செவ்வாய், 3 அக்டோபர், 2017

இந்திய விடுதலைப்போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் அக்டோபர் 4 .1884 .


இந்திய விடுதலைப்போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்  அக்டோபர்  4 .1884 .

சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் ' ஞானபாநு ' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
சுப்பிரமணிய சிவா

இளமை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் 'சிவம்' என்றும், 'சிவா' என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்(நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.1902இல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சிலகாலம் ராஜயோகம் பயின்றார்.1906 சிவாவின் தந்தை மறைவெய்தினார்.
1904-1905-ல் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் பெரிய நாடான உருஷ்யாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் காலனியாட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் முழக்கங்கள் எழுந்தன.
அரசியல் செயல்பாடும்,கைதும்
சிவா அவர்கள் 1906-07 திருவனந்தபுரத்தில் 'தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கினார், இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார்.அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார். தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை
சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான
பாரதியார் தூண்டிவிட்டார். 1908 இல் சிதம்பரனாரும்,சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர். 12.3.1908 இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.2.11.1912 இல் விடுதலையடைந்தார்.
இதழ் துவக்கம்
பிறகு சென்னையில் குடியேறினார். எழுத்துத் தொழிலை கைக்கொள்ள கருதி, ஞானபாநு என்ற மாத இதழைத் துவக்கினார். இதற்கிடையில் 15.5.1915 இல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916இல் 'பிரபஞ்ச மித்திரன்' என்ற வார இதழை அரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் 'நாரதர்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்.
மீண்டும் கைது
1920 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். 1921 வாக்கில் துறவி போன்று காவியுடை அணியத்துவங்கினார். ஸ்வதந்ரானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். 17.11.1921 இல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் தொழு நோய்வாய்ப்பட்டு அவதிபட்டார். படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில் 12.1.1922 இல் விடுதலையானார். விடுதலையான சிவா திரும்பவும் சென்னைக்கு வந்து, சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும், திரும்பவும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இதன் காரணமாக, ஓராண்டுகாலம் நன்னடத்தை பிணை கேட்டு அரசு வழக்குத் தொடுத்தது. 1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்ரஞ்சனதாசை கொண்டு செய்வித்தார். 1924இல் காசியில் வசித்துவந்த இவரது தாயார் தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது.

எழுதிய நூல்கள்

1. மோட்ச சாதனை ரகசியம்
2. ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்
3. அருள் மொழிகள்
4. வேதாந்த ரகஸ்யம்
5. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்
6. ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை
7. சச்சிதானந்த சிவம்
8. பகவத்கீதா சங்கிலகம்
9. சங்கர விஜயம்
10. ராமானுஜ விஜயம்
11. சிவாஜி (நாடகம்)
12. தேசிங்குராஜன் (நாடகம்)
13. நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)

இறப்பு

பாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து பாப்பாரப்பட்டியை 22.7.25 இல் வந்தடைந்தார். 23.7.1925 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தம்முடைய நாற்பத்தோராவது வயதில் சிவா மறைந்தார்.


இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்.
விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர்.
இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.
தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினார். 1904- 1905-ல் நடந்த ரஷிய- ஜப்பானியப் போரில் பெரிய நாடான ரஷியாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906-ல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார்.
நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தே மாதரம்' எனும் முழக்கங்கள் எழுந்தன. அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.
சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.
உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார். இந்நிலையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.
முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.
தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.
பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது.
இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார். 22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இயற்கை எய்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக