ஞாயிறு, 1 அக்டோபர், 2017

மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02, 1869.



மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02, 1869.

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.


இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.



தன்னலம் தொலைத்தவர்களால் தலை நிமிர்ந்தோம்: காந்தி பிறந்த நாள்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுதே.. சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவோம்... என்று அகிம்சை வழியில் அறப்போர் நடத்தி தேசத்தின் விடுதலையை பெற்றுத்தந்தவர் மகாத்மா காந்தியடிகள். அதனால்தான் அவரை தேசப்பிதா என்றழைக்கின்றோம்.
அந்த உத்தமர் காந்தியின் பிறந்த நாளில், நம் இந்திய தேசத்தின் விடுதலைக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து நாட்டிற்காக ரத்தம் சிந்தி இன்னுயிர் ஈந்த தலைவர்களை நினைவு கூர்வோம்.விடுதலை போராட்டத்தில், பங்கேற்ற தியாகிகளை வணங்குவோம்.
அகிம்சை வழியிலும், தங்களின் வீரத்தின் விளைநிலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு துப்பாக்கி குண்டுகளை மார்புகளில் ஏந்திய வீர மறவர்களையும் நினைவு கூர்வோம். நெல்லையில் வீர வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களையும் போற்றி வணங்குவோம்.
ரகசியம் காத்த நேதாஜி...
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி நாட்டின் விடுதலைக்கு போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவரது இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய தியாகிகளை வாழ்த்து வோம். விடுதலை வேள்வியில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் வீர அஞ்சலி
செலுத்துவோம்.
அதே நேரம் விடுதலை போராட்ட வீரர்கள் இன்றும் ஆங்காங்கே ஒன்றும் இரண்டுமாக வாழ்ந்து
வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை. அன்று வெள்ளையனை எதிர்த்து போராடிய இவர்கள் இன்று நாட்டின் கொள்ளையர்களை எதிர்த்து போராட முடியாத நிலையில், பரிதாபத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர் பாண்டியராஜ். இவர் தனது 88 வயதில் ஓட்டை உடைசலான, புறாக்கூண்டு போன்ற ஓட்டு வீட்டிற் குள் மகன், பேரப்பிள்ளைகளுடன் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார்.
சொந்த வீடு கூட இல்லை, என்ற மனக்குமுறலை வெளிப்படுத்தினார். சேது என்ற சுதந்திர போராட்ட தியாகி 2,500 ரூபாய் வாடகையில் தனி ஆளாக வசித்து வருகிறார்.இவர்களின் சுதந்திர போராட்ட அனுபவங்களை இனி கேட்போம்.
டாக்டர் சி.எம்.பாண்டியராஜ்
ராமநாதபுரம்
கடந்த 1942ல் ராஜ்பிகாரிபோஸ் இந்திய சுதந்திர சங்கத்தின் ஆசிய தலைவராக இருந்தார். எஸ்.ஏ.ஐயர் செயல் விளக்க தலைவர். 1943ல் ராஜ்பிகாரிபோஸ் தனது சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டு மக்களிடம் சுதந்திய தாகத்தை ஏற்படுத்தினார்.
பின்னர் 1943 அக்.,23ல் சிங்கப்பூரில் 'கெத்தே' என்ற 16 கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அமைத்தார். ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுக்கும் அறிவிப்பையும் வெளியிட்டார். மலேசியா, சிங்கப்பூர், பர்மாவில் இந்திய தேசிய ராணுவம் வலுப்பெற்றது. கிழக்காசிய நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றது.
நான் 1944 மார்ச் மாதம் மலேசியாவில் இருந்த போது இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தேன். தாய்லாந்து எல்லையில் உள்ள 'ஜித்ரா' என்ற இடத்தில் 6 மாதம் ராணுவ பயிற்சி பெற்றேன். இதுபோல் ஏராளமான பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒரு முகாமில் ஒரு கம்பெனி என்ற அளவில் 250 பேர் பயிற்சி பெற்றோம்.

ஜித்ராவில் பயிற்சி பெற்ற போது மீண்டும் மலேயாவை கைப்பற்றிய ஆங்கிலேயர் எங்களை 1945ல் கைது செய்து ஜித்ரா பயிற்சி முகாமிலும், அலேஸ்டார், பிடாரி கைதிகள் முகாமிலும் சிறை வைத்தனர். 1946 பிப்ரவரியில் விடுதலை செய்தனர்.அந்த காலக்கட்டத்தில், இந்திய தேசிய ராணுவம் படிப்படியாக முன்னேறியது. இம்பால், அரக்கான், அந்தமானில் கொடி நாட்டினோம். இறுதியில் மணிப்பூரை அடைந்த போது, ஜப்பானில் நாகசாகி, குரோஷிமா நகரங்களில்
அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதால், இந்திய தேசிய ராணுவ ஆதரவு நாடுகள் பலம்
இழந்தன.
இந்த நிலையில், சிங்கப்பூர் வானொலியில் பேசிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், படையில்
பணியாற்றும் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் செல்லவும், நான் எங்கே
செல்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது, என்று பேசினார். அதன்பின்னர் தான், நான் இந்தியா திரும்பினேன்.
ராமநாதபுரத்தில் வசித்த போது 1975ல் ஓமியோபதி மருத்தும் கற்று தொழில் செய்தேன். தற்போது சுதந்திர போராட்ட வீரருக்கான மாநில அரசு பென்சன் 11 ஆயிரம் கிடைக்கிறது. தொழில் செய்ய முடியாத நிலையில், இதைக்கொண்டு சிரமப்பட்டு வாழ்கிறேன். அரசு சார்பில் இலவச
வீட்டுமனை வழங்க கோரி பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை.
மத்திய அரசின் பென்சனும் கிடைக்கவில்லை. இதனால், கஷ்டமான நிலையில் இந்த மண் சுவரால் அமைக்கப்பட்ட ஓட்டு வாடகை வீட்டில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறேன். அரசு உதவி செய்ய வேண்டும், என்றார்.
17ல் துவங்கிய போராட்டம்...
கே.சேது, 87, ராமநாதபுரம் மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை போராட்டங்கள் நடந்தது. 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவித்தார். அப்போது எனக்கு 17 வயது. ராமநாதபுரத்தில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தேன்.
சுதந்திர போராட்டங்களில், கையில் கொடியுடன் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அரண்மனை தாலுகா அலுவலகம் அருகே வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்துடன் சென்றபோது, அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தினர். அதில் எனது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த தழும்பு இன்னும் உள்ளது.
அதன் பிறகு 1945ல் நடந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற போது போலீஸ் பிடியில் இருந்து தப்பிவிட்டேன். ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசார் என்னை கைது செய்து ராமநாதபுரம் கிளை சிறையில் 3 மாதம் அடைத்தனர். அதன் பிறகு மதுரை சிறைக்கு மாற்றினர். அங்கு மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்தேன்.
தமிழக அரசு வழங்கும் தியாகி பென்ஷன் 11 ஆயிரம் வாங்கி வருகிறேன்.
மதுரை ரோட்டில் 2,500 ரூபாய்க்கு வாடகை வீடு எடுத்து தனியாக தங்கியிருக்கிறேன். அரசு தியாகிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும். மத்திய அரசு தியாகிகளுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், என்றார்.
சொத்தை விற்று செலவிட்டேன்
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். நாடு வெள்ளையர்களிடம் அடிமைபட்டு கிடந்த
போது விடுதலைக்காக பலரும் ரத்தம் சிந்தினர். அவர்கள் வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தியாகி வேலுச்சாமியும் 96, ஒருவர். அறவழி போராட்டத்திற்கு தலைமை வகித்ததோடு, தான் சிறுக, சிறுக சேர்த்த சொத்துகளை பெற்றோர்களுக்கு தெரியாமல் விற்று செலவழித்துள்ளார்.
தியாகி வேலுச்சாமி கூறியதாவது:
நான் 1924 ம் ஆண்டு டிச., 8 ல் பிறந்தேன். பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமம் எனது சொந்த ஊர். எங்களது ஊருக்கு அருகில் உள்ள மிக்கேல்பட்டிணம், இடைக்காட்டூர் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தேன். 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே நாட்டுப்பற்று காரணமாக கதர் ஆடை அணிய ஆரம்பித்தேன்.
எனது 18வது வயதில் அதாவது 1942ல் காங்., கட்சியில் உறுப்பினராக இணைந்தேன். மாவட்டத் தலைவராக பதவிவகித்த நான் பல்வேறு போராட்ட நிகழ்வுகளுக்காக தேசபக்தர்களை ஒருங்கிணைத்து அறவழி போராட்டத்திற்காக தலைமை ஏற்று பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளேன்.


'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக என்னை கைது செய்து மதுரை மத்திய சிறையில் 2 ஆண்டுகள் அடைத்தனர். தொடர்ந்து பாளையம்பட்டி ஜெயிலில் ஒரு வருடம் இருந்தேன். அப்பா, அம்மா விவசாய தொழில் செய்து வந்தனர். நான் கணக்குப்பிள்ளை யாக பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன். தொடர்ந்து நான் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எனது குடும்பத்தாருக்கு தெரியாமல் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் செலவு செய்துள்ளேன்.
காந்தியடிகள் பரமக்குடி வந்த போது அவரது அருகில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பரமக்குடி திரவுபதி அம்மன் கோயில் படித்துறையில் நடந்த கூட்டத்தில் காந்தியடிகள் பேசுகையில், “சுதந்திரத்திற்காக அனைவரும் ஒன்று பட வேண்டும்.தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுக்கலாம்,” என்றார். உடனடியாக அங்கிருந்தோர் நகை மற்றும் பணத்தை கொடுத்தனர். எனது பங்களிப்புடன் நண்பர்களிடம் வசூல் செய்த தொகையினை கொடுத்தேன்.
நேரு, இந்திரா ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளேன். எனது 25 வது வயதில் தனலெட்சுமியை மணம் புரிந்தேன். அப்போது அவருக்கு வயது, 16. எனக்கு 2 ஆண் மற்றும் 6 பெண் குழந்தைகள் உள்ளனர், என்றார்.
நகைகளை இழந்த தியாகி மனைவி
ராமநாதபுரம் எல்.ஜி.எஸ்.,வடக்கு தெருவை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி நீலமேகம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது மனைவி கோமதி,81, வாரிசு என்ற முறையில் 6,000 ரூபாய் பென்ஷன் பெற்று வருகிறார்.
ஒரே ஒரு மகன் மதுரையில் வசிக்கும் நிலையில் இவர் மட்டும் தனியாக வசிக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ரேஷன் கடைக்கு சென்ற போது, சி.ஐ.டி., போலீசார் எனக் கூறிய இருவர், இங்கு கலவரம் நடக்கிறது. நகைகளை கழற்றி கையில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி உள்ளனர்.
ஒரு செயின், வளையல் என 8 பவுன் நகைகளை வாங்கி ஒரு தாளில் சுற்றி கொடுப்பது போல் போலி நகைகளை கொடுத்து தங்க நகைகளை கொண்டு சென்றனர். இதுகுறித்து புகார் செய்தும், போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு சரி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் ஸ்டேசனுக்கு கேட்பதற்கு சென்றால் அலட்சியப்படுத்தி அனுப்புவதாக வேதனை தெரிவித்தார். ஒரு தியாகி மனைவிக்கு இன்று சமுதாயத்தில், அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள நிலை இது.---
சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பம் தந்த திருவாடானை
சுதந்திர போராட்ட வரலாற்றில் திருவாடானை முக்கிய பங்கு வகிக்கிறது. விடுதலைக்காக காந்தியுடன் இணைந்து போராடி மடிந்தவர்கள், ரத்தம் சிந்தியவர்கள், சிறை சென்றவர்கள் திருவாடானையில் அதிகம்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தியாகிகள் நிறைந்த பகுதியாகும். திருவாடானை தாலுகாவை சேர்ந்தது திருவேகம்பத்துார். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தேவகோட்டை தாலுகாவுடன் சேர்க்கப் பட்டது. சுதந்திர போராட்டத்தில் இப்பகுதியை சேர்ந்தவர்களின தியாகம் அளவிடற்கரியது.
காந்தியுடன் இணைந்தும், நெருக்கமாக பழகியும் அவரின் கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்த தியாகிகளும் உண்டு. ஆனால் காந்தியடிகளின் அகிம்சை வழியை ஏற்க மனமில்லாத பலர் வன்முறையை கையாண்டு கலகம் விளைவித்ததும் உண்டு.
சுதந்திர போராட்டம் தீவிரமடைந்ததால் 1942ம் ஆண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி அப்பகுதி மக்கள் திருவேகம்பத்துாரில் மிகபெரிய கூட்டத்தை கூட்டி போராட்ட வியூகம் வகுத்தனர். இக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பேர் திரண்டனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவது என, அப்போது முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆயிரக்கணக்கானோர் திருவாடானையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். கைகளில் கம்பு மற்றும் தீ பந்தங்களுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து கோஷமிட்டபடி சென்றனர்.
திருவாடானைக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்த சிறைச்சாலை, போலீஸ் ஸ்டேஷன், கருவூல அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். சிறைச்சாலையை உடைத்து அங்கிருந்த 23 கைதிகளை விடுவித்தனர்.
இச்சம்பவம் இந்திய வரலாற்றில் முத்திரை பதித்தது. திருவேகம்பத்துார் பாலபாரதி, திருவாடானை சண்முகம்பிள்ளை, ராமசாமிபிள்ளை, வெளியங்குடி நடராஜத்தேவர் போன்ற பலர் காந்தியுடன் இணைந்தும், நெருக்கமாக பழகியும் விடுதலைக்காக போராடி மறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் விதமாக திருவாடானையில் தியாகிகள் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.




நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்கும் இவர், அஹிம்சை மற்றும் சத்யாக்ரஹ வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றார். இதன் மூலமாக அவ்விரு கொள்கைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல; மேலும் அக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்தார். அவரின் இந்த நம்பிக்கையே, அனைவரும் அவரை கவனிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், வரலாறு காணாத மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராகப் போற்றச் செய்தது. அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் உள்ள பெருந்தளைவர்களான மார்ட்டின் லூதர் கிங், ஜேம்ஸ் லாசன், நெல்சன் மண்டேலா, போன்ற பலரும் ஈர்க்கப்பட்டதால், அவர் இன்றளவும் உலகம் முழுவதும் அனைவரின் மனத்திலும் நிலைத்து நிற்கிறார் .இப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காந்தி மற்றும் காந்தி ஜெயந்தி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும். காந்திஜி பற்றிய சில தகவல்கள்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார்.

அதன் பின்னர், இந்தியா திரும்பிய அவர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ‘ரவ்லத் சட்டம்’ மற்றும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு’ குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ‘ஒத்துழையாமையை இயக்கத்தினை’ 1922 ஆம் ஆண்டில் தொடங்கினார். இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. இவ்வியக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இதனால், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.
காந்தி ஜெயந்தி விழா மற்றும் கொண்டாட்டம்
காந்தி ஜெயந்தி திருநாளன்று, நமது மக்கள், தேசத்தந்தை அஞ்சலி செலுத்தும் விதமாக பல பிரார்த்தனை சேவைகளையும், சமூக செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை கெளரவிக்கவும் விதமாக, கலைப் பிரியர்கள் காந்திய கொள்கைகள் மற்றும் சுதந்திரத்திற்காக அவர் கையாண்ட வழிமுறைகளைப் பிரதிபலிக்கும் கண்காட்சிகளை வருடந்தோறும் நடத்தி வருகின்றனர். சில இடங்களில், அஹிம்சை வழியில் செல்வோருக்கு, விருதுகளை வழங்குவர். காந்தியின் வாழ்க்கை மற்றும் அறவழிப் போராட்டங்களை இளந்தலைமுறையினருக்குக் கற்பிக்க எண்ணும் சிலர், பல இடங்களில் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்பு உரையாற்றுவர்.
பள்ளி, கல்லூரிகளில் காந்தி ஜெயந்தி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை, தேசிய விடுமுறை தினமாக அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் அறிவித்திருக்கிறது. மேலும், காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம், அக்டோபர் 2 ஆம் தேதியை, ‘சர்வதேச அகிம்சை தினமமாக’ ஐக்கிய நாடுகள் பொது சபை (UNGA) சமீபத்தில் அறிவித்து, மென்மேலும் காந்திக்கும், காந்திய கொள்கைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக, அன்றைய தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும். காந்திஜியின் அறநெறிகள் அனைவருக்கும் பரவ வேண்டுமென்று எண்ணி, மக்கள் தங்களது பிரியமானவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
காந்தியின் அறவழி சென்று, நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்க செய்வோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக