ஞாயிறு, 1 அக்டோபர், 2017

உலக வன்முறையற்ற நாள் ( International Day of Non-Violence ) அக்டோபர் 2 .


உலக வன்முறையற்ற நாள் ( International Day of Non-Violence ) அக்டோபர் 2 .

அனைத்துலக வன்முறையற்ற நாள் ( International Day of Non-Violence ) என்பது மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வரலாறு
2007 , சூன் 15 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2 ஆம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக ஏகமனதாகத் தீர்மானித்தது  . உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி,
அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அகிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், சனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தவை என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக அகிம்சை தினம் அக்டோபர் 2.

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் திகதியாகும்.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007 இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.
வன்முறையாலும், போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார். இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர். ‘அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள் வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை” என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலாவது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது ‘சகிப்புத்தன்மை இன்மையாலும், மோதல்களாலும் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்துவரும் ‌நிலையில், எண்ணற்ற மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திர இந்தியா ‌பிறப்பதற்குக் காரணமான மாகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை ‌மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்”. என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் ‌கி மூன் தெரிவித்திருந்தார்.
அந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ”அதிகரித்துவரும், கலாசாரக் கலப்பால் ஏற்படும் பதற்றத்தையும், சகிப்புத்தன்மை ‌இன்மையால் ஏற்படும் மோதல்களையும் உலகம் உணர்ந்து வருகிறது. இதனால் ‌தீவிரவாதத்தின் ஆதிக்கமும், வன்முறையைத் தூண்டும் கருத்துக்களும் பலமடைந்து வருகின்றன. மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள் ‌மீது நடத்தப்பட்ட அடக்குமுறைத் தாக்குதல்களைக் குறிப்பிட்ட அவர்: மகாத்மாவின் கொள்கைகளைப் ‌பின்பற்றி அகிம்சை முறையில் ஆயுதங்களைத் தொடாமல் போராடுபவர்களின் ‌மீது ஆயுதப் படைகள் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் குடியுரிமைகளுக்காக ‌மிகப்பெரிய இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் மகாத்மா காந்தி. அவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்வில் அகிம்சையைப் ‌பின்பற்றினார், அதன் மூலம் எண்ணிலடங்கா மனிதர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தார்.” என்றார்.
அக்கால கட்டத்தில் காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலும் கூட பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும் கடைசிவரை தனது கொள்கையிலிருந்து அவர் விலகவேயில்லை. அவரின் மன அழுத்தத்தினால் அகிம்சை முறையில், எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய முடியும் என்பதை உணர்த்தினார். இன்றைய சூழலிலும் காந்திஜியின் அகிம்சை கொள்கைகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதால், காந்தியக் கொள்கைகளை பின்பற்றி அகிம்சை கல்வியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்ப்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி ‘குஜராத்தி”. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இத்தம்பதியினர் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு ‘பாரிஸ்டர் (barrister)” எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்று தன் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் அவ்வேலையும் பறிபோனது. அச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி அங்கு பயணமானார்.
அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாபிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென்னாபிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி ஆங்கிலேயரின் நிறவெறி அடாவடித்தனத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
தனது ஒப்பந்தக்காலம் (1906) முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நடவடிக்கை எடுப்பது பற்றி அறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, ‘தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லை” எனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு அத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ‘ஜோகார்னஸ்பேக்” நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக்கிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். ஆரம்பத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். தாயகத்தில் மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். இதனால் கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தலைமையை ஏற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
அகிம்சைப் போராட்டத்தின் பலம் எத்தகையது என்பதற்கான ஒரு உதாரணமாக இந்தியாவில் 1930 இல் காந்தி மேற்கொண்ட ‘உப்பு பேரணி” காணப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “உப்பு சட்டங்களையும்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் சீர்குலைக்கப்போவதாக காந்தி கூறியபோது, அவரது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட சந்தேகப்பட்டனர். ஆனால், தான் தீர்மானித்தபடி, கடலுக்குள் 247 மைல்கள் தூரம் காந்தி பவனி சென்றார். காந்தியின் இந்த செய்கை மக்களின் மனதை உலுக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டதுடன் உப்புச் சட்டத்திற்கெதிராக எதிர்ப்பு செய்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிரவைத்தது. 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு!” என்ற போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.
இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.
1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின் ஆயுதம் அல்ல.
2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.
3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.
4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.
5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.
என்பவையே அவை.
சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், “வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.
1999 இல் சான்பிரான்ஸிஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட சிவில் உரிமையாளரும் சமாதான செயற்பாட்டாளருமான டேவிட் ஹார்ட்சோ மற்றும் சென் போல் சமூக அமைப்பாளர் மெல் டுன்கன் ஆகியோர் ஹேக் நகரில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு பின்னர் மேற்கொண்ட முயற்சியால், உலகம் பூராவும் தொண்டர்களை ஏற்படுத்தி, ஒரு அஹிம்சை வழித் தலையீட்டு படைக்கான தொடக்கத்தை இட்டனர். வன்முறையில் இருந்து உலகத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். ஒரு சமாதான இராணுவத்தை’ (சாந்தி சேவா) ஸ்தாபிக்கும் மகாத்மா காந்தியின் கனவின் நிறைவேற்ற ஆரம்பம் என்று இதனைக் கொள்ளலாம்.
காந்தியின் அகிம்சை போராட்டத்தின் அடுத்த அம்சம் சர்வோதய’ ஆகும். பெரும்பான்மையினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நன்மை பெறுதலை இது குறிக்கிறது. இதனை மனதிற்கொண்டு தான், வினோபா பாவே மூலம் மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தை’ ஸ்தாபித்தார். தொண்டர் படைகளை அமைத்த காந்தி, ஆச்சிரமங்களில் இருந்து அவர்களை கிராமங்களுக்கு அனுப்பி சமூக சேவையில் ஈடுபடுத்தினார். வினோபா பாவே காந்தியின் வழிகாட்டியால் அமைத்த ‘சர்வோதய இயக்கம்” இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தொடர்கிறது. இந்தியா முழுவதிலும் ஆச்சிரமங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, கிராமப்பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிமனை வசதிகள் வழங்கப்படுகின்றன.
‘சுவராஜ்” என்பதற்கு ஹிந்தி மொழியில் ‘சுதந்திரம்” என்று பொருள். ஆனால், காந்தியைப் பொறுத்தவரையில் ‘சுவராஜ்” கோட்பாடானது, சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விடவும் கூடுதல் அர்த்தத்தை கொடுக்கிறது. “எம்மை நாமே ஆளுவதற்கு கற்றுக் கொள்ளுதல் சுவராஜ் ஆகும். சுவராஜ் (சுதந்திரம்) என்ற எனது கனவானது. ஒரு ஏழை மனிதனின் சுவராஜை குறிக்கிறது” என்று காந்தி கூறினார். அதனால், காந்தி கிராமிய பொருளாதாரம், உள்ளூர் பொருளாதாரம் என்பவற்றை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தொழில் செய்வதற்கு வசதியளிக்கப்படுகிறது. இதனால், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு முடிகிறது.
தனிநபர்களையும் சமூகங்களையும் அவற்றின் அடி மட்டங்களில் பலப்படுத்தும் பொழுது, தமது சமூகங்களில் பிரதான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் காத்திரமான முறையில் ஈடுபடுவதற்கும் பங்குபற்றுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முரண்பாட்டு மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது மிக அவசியமானது. இதனை மகாத்மா காந்தி அப்போதே கூறிவிட்டார்.
காந்தியின் சுவதேசி கோட்பாட்டினை நோக்குமிடத்து உள்ளூர் பொருளாதாரம், தேசிய மற்றும் இன உணர்வு, ஒருவருக்கொருவர் உதவுவதை ஊக்கப்படுத்துதல் மற்றும் உள்ளூர் வளங்கள், திறமைகளை கட்டியெழுப்புதல் என்பதையே வெளிப்படுத்துகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துவதற்கான திறமை மற்றும் மக்களின் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையிலானது இது. சுவதேசி, அதாவது பொருளாதார விவகாரங்களில் சுய ஒழுங்குபடுத்தலை இது குறிக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், காந்தியின் கொள்கைகள் ஹமுரண்பாடுகளுக்கான தீர்வு’ என்ற நவீன மேலைத்தேய கோட்பாட்டின் அடிநாதமாக இருக்கிறது. காந்தியைப் பொறுத்தவரையில், ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளினூடாக வெறுமனே தீர்வைக் காணுவது அன்றி, சுய புரிதலை எய்துவதும் தான். ஹவாழ்க்கையில் ஒருமைப்பாடே’ அவரது அடிப்படை.
அகிம்சையானது மிகவும் பலம்மிக்கதொன்று. இந்த பலத்தின் பின்னால் இருப்பது ஆயுதம் அல்ல, அது மக்களாதரவு. முரண்பாடு பற்றிய மரபு சார்ந்த சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு அடிப்படை விலகலை சமூக போராட்டத்திற்கான அகிம்சை அணுகுமுறை’ பிரதிநிதித்துவப் படுத்துகிறது. பொது மக்களின் அங்கீகாரத்தின் மீதே ஆட்சியாளர்களின் அதிகாரம் சார்ந்திருக்கின்றது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அகிம்சைப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக போராட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பமான, அகிம்சையுடன் தொடர்புபட்ட ஒத்துழையாமையானது, மகாத்மா காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் பரிச்சயமானது. “மனித குலத்தின் பயன்பாட்டிற்காக கிடைப்பவைகளில் உயர்வானது அகிம்சை. மனிதனின் புத்தி சாதுரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட அழிவு ஆயுதங்களின் பலத்தை விடவும் இது பலமானது” என்று காந்தி அகிம்சை பற்றிக் கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக