சரியான சிகிச்சை கட்டாயம் உயிரைக் காப்பாற்றும். நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை; எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம். உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்.. அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். வெறிநோயின் அறிகுறிகள் நம்மிடம் உண்டாகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அது என்னப்பா அப்படி ஒரு ராட்சச வெறிநோய். என்கிறீர்களா?
வெறிநோயின் சுவாரசிய தகவல்கள்..!
 வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய்(Rabies). வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது. ரேபிஸ் (Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும். நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை. மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது.
மனிதர்/பாலூட்டியை குறி வைக்கும் வெறிநோய்..!
வெறிநோய் வெப்ப ரத்த விலங்குகளிடம் மட்டுமே-அதாவது பாலூட்டிகளிடம் மட்டுமே - வருகிறது. அதுவும் விலங்குண்ணிகளிடம் மட்டுமே! நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது, மனிதனிடம் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது. பொதுவாக இந்த வெறிநோய், வெறிநோய் பாதிப்புள்ள ஒரு விலங்கிலிருந்து (அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், ஆடாக இருக்கலாம், மாடாகவும் இருக்கலாம்) இன்னொரு விலங்கை/மனிதரைக் கடிப்பதன் மூலமே வருகிறது. ஆனால் அமெரிக்காவில் வௌவால் & பூனைகள் மூலம் வருகிறது. பொதுவாக் இந்நோய் நரி, ராகூன்(raccoons) ஷங்க்(skunks) ஓநாய் மற்றும் கீரிகளிடம் காணப்படுகிறது.
நாய்க்கடிக்கு சிகிச்சை எப்படி?
 பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், வெறிநாய் கடித்தவுடன்/ நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் உடனடி சிகிச்சை தராவிட்டால் அது உயிர் குடிக்கும் எமனாகவே மாறிவிடுகிறது. வெறி நோய்க்கான வைரஸ் மைய நரம்பு மண்டலத்தையும், முடிவில் மூளையையும் தாக்கி, இறப்பு ஏற்பட பாதை போட்டுத் தருகிறது.
முற்றிய வெறிநோய்!
வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும் வெறிநோய் முற்றிய வெறிநாயாக இருந்தாலும் கூட, கடித்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டு விட்டால் வெறிநோயிலிருந்து நாய் கடித்த நபரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால் வெறிநோயின் வைரஸ்கள் நமது நரம்பைத் தொட்டுவிட்டாலோ/வெறிநோயின் வெளிப்பாட்டு அறிகுறிகள் உண்டாகிவிட்டாலோ, காப்பாற்ற முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி, கெட்டுப் போய், இறுதியில் சாவு ஒன்றுதான் ஒரே முடிவாக இருக்கும்.
நம்மிடையே நிலவும் மோசமான மூடநம்பிக்கைகள்..!
 நம் மக்களுக்கு வெறிநோய் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே அவர்கள் மனம் போனபடி நாய்க்கடிக்கு மருத்துவம்/மாந்திரீகம்/ நாட்டு மருந்து சிகிச்சை என செய்து கடி பட்டவர்களின் உயிரைப் பணயம் வைத்து பலி கொடுக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும்கூட வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் வேதனை. படித்தவர்கள் கூட மூடநம்பிக்கையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். நாய்க் கடித்தவுடன் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சிலர் உடனேயே நல்லெண்ணெய் முட்டை கொடுத்துவிட்டு மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்று மந்திரிப்பார்கள். அவர் என்ன சொல்கிறாரே அதனை மட்டும் வேத வாக்காகக் கேட்பார்கள். அவர் நல்லெண்ணெயில் ஏதோ ஒரு பச்சிலையை பிழிந்து கொடுப்பார். பின்னர் 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் பத்தியமாக இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடுமாம். கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுப்பதிற்காம். சிலர் நாய்க்கடித்ததும், ஏதோ ஒரு மரத்தைக் கடிக்கச் செய்து, அப்படிச் செய்ததும் நாய்க்கடித்த இடத்திலிருந்து பச்சையாக ஏதோ வழியுமாம். நாய்க்கடியின் விஷம் இறங்கிவிடுமாம். இப்படி ஊருக்கு ஊர் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. ஆனால், கடித்த நாய் வெறிநாயாக இல்லாமல் சாதா நாயாக இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். வெறிநாய் என்றால்.. அவ்வளவுதான்...

வெறிநோயின் பயணப்பாதை..!
 வெறிநோய் பற்றிய தகவலே நம் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும். ஆனால் அது பயம் தரும் விஷயம் என்பதற்காக நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? நமது உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? வெறிபிடித்த நாய்க்கடி மூலம் நமக்குள் நுழைந்த வைரஸ், அது எந்த இடத்தில் நுழைந்ததோ அதைப் பொறுத்து, அது உடலுக்குள் வேகமாக நரம்பு மண்டலம் வழியே ஜாலியாகப் பயணம் செய்கிறது. பின்னர் இறுதியாக மூளைக்குள் போய் ஜம் என்று உட்கார்ந்துவிடுகிறது. பின்னர் அது ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது.
வைரஸின் அதிவேக செயல்பாடு!
 மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் அடைந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும். அதனை ஒட்டி இதன் அடைகாப்புக் காலம்(Incubation period) சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், அவ்வளவுதான்.. ! வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் பிரச்சினைகளும் சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, மிகக் குறைந்த நாட்களிலேயே, அதாவது ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.
நோயின் அறிகுறிகள்..!
துவக்க காலத்தில் முதலில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். பின் பொறுக்க முடியாத வலி உண்டாகும். கட்டுகடங்காத உடல் பிரச்சினை, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுக்கும்; ஒழுகும். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். முடிவில் கோமா நிலையாகும். சுவாசிக்க முடியாமையால் உயிர்ப் பிரிதல் நேரிடும்.
வெறிநோய் உருவாக்கும் லைசாவின் தந்திரங்கள்..!
வெறிநோய் வைரசான லைசாவில் உள்ள பிரச்சினை என்னவென்றால், நம் உடலின் படைவீரர்களான இரத்த வெள்ளையணுக்களின் ஒரு பிரிவான லிம்போசைட்டுகளிடம் (Lymphocytes) லைஸா வைரஸ் பெப்பே காண்பித்து நம் உடலுக்குள் நுழைந்துவிடும். பின் அதன் பார்வையிலிருந்து தப்பி மறைந்து வாழும் திறன் உள்ளது இந்த லைஸா வைரஸ். அதனால், இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தாலும், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால், உடலுக்குள் நுழைந்த வைரசுடன், போர்வீரர் வெள்ளையணுக்கள் போரிட முடியாது. எனவே, எந்த தற்காப்பு நடவடிக்கையும் நம் உடலால் எடுக்கப்பட மாட்டாது. உடலுக்குள் லைஸா கொலை வெறியுடன் ஜாலியாய் சுற்றி வரும். லைஸா வைரஸ் நம் உடம்பில் நுழைந்த சில நாட்கள்/வாரங்களுக்குள் (நுழையும் இடத்தைப் பொறுத்து, கால் என்றால் சில மாதங்கள், வயிறு என்றால் சில வாரங்கள் வாய்/கன்னம்/நெற்றி என்றால் 10 நாட்களில் ) வெறிநோயின் அடையாளங்களை/அறிகுறிகளை, உடலில் பதிவு செய்யும். சில சமயம் இந்த வைரசின் அடைகாக்கும் திறன் 7 ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு.
லைஸா வைரசின் தடுப்பூசி கண்டுபிடிப்பு ..!
 லைஸா வைரஸ் எந்த மூலக்கூறு செயல்பாட்டில் (Molicular mechanism ) ஏறிப் பயணம் செய்து தாவிப் பரவுகிறது என்ற தகவல் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒரு முறை வெறிநோய் அறிகுறிகள் வெளிப்படையாய் தெரிய ஆரம்பித்து விட்டால் போதும். நம்மை இந்த உலகில் எந்த மருத்துவராலும், எந்த சக்தியாலும் எந்த வகையிலும் காப்பாற்றவே முடியாது. இந்த வைரஸ் செல்லுக்குள் தனியான வைரஸ் தொழிற்சாலை (Virus factory) உண்டாக்கி, அதில் தன் பெருக்கத்தைச் செய்யும். அதன் பெயர் நைக்ரி துண்டுகள் (Naigri bodies). இதனைக் கண்டுபிடித்தவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த டாக்டர். ஜோசப் லேன்னோக்ஸ் பாவன் என்ற ஒரு பாக்டீரியலாளர்.. (Dr. Joseph Lennox Pawan of Trinidad in the West Indies, a Government Bacteriologist ).இந்த நைகரி உடலை இவர் 1931 ல் வௌவால்களின் மூளையிலிருந்து கண்டறிந்தார்.
லைஸா வைரசின் மோதல்/போர் உடலுக்குள்..!
இந்த வைரஸ் நம் உடலின் இண்டர்பெரானுடன் (interferon) முட்டி மோதி சண்டையிட்டு அதனை தோல்வியுறச் செய்கிறது. உடலின் தற்காப்புத் திறனைக் காலி செய்கிறது. மூளையின் பலவித நடவடிக்கைகளை முடக்குகிறது. அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. பின் நமது உமிழ் நீர் சுரப்பிக்கும் தாவுகிறது. ஏராளமான உமிழ் நீர் கட்டுக்கடங்காமல் சுரக்கிறது. அந்த உமிழ்நீரில் எக்கச்சக்க வைரஸ் இருக்கும். அத்துடன் வாய் மற்றும் கன்னத்திலும் வைரஸ் கோடிக்கணக்கில் வழியும். எனவே நாய் கடித்து 2 நாளிலிருந்து-5 ஆண்டுகள் வரையிலும் வெளியிலேயே தெரியாமல் அடைகாத்து, இது உடலில் தங்கி, பின்னர் அறிகுறி உண்டாகி முடிவில் இறப்பு ஏற்படலாம். பெரும்பாலான பாதிப்புக்குள்ளான பாலூட்டிகள் கடித்த ஒரு சில வாரங்களிலேயே உலகை விட்டு சென்றுவிடும். ஆனால் ஆப்பிரிக்க கீரி மட்டும், இந்த உடல் உபாதைகளோடேயே பல ஆண்டுகள் வாழ்கின்றன.
வைரசின் வாழ்க்கை முறை..!
 வைரசின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வைரஸ் பெருக்கம் செய்ய/உயிர் வாழ கட்டாயமாய் இன்னொரு செல்/உயிர் வேண்டும். வைரஸ் தானே தனியாய் தனித்தியங்கி சுதந்திரமாய் வாழ இயலாது. இன்னொரு செல்/உயிர் கிடைக்கும் வரை வைரஸ் சிவனே என்று காத்துக்கிடக்கும். அந்த காத்திருத்தல் காலம், சில சமயம் 2 ஆண்டுகள்/200 ஆண்டுகள்/2000 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குப்பின்னும் கூட! ஆனால் ஓர் உயிர் மட்டும் கிடைத்துவிட்டால் வைரஸ் டபக்கென்று உயிர்த்தெழுந்து தன் இனத்தை விருத்தி செய்யும்.
உலக நாடுகளில் வெறிநோய் நிலைமை..!
உலகம் முழுவதும் 97% வெறிநோய், நாய்க்கடியிலிருந்துதான் உருவாகிறது. நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். நமக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நம்மை வெறிநாய்க்கடியிளிருந்து 3 ஆண்டுகள் தப்பிக்கலாம். அமெரிக்காவில் விலங்குகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மூலம் வீட்டு நாய்களுக்கு வெறிநோய் வருவது கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட அமெரிக்காவில் வௌவால், பூனை மற்றும் ராகூன் மூலம் வெறிநோய் வருகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளில் வெறிநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நோய் வௌவால் மூலம் காற்றின் வழியே பரவுகிறதாம்.
வெறிநோய் இறப்பின் தகவல்கள்..!
 வெறிநோய் இன்று சுமார் 150 நாடுகளுக்கு மேல் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெறிநாய் வாழும் இடங்களில்/வெறிநோய் வரும் வாய்ப்புள்ள இடங்களில் சுமார் 330 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்டுதோறும் 55,000௦௦௦ மனித உயிர்களைப் பலி வாங்குகிறது வெறிநோய். இந்த இறப்புகளில் 90% ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் நிகழ்கிறது. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்தில் 20,000 பேர் வெறிநோயினால் இறக்கின்றனர். இது உலகில் ஏற்படும் வெறிநோய் சாவுகளில் 36% ஆகும். இறப்பு நிகழ்வில் 40% வெறிநோய் இறப்புக்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. இவர்களும் கடித்த நாய், வெறிநோய் வந்த நாய் என்று தெரியாமலே கடிபட்டு, பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஒரு விஷயம் என்னவென்றால் இந்த வெறிநோய் வியாதி முற்றும் வரை வெளியே தெரியாமல் கமுக்கமாய், அடக்கமாய் உடலுக்குள்ளேயே இருக்கும். வெறி முற்றிய பின்தான் அதன் அறிகுறிகள் வெளியே வெளிப்படும்.
வெறிநோயிலிருந்து காப்பாற்றப்படும் மனித உயிர்கள்..!
 ஒவ்வொரு ஆண்டும், உலகில் சுமார் 1 1/2 கோடிப்பேர், நாய்க்கடிக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் 32,700 இறப்புக்கள் தடுக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தெரு நாய்கள் மூலமும், சில சமயம் வளர்ப்பு நாய்கள் மூலமும் வெறிநோய் உண்டாகிறது.
வெறிநோயின் ஆதிகால சரித்திரம்...!
 வெறிநோய் பற்றிய தகவல் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக பதிவுகள் சொல்கின்றன. கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வெறிநோய் பற்றிய பதிவுகளை களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மனிதன் எப்போது நாய் வளர்க்கத் தொடங்கினானோ அப்போதே, வெறிநோய் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தவகல்கள் சொல்லுகின்றன. மனிதனுக்கு நாயுடன்தான் முதலில் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் ஆதாரமாக, இஸ்ரேலில் ஒரு பெண்ணின் உடலுடன் ஒரு நாயும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மம்மி கிடைத்துள்ளது. இதன் வயது சுமார் 12,000 வருடங்கள். ஆனாலும் கி.மு 1930களில் எஷ்னுன்னாவின் கோடக்சில்(Codex of Eshnunna)தான் வெறிநோய் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கியூநிபாரம் எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் சொந்தக்காரருக்கு எப்படி வெறிநோய் அறிகுறிகள் உருவாயின என்றும், அதற்கான தடுப்பு முறைகளும் கூட கூறப்பட்டுள்ளன. அதன் பின்னர் கி.மு 800-700௦௦களில் ஹோமர் பாதிப்பு வந்த நாய் பற்றி எழுதி உள்ளார். கி.மு 420களில் கிரேக்க தத்துவஞானியும் வீட்டு விலங்குகளில் வெறிநோய் வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். கி.மு. 400ல் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில் நாய்கள் நோயினால பைத்தியம் பிடித்து திரிந்ததாகவும், அவை எரிச்சலோடு மற்ற விலங்குகளை கடித்ததாகவும் எழுதியுள்ளார்.
வெறிநோய்த் தடுப்பு மருந்தும் உயிர் காத்தலும்!
பொதுவாக மனித வெறிநோய் இறப்பு என்பது 1885ல் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தடுப்பு மருந்தை/ செயற்கை எதிர் உயிரியை 1885ல் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) & எமைலி ரௌக்ஸ் (Emile Roux) என்ற இரு விஞ்ஞானிகளும் இணைந்து வெறிநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஏற்கனவே வெறிநோய் வந்து இறந்த ஒரு முயலின் மூளையிலிருந்து செல்களை எடுத்து, அதிலிருந்தே இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர். இந்த வகையில் செத்துப்போன வைரஸிலிருந்து தயாரிக்கும் மருந்துதான், புதிய வகையில் நவீனமாய் வளர்த்து தயாரிக்கும் மருந்தைவிட மலிவாக இருக்கிறது.
முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வெறிநாய் கடித்தால் 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். அந்த ஊசியின் வலி பிராணன் போய்விடும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான். வலியும் அவ்வளவாக இருப்பதில்லை. முதல் 2 ஊசி ஒரு வார இடைவெளியிலும், கடைசி ஊசி 3 வாரத்துக்குப் பின்னும் போடுவார்கள்.வெறிநோய்த்தடுப்பு ஊசி சுமார் 3 வருடங்களுக்கு வெறிநோயிலிருந்து பாதுகாப்புத் தரும்.

வெறிநோய்க்கான சிகிச்சை எப்படி?
முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். பின் தடுப்பூசிகளை போடவேண்டும். ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin) போடவேண்டும். பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம். 4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம். வெறிநாயின் வெறிநோய்க்கடியை உடனடியாக கவனித்து அதற்கான சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடமுடியும்.
வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப்படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.
கடித்த நாய் வெறிநோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால், நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப்பட்டிருந்தால், இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.
நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.
வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.
உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப்படுதலும் நிச்சயம்.
வெறிநோய் உற்பத்திக்கூடம்..!
 இம்முயூனோகுளோபுலின் (Immunoglobulin) எனற தடுப்பு மருந்து உடல் செல்களுக்குள் வெறிநோய் வைரஸ் நுழையவிடாமல் தடுக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை, நீலகிரி மாவட்டத்தின் குன்னோரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இந்தியா முழுமைக்கும் வெறிநோய் மருந்து தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் புண்ணியவான் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பெரிய மனது பண்ணி, இந்த நிறுவனத்துக்கு பால் ஊற்றி மூடுவிழா பணியினை மிகுந்த மக்கள் நல நிகழ்வாக நடத்திவிட்டார். அதன் பின் வெறிநோய் தடுப்பூசி பாவப்பட்ட மக்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை வானத்தில் பறந்து உயர்ந்துவிட்டது. மக்கள் அரசு மருத்துவமனையையே நம்ப வேண்டி இருக்கிறது. தனியார் மருந்துக்கடைகளில் இதன் விலை ரூ.2,500/= க்கு மேல். இதனை எப்படி ஓர் உழைப்பாளி/ஏழைத் தொழிலாளி வாங்க முடியும்.? .இப்போது தடுப்பூசியின் எண்ணிக்கையும், அதன் வலியும் கூட குறைந்துள்ளது.
உலக வெறிநோய் தினம்..!
செப்டம்பர் 28 என்பது உலக வெறிநோய் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நாய்களுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடப் படுகிறது. வெறிநோய் பாதுகாப்பு நடவடிக்களை கடைப்பிடிக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள பதிவுகளில், 2005 ம் ஆண்டு விஸ்கான்சன் (Wisconsin) நகரில் ஜென்னா கீஸ் (Jeanna Giese)ஒரு இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த வெறிநோய்தான் குறிப்பிடத்தகுந்தது. வெறிநோய் வந்த துவக்கத்தில் அவரை மருந்த்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எதிர் உயிரின் தற்காப்பு முறை நன்கு செயல்பட்டு வைரசுடன் போராடி வெற்றி கண்டார். இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரண்டு நோயாளிகள், கொலம்பியாவில் 2008 ல் 11 வயதுப் பையனும், கலிபோர்னியாவில் 2011, ஜூலையில் 8 வயது சிறுமியும் மட்டும் அதிசயமாக வெறிநோய் வந்த பின்னரும் பிழைத்திருக்கின்றனர். வேறு நபர்கள் வெறிநோய் வந்து பிழைத்ததாக சரித்திரமே இல்லை.
வெறிநோய் பற்றிய ஆய்வு..!
சமீபத்திய வெறிநோய் பற்றிய கண்டுபிடிப்பு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. உடலில் வெறிநோய் அடையாளங்கள் உருவான பின், நம் பெரும்பாலான உடல் செல்களில் உள்ள உட்கருவின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படுகிறது. ஆனால் இவ்வளவு உருமாற்றம் நடந்தாலும், வெறிநோய் வைரஸ் பெருக்கம் செய்ய இந்த ஆர்.என்.ஏ வின் சிறு பகுதியே பயன்படுத்தப்படுகிறது. என்ன அநியாயம் பாருங்கள். வைரஸ் பல்கிப் பெருக, ஏராளமான புரதம் உருவாக்க, அளப்பறிய ஆர்.என்.ஏ உருவாகி, அதில் கொஞ்ஞூண்டு ஆர்.என்.ஏ மட்டுமே.. பயன்பாட்டுக்காம்.
வெறிநோய் வருவதற்கான சில காரணிகள்..!
ஆசிய நாடுகளில் சில இடங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கமும் உள்ளது. இதுவும் கூட வெறிநோய் உருவாக ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. நம்மிடையே இதுவரை, ஒருவருக்கு வெறிநோய் உள்ள நாய் கடித்ததா என்பதை அறிவதற்கான சோதனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறிநோய் அறிகுறிகள் வந்த பின்தான் தெரிகிறது. பொதுவாக வெறிநோய் எச்சில் மூலமே பரவுகிறது. மிக அரிதாக வெறிநோய், பாதிக்கப்பட்ட வெறிநோய் உறுப்புகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அப்படியே நாம் காற்றைச் சுவாசிக்கும்போது உள்ளே நுழைந்து வெறிநோயை உருவாக்குவதும் உண்டு. அதே போல அரிதாக சரியாக வேகவைக்கப்படாத வெறிநோய் வந்த விலங்குகளின் மாமிசத்திலிருந்தும் வர வாய்ப்பு உண்டு.
நீங்கள் செய்யவேண்டியவை..:
நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள். அதன் மூலமும் வெறிநோய் வரலாம்.
வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும்.
விலங்குகளால் ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.
நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி பழகக் கூடாது.
குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.
நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.
உலகம் முழுவதுமே வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். - பேரா.சோ.மோகனா.


"வைரஸ்' அரக்கன் :-இன்று உலக ரேபிஸ் தினம்-
ரேபிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், அதை முற்றிலும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். இவரது மறைந்த தினம் செப்., 28. இவரை கவுரவிக்கும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால் உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசிகள் உள்ளன. இவற்றின் விலை அதிகமாக இருப்பதால், வளரும் நாடுகளில் இது குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.
நாய் முதல் எதிரி:
ரேபிஸ் என்பது ஒரு விதமான வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாய் ஆகியவற்றையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், நேரடியாக மனிதர்களை கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது. நாய்கள் மூலமே அதிகளவில் ரேபிஸ் பரவுகிறது. ரேபிஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடனேயே, டாக்டரிடம் காட்டி உரிய சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.
மிட்டாய்க்கு ஆசைப்பட்ட நாய்; பறிபோன இரண்டு உயிர்கள்: தொடரும் நாய்க்கடி மரணங்கள்
ஒரு மாதத்திற்கு முன்... தேனி மாவட்டம் கூடலூரில், வீட்டு வாசலில் விளையாடிய இரண்டு பிஞ்சுகள், பக்கத்து வீட்டு நாயால் துவம்சம் செய்யப்பட்டன. சிறுமியின் கையில் இருந்த மிட்டாயை பறிக்க முயன்ற நாய், அவள் மேல் பாய்ந்தது. சிறுமியின் தம்பியை முகத்தில் பிராண்டியது. விளைவு... "ரேபிஸ் வைரஸ்' தாக்கியது. ஆறு நாட்களுக்கு முன், சிறுமியும்; நான்கு நாட்களுக்கு முன், தம்பியும் பலியாகினர். நாய்க்கடிக்கு, இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்த, தேனி கூடலூர் கூலித் தொழிலாளி ராஜ்குமார், தன் வேதனையை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது: இளநீர் வெட்டி, அந்த சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்துகிறேன். மூத்தவள் பாண்டீஸ்வரி, நான்கு வயது. இரண்டாவது பையன் ஸ்ரீபிரியன் இரண்டரை வயது. ஒரு மாசத்துக்கு முன், வீட்டில் டீ குடிச்சுட்டு பாப்பா வெளிய வந்து, மிட்டாய் தின்னுட்டிருந்தா. பக்கத்து வீட்டு நாய், மிட்டாயை பார்த்து பிள்ளை மேல் பாஞ்சிருச்சு. கன்னம், கண் பகுதி, தொண்டையில் காயம் பட்டுச்சு. தம்பி சிவா தான், மருத்துவமனைக்கு தூக்கிட்டு போனான். கம்பத்துல இருந்து, தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். காயம் சரியாயிருச்சுன்னு, ஸ்கூலுக்கு அனுப்பினோம். பார்த்தா திடீர்னு காய்ச்சல் வந்துருச்சு. திரும்பவும் மருத்துவமனைக்கு போனோம். காய்ச்சல் குணமாகல. தண்ணியைக் கண்டா... பயந்து மூச்சிரைக்கவும், தேனிக்கு போனோம். அங்க பார்க்க முடியாதுனு, மதுரைக்கு அனுப்பிட்டாங்க. "ரேபிஸ்' தாக்கிருச்சுனு சொன்னாங்க. புள்ள செத்துப் போச்சு. இந்த நேரத்துல, பையனுக்கும் சுகமில்லாம போச்சு. பாப்பாவ நாய் கடிச்சப்பவே, பையனையும் கன்னத்தில் பிராண்டியிருக்கு. சின்னப் பிள்ளைங்க சண்டையில, காயம் பட்டுருக்கும்னு, நினைச்சு விட்டுட்டோம். அவனுக்கும் "ரேபிஸ்' தாக்கி, செத்து போய்ட்டான். ரெண்டு பிள்ளைங்களும் என்னை விட்டுட்டு போயிருச்சு. கூலி வேலைய விட்டுபுட்டு, கடன் வாங்கி கம்பத்துக்கும், தேனிக்கும், மதுரைக்குமா நாயா அலைஞ்சேன். பணம் போனா பரவாயில்ல... பிள்ளைங்க தங்கலயே!இவ்வாறு கதறினார். தமிழகத்தில் ஆண்டுக்கு நூறு உயிர்கள் வரை, நாய்க்கடியால் மரணத்திற்கு விலையாகின்றன.
டாக்டர்கள் கூறுவது என்ன?
"நாய்க்கடித்தவுடன் தடுப்பூசி அவசியம்' :என்கின்றனர், மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பாலாஜி நாதன், அனீஸ் பாத்திமா.நாய் கடித்தாலோ, நகத்தால் பிராண்டினாலோ குழாய்த் தண்ணீரில் நேரடியாக காயத்தை காண்பித்து, ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கழுவ வேண்டும். சோப்பாலும் கழுவலாம். நாய் கடித்த அன்றே, முதல் தடுப்பூசி போட வேண்டும். அதன் பின், 3, 7வது நாட்களிலும், 21 அல்லது 28வது நாட்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போட வேண்டும். நாய் கடித்தால் தான் "ரேபிஸ்' பரவும் என்பதில்லை. அதன் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் நோய் பரவலாம். உடலில் எங்காவது சிறுகீறல் இருந்து, அதன் உமிழ்நீர் பட்டால் "ரேபிஸ்' வைரஸ் தாக்கும். நோய் தாக்கிய பின், மருத்துவ சிகிச்சை இல்லை. அவர்களிடம் நெருக்கமாக பழகிய அனைவருமே, தடுப்பூசி போடுவது அவசியம், என்றார்.
வளர்ப்பவர்களே... உஷார்:
நாய் வளர்ப்பவர்களும் ஆண்டுக்கொரு முறை, நாய்க்கு தடுப்பூசி போட வேண்டும். நகத்தால் பிராண்டினாலோ, நக்கினாலோ அலட்சியமாக இருக்கக்கூடாது. அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நாய்க்கடிக்கு தடுப்பூசி போடப்படுகிறது. காயம் ஆழமாக இருந்தால், "இம்யுனோ குளோபுலின்' மருந்து, கூடுதலாக செலுத்தப்படும். எல்லாம் "ரேபிஸ்' தான் காட்டு விலங்குகள் மூலம் "ரேபிஸ்' பரவும். நாய் மட்டுமல்ல... பூனை, குரங்கு, குதிரைகள் போன்ற விலங்குகள் மூலமும் "ரேபிஸ்' வைரஸ் பரவும். இந்த ஆண்டில், பூனையிடம் கடிபட்ட இரண்டு பேர், தொடர் சிகிச்சை பெறாமல், அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். எனவே, எந்த விலங்கு கடித்தாலும், தடுப்பூசி, தொடர் ஊசி போடுவது அவசியம்.
"கடிபடும்' ஆண்கள் அதிகம்:
மாதம், ஆயிரம் பேர் வரை, நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதில், 70 சதவீதம் பேர் ஆண்கள். 2, 3 ,4 வது தடுப்பூசி போட வருபவர்கள், சராசரியாக தினமும், 150 பேர். தினமும் 50 பேர் கடிபடுகின்றனர்; இதில் 10 சதவீதம், பேர் ஆழமான காயம் பட்டு வருகின்றனர்.
அமைதியும் ஆபத்தே:
"ரேபிஸ்' தாக்கிய நாய்கள், ஆக்ரோஷமாக பல்லை காண்பித்து, நாக்கை தொங்கவிட்டு தான் அலையும் என்பதில்லை. பூனைக்குட்டி போல அமைதியாக இருக்கும். நாய்களைப் பார்த்தவுடன், சிலர் அதன் தலையை தடவி கொடுப்பர். உடனே கடித்துவிடும். கிராமப்புறங்களில் தான் நாய்க்கடி அதிகம். அதிகாலை, மாலை நேரங்கள் தான் அதிக இலக்கு. குப்பையில் நாய்கள் சுற்றித் திரிந்தால், விலகிச் செல்ல வேண்டும். இரவுநேர அசைவ ஓட்டல்களில் விழும் எச்சில்இலைகளை கடந்து செல்லும் போது, கடிபடலாம்.
ஊடுருவும் நாய்கள்:
நகர்ப்புறங்களில் மாநகராட்சி, நகராட்சிகள் நாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போடுகின்றன. நாளடைவில் கிராமப் புறங்களில் உள்ள நாய்கள், நகர்ப்புறங்களில் ஊடுருவும் போது, தடுப்பூசி போட்ட நாய்களுக்கு மீண்டும் "ரேபிஸ் வைரஸ்' பரவலாம். எனவே, கருத்தடை, தடுப்பூசி என்பதை, ஒட்டுமொத்தமாக செய்தால் தான், நாய்க்கடி மரணத்தில் இருந்து, மனிதர்களை மீட்க முடியும்.

வெறி நாய்க்கடி நோய் மருந்துகள்
நாய்கள் நன்றிக்குப் பெயர் போனவை. வெறி நாய்க்கடி நோயும் அதே அளவு பிரபலமானது. நாய்க்கடி விஷமாகும் ேரபிஸ் வைரஸ் கிருமிகளையும் அதற்கான மருந்துகளையும் பற்றிப் பார்க்கலாம்.
ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கிப் பயணம் செய்யும்.
அதனால், முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம். காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 வருடங்கள் தாமதமாக கூட நோய் வரலாம்.
நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாட்களுக்குள் மரணம் நிச்சயம். மற்றபடி எலி, பூனை, வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற விலங்குகள் கடித்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுவதன் மூலம் 100% நோய் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்.
எனினும் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் இறந்து போவதாக மருத்துவ பதிவுகள் கூறுகின்றன. இந்தியாவிலோ 20 ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள். அதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்... குறிப்பாக 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம்.
ஏன் குழந்தைகள்?
1.முன்னெச்சரிக்கை இல்லாமல் குழந்தைகள் விளையாடுவதால்...
2.மூளைக்கு மிக அருகில் முகத்திலோ, கழுத்திலோ, தலையிலோ காயம்படுவதால்...
3.கவனிக்காத பட்சத்தில், அறியாமையால் காயத்தை உதாசீனப்படுத்தி நாய்க்கடி தடுப்பூசி போடாமல் விடுவதால்...
4.தினமும் சென்னையிலேயே அரசு மருத்துவமனைகளில் 60-70 நாய்க்கடி நோயாளிகளுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல், வெளிநாட்டுத் தடுப்பூசிகள் ேபாட்டு வருகிறார்கள். இது அவசர சிகிச்சை நோய்களுக்கு வாங்கும் மருந்துகளின் பட்ஜெட்டில் விழும் ஓட்டை என்பதை, தடுப்பூசி போடப்படாத தெருநாய்களை வளர்ப்பதில் முனைப்பு காட்டுவோரும், விலை உயர்ந்த நாய் வளர்ப்போரும் மனதில் கொள்ள வேண்டும்.

நாய் கடித்தவுடன் என்னசெய்ய வேண்டும்?
வெறி நாயோ, தெரு நாயோ, வீட்டில் வளர்க்கிற நாயோ... அதற்கு நோய் இருக்குமானால், அந்த நாய் மாறுபட்ட பழக்கவழக்கம் கொண்டிருக்கும். எல்லோரின் மீதும் பாய்வதும், கடிக்க முனைவதும், மற்ற விலங்குகளையும் கடிக்க முனைவதோடு, அந்த நாயும் எச்சிலை முழுங்க முடியாமல் கோழையுடன் எச்சிலை வடித்தபடி இருக்கும்.
நாய்க்கு வலிப்பு, ஜுரம், வாதம், முழுங்க முடியாமை, கீழ்த்தாடை மூடாமலேயே இருந்தால், குரைக்கும் சத்தம் மாறினால், அதிக எச்சில் சுரந்தால், காரணமின்றி எரிச்சலுடன் பாய்ந்தால், கடித்தால் - அது நாயாக இருந்தாலும், பூனையாக இருந்தாலும் - ‘அதற்கு நோய் வந்து இருக்கிறதா’ என விலங்கு நல மருத்துவரிடம் சந்தேகத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.
வெறி நாயோ, தெரு நாயோ, வளர்ப்பவர் நாயோ, பூனையோ, எலியோ கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளை தாக்கும் ரேபிஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத்தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்த காயத்திலும் நோய்க் கிருமி பரவாது. பயப்படத் தேவையில்லை.
ஆனால், இந்த விலங்குகள் காலை நக்கிக் கொண்டேயிருக்கும். அதனால் நகக்கீறலோ, பல் கடியோ, தோல் கிழிந்தால் ரத்தத்தில் எச்சில் பட்டாலே அதன் மூலம் கிருமி பரவ வாய்ப்பு இருக்கிறது. காயத்தை நன்றாகக் கழுவிய பிறகு ரத்தம் அதிகமாக வந்து காயம் ஆழமாக இருந்தால் மருத்துவரை அணுகும் வரை கட்டு போடலாம். இல்லையெனில் திறந்த புண்ணே மேலானது. காயத்தின் தன்மை, அதன் இடம், ஆழம் பொறுத்து, நாய்க்கடியை 3 வகையாக
பிரிக்கலாம்.
நாய் நக்குவதால், தோல் கிழிந்து இருக்காவிட்டால், நாய்க்கு உணவு அளிப்பதால், தொடுவதால் பிரச்னை கிடையாது. தடுப்பூசி தேவையில்லை. தோல் முழுமையாக இருந்தால் பிரச்னை இல்லை. தோல் கிழிந்து இருந்தால் தடுப்பூசி வேண்டும். தோல் கிழிந்து முகத்துக்கு அருகில் ஆழமான காயம் என்றால் தடுப்பூசி மற்றும் R.I.G. வேண்டும்.
ARV (Anti Rabies Vaccine) தடுப்பூசிகள்... நாய் கடித்து காயம் படுவதற்கு முன்பாக, நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள், விலங்கியல் மருத்துவர்கள், உதவியாளர்கள், தற்காப்பாக போட்டுக் கொள்ளும் ஊசிகள். இது 3 மட்டும் போதுமானது. விலங்குகள் கடித்த பின் 5 ஊசிகள் கண்டிப்பாக போட வேண்டும் (1,3,7,14,28 நாட்கள்).
வெறும் ேதால் மட்டும் கிழிந்து இருந்தால் தடுப்பூசி மட்டும் போதுமானது. இந்த தடுப்பூசி (ARV) நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, வைரஸ் கிருமிகளை அழித்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். ஆழமாக, முகத்துக்கு அருகில் என்றால் Rabies Immunoglobulin (RIG) காயத்தைச் சுற்றிலும் போடுவது அவசியம். இதன் மூலம் காயத்தைச் சுற்றி தசைகளில் உடனடியாக கிருமிகள் பெருகுவதை முழுமையாக தடுக்க முடியும்.
உங்கள் கவனத்துக்கு...
1. பொதுவாக நாய்க்கு தடுப்பூசி போட்டு இருந்தால், கடி பட்டவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்பது தவறு. அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
2. 10 நாள், 20 நாள் நாயைப் பார்த்துக் கொண்டால் போதும் என்பதும் தவறானது. கடித்தால் தடுப்பூசி 5ம் அவசியம். நாய்க்கு நோய் வராமலே நாயின் உடலில் கிருமிகள் (Carrier stage) இருக்கலாம். அவை மனித உடலில் உடனே நோயாக மாறும்.
3. கீறினால் தடுப்பூசி தேவையில்லை என்பது தவறு. கீறினாலும் அவசியம். நகத்தை நக்கிச் சுத்தம் செய்வதால் எச்சிலில் நகத்தில் பரவும் கிருமி காயத்தில் பட்டால் நோய் பரவும்.
4.தோல் கிழிந்த விலங்கு கடித்த காயத்துக்கு 5 தடுப்பூசிகள் அவசியம். 3 போட்டால் போதாது.
இவ்வாறு எடுத்துக் கொண்ட 5 தடுப்பூசி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும்.
5 ஆண்டுக்குள், ஊசி போட்ட ஓராண்டு கழிந்து மீண்டும் கடி பட்டால், ஒரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். 5வது ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் கடி பட்டால் 5 ஊசிகளும் அவசியம்.எந்த உணவுக் கட்டுப்பாடும் நாய்க்கடி நோய்க்கு தேவையில்லை.
முழுமையான தடுப்பூசி ஒன்றே 100% பாதுகாப்பான நோய் தடுப்பு முறை. நோய் வந்த பிறகு இந்தியாவில் உயிர் காப்பாற்றப்பட்டது இல்லை. நாய்க்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் உடலிலிருந்து கூட நோய்க் கிருமி மற்றவர்களுக்கு தொற்றக்கூடும் என்பதால் உடலைக் கூட அரசாங்கமே தகனம் செய்து விடும். உறவினர்கள் கூட பார்க்க முடியாது.
நாய்கள் மற்றும் வீட்டு விலங்கினங்களை தெரு நாய்களை, ரேபிஸ் கிருமிகளிலிருந்து பாதுகாக்க அரசாங்கத்துக்கு உதவி செய்வோம். தெரு நாய்களை பிடித்துச் செல்லும் வாகனங்கள், அந்நாய்களுக்கு தடுப்பூசி போட்டு கர்ப்பத்தடை அறுவைசிகிச்சை செய்து மீண்டும் அதே இடத்தில்தான் விட்டுச் செல்வார்கள். அவர்களோடு சண்டையிடாதீர்கள்.
வருடாவருடம் தெரு நாய்களுக்கு, வீட்டு நாய்களுக்கு, கால்நடை மருத்துவரிடம் காண்பித்து தடுப்பூசி போடுங்கள். இலவசமாக அரசு மருத்துவமனைகளில் போடப்படும் தடுப்பூசியை போட அறிவுறுத்துங்கள். உயிர்இழப்புகளைத் தடுத்து நிறுத்துங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 55 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இந்தியாவிலோ 20 ஆயிரம் பேர். இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள். குறிப்பாக 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக