திங்கள், 4 செப்டம்பர், 2017

ஆசிரியர் தினம் செப்டம்பர் 5.



ஆசிரியர் தினம் செப்டம்பர் 5.

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.
ஆசிரியர் பணி என்றால் என்ன?
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.


ஆசிரியர் தினம்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.


குரு ஸ்தானம்!
வாழ்வின் இரண்டு அதி முக்கிய அறைகள். ஒன்று கருவறை; அம்மாவுடையது. மற்றொன்று பள்ளியறை ஆசிரியருடையது! அம்மா வாழ்வை தந்து உலகத்தை அறிமுகப்படுத்துவார். ஆசிரியர் அறிவை தந்து வாழ்வை அறிமுகப்படுத்துவார். உலகின் மிக உன்னத அறைகளுக்கும், அதன் அன்பாளர்களுக்கும் மிக்க வந்தனம்!
மூன்றாமிடம்!
தலைச்சிறந்த வரிசை ஒன்று உள்ளது. அதில் ஆசிரியருக்குமான இடமும் நன்று உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் இடம் மூன்று - ஆசிரியப் பணிக்கென உள்ளது.
7-ல் 1 பங்கு / 2 பங்கு!
இன்றைய அறிவியல், மருத்துவ முன்னேற்றம் மனிதனின் வயது ஸ்கோரின் சராசரியை 70 வரை கொண்டு வந்து உள்ளது. இன்று கட்டாய கல்வி சட்டமாகிவிட்டது. ஒரு மனிதன் குறைந்தது 10 ஆம் வகுப்பு வரை படிப்பான் என்று வைத்து கொள்ளலாம். அப்படியென்றால், 10 வருடங்கள் பள்ளி. இதன்மூலம் ஒரு மனிதன் தனது வாழ்வின் 7ல் 1 பங்கை ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான். அதுவே மேல் படிப்பு, உயர் படிப்பு, சிறப்பு படிப்பு என்று மனிதன் படிப்பில் பல படிகள் ஏறினால், மேலும், 10 வருடங்கள் ஆசிரியரின் மேற்பார்வையில் அவன் வாழ்வை செலவழிப்பான். அந்த நிலையில் அவனின் வாழ்வின் பங்கில் அதாவது 7ல் இரு பங்கை, ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான்.
நோபலில் 60 சதவீதம்!
அமைதி, விஞ்ஞானம், இலக்கியம் என பல துறைகளில் உன்னதம் புரிந்தவர்களுக்கு மனிதகுலம் சூட்டும் மிகப் பெரிய மகுடம் "நோபல்' ஆகும். இதனை இன்றளவும் வென்றிட்ட மாந்தர்களில் 60 விழுக்காடு நபர்கள் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள்தான்.
இந்த பட்டியலில் முதல் இடம்!
உலகில் தவறுகள், பிழைகள், குற்றங்கள், பாவங்கள், கொடூரம் என வளர்ந்து கொண்டே இருக்கும் போது நம்பிக்கையுடன் சாய்ந்து கொள்ளும் ஒரு இடம் உண்டு. பெற்றோரும், சான்றோர்களும் அந்த இடம் ஆசிரியருடையது என இக்காலத்தில் கூறுவர். சமூகம் தீமையிலிருந்து விலகி நன்மையில் நடந்திட, அதனை நடத்திட பெரிதும் நம்புவது ஆசிரியர்களையே! அதனால், தவறே செய்யக்கூடாதோர் பட்டியலில் ஆசிரியர்கள் முதலிடம் பெறுகின்றனர். ஆசிரியரின் தவறு, மனிதனின் ஆதார நம்பிக்கை அடிப்படையையே ஆட்டம் காண செய்துவிடும். ஆசிரியர் மேல் இச்சமூகம் மிகுந்த மரியாதையை, மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதனால்தான் சமூகம் தனது சந்ததியை தனது எதிர்காலத்தையே ஆசிரியரிடம் அளித்து உள்ளது. மாணவனும், ஆசிரியரை மலை போல் நம்புகிறான் . பாதை காட்ட வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கமாய் வாழ வேண்டும். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஆசிரியரின் வாழ்வு இருந்திடல் வேண்டும்.
வெளிச்சம் தரச் செய்ய வேண்டும்!
நன்றாக படிப்பவன் கடைசியில் கவனிக்கப்பட வேண்டியவன். மோசமாய் படிப்பவன் எமர்ஜென்சி கேஸ்; உடனே கவனிக்கப்பட வேண்டியவன். படிப்பில் ஆர்வம் இல்லாதவன் பியூஸ் போன பல்பு போன்றவன். கூடு இருக்கும் ஆனால், உயிர் இராது. ஆசிரியர் விஞ்ஞானி போல ஆராய்ந்து அங்கே உயிரை ஊட்ட வேண்டும். சுமாராய் படிப்பவன் லோ வோல்டேஜில் எரியும் பல்பு. வோல்டேஜை சரி செய்தால் போதும். நன்றாய் படிப்பவன் பளிச்சென பகல் போல எரியும் பல்பு. திடீரென ஈசல்கள் மண்டாதபடி மட்டும் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒரு சினிமா ஹீரோ போல் !
ஒரு ஹீரோவிற்கு தெரியாத வேலையே இல்லை. தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல் காட்டுவார்கள். எதிலும் பூந்து புறப்பட்டு வருபவன் தானே ஹீரோ. அதுபோல ஒரு ஆசிரியர் ஏராளமாய் பாடத்தை பற்றியும், பாடத்தை ஒட்டியும், பாடத்திற்கு வெளியேயும் அறிந்து இருக்க வேண்டும். மாணவர்களின் மேல் உண்மையான அக்கறை வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தது போல புத்துணர்வுடன், புதிய புதிய விஷயங்களுடன் மாணவர்கள் முன் வர வேண்டும். படிப்போடு, நாட்டு நடப்பை, சமூக அக்கறையை, அன்பை, மனிதாபிமானத்தை, வாழும் வாழ்வில் மேன்மையை, பண்பாட்டை, கலாசாரத்தை என்று மாணவருக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
"எந்தவொரு குழந்தையையும் என்னிடம் 7 ஆண்டுகள் விட்டு வையுங்கள். அதன் பிறகு எந்த சாத்தானும், ஏன் கடவுளும் கூட அவனை அவனது குண நலன்களை மாற்ற முடியாது!'
-புகழ் பெற்ற கிரேக்க ஆசிரியரின் அனுபவ மொழி இது.
ஹேப்பி பர்த்டே டூ யு ஆல் !
மாணவர்கள் பிறந்தநாளை, பள்ளி அறிய கொண்டாடுவர். ஆசிரியரும் பரிசு தருவார். எந்த ஆசிரியராவது பிறந்தநாளை அனைவரும் அறிய கொண்டாடியது உண்டா? இல்லை. ஆசிரியர் தினத்தையே தம் ஆசிரியர்களின் பிறந்த தினமாய் மாணவர்கள் நினைத்து கொண்டாடலாமே! காசு போட்டு பெரிய பரிசாய் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆசிரியருக்கு பிடித்த பேனா, புத்தகம் என அவர் மனம் கவர்ந்தவற்றை அளிக்கலாம். படிக்காதவன் - படிக்கிறேன் என்றும், ஒழுங்கில்லாதவன் - இனி ஒழுக்கமாய் இருப்பேன் என்றும் உறுதிமொழி எழுதி தரலாம். ஒரு உண்மையான ஆசிரியருக்கு மாணாக்கரின் நலமே பெரும் பரிசு. இதுபோல உறுதிமொழி தந்து அதை அம்மாணவர்கள் கடைப்பிடிக்கவும் வேண்டும். மற்ற மாணவர்கள் கூட்டமாய் இதை செய்திடல் வேண்டும்.
மாணவர்களுக்கு சவால் !
ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பேச்சு, பாடம் நடத்தும் பாங்கு, வாகனம் என எதை வேண்டுமானாலும் எடுத்து கொண்டு கிண்டல் செய்யும் சில மாணவர்கள் உண்டு. ஆசிரியரின் மேன்மையை பற்றி தெரியாதவர்கள் அவர்கள். அவர்களை சும்மா விட்டு விட முடியாது. குரு பீடத்தின் மகிமையை எடுத்து காட்ட வேண்டும். ஆசிரியர் என்றால் பெரிய ஆளா என்ன? என கேட்கும் மாணவனுக்கு ஒரு சவால்!
ஒரு ஐந்து வயது குழந்தைக்கு பொறுமையாய், மகிழ்வாய், அன்பாய், "அ, ஆ, இ' சொல்லி கொடுங்கள் பார்க்கலாம். அப்படி நீங்கள் படிக்கும்போது ஆசிரியரின் உயர்வு விளங்கும். கண்கள் பணிக்கும்; கரங்கள் துதிக்கும்; மனம் மன்னிப்புக்கு மன்றாடும். ஆசிரியர், அம்மா, அப்பா, நண்பன் என்று எல்லாமாய் இருப்பவர் ஆசிரியர். ஆசிரிய பெருமக்களுக்கு    ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக