சனி, 31 ஆகஸ்ட், 2019

உலக கடித தினம் செப்டம்பர்-1



உலக கடித தினம் செப்டம்பர்-1

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்ட ஒரு விஷயமாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார்.
இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.



கடிதம் எழுதலாம் வாங்க!

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’ என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில் சேர்ப்பார்கள்.
பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா? இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. அதனால்தான் அது குறித்துப் பாடப் புத்தகங்களிலும் படித்துவருகிறீர்கள்!.
தனிப்பட்ட வகையில் எழுதப்படும் கடிதங்கள், அலுவலக மற்றும் வணிக நோக்கங்களுக்காக எழுதப்படுபவை, அரசியல்ரீதியானவை எனக் கடிதங்கள் பல வகைப்படும். புகழ் பெற்ற தலைவர், எழுத்தாளர்களின் கடிதங்கள் அவற்றின் ஆழமான கருத்துகளுக்காகப் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் அடைபட்டிருந்தபோது மகள் இந்திராவிற்கு எழுதிய ‘மகளுக்குக் கடிதம்’ இந்த வகையில் புகழ் பெற்றவை.
தகவல் தொடர்பின் முக்கிய அம்சமான கடிதம் எழுதுதலை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டிக் கடிதம் எழுதும் போட்டிகள்கூட நடத்தப்படுகின்றன. கடிதம் எழுதும் கலையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவரால் தொடங்கப்பட்டது உலகக் கடிதம் எழுதும் தினம்.
சில நாடுகளில் டிசம்பர் 7 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதுதவிரப் பல்வேறு நாடுகளும் கடிதம் எழுதுதலை ஊக்குவிப்பதற்காகத் தேசிய கடிதம் எழுதும் நாளை தனியாகக் கொண்டாடுகிறார்கள். கடிதம் எழுதுவதை மறந்துவிட்ட இந்தக் காலத்தில் அதை மீட்பதுதான் அனைவரின் நோக்கம்.
உலகக் கடிதம் எழுதும் நாளை முன்னிட்டு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பேனா, பேப்பர் எடுங்கள். ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே உங்கள் கைப்பட எழுத முயற்சி செய்யுங்கள். சந்தேகம் எழுந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கேளுங்கள்.
கடிதம் எழுதும் பழகத்தால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நட்பு பாராட்டுவது, நயமாக நாம் சொல்ல வருவதைத் தெரிவிக்கும் பழக்கம் பலப்பல திறமைகள் கிடைக்கும். ஊரில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு நீங்கள் கைப்பட கடிதம் எழுதினால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் கடிதங்கள் உங்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டும்.



காணாமல்போன கடிதங்கள்...!

 (செப்டம்பர் 1-ந்தேதி) உலக கடித தினம்.

கடிதம் என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் எழுச்சி மிகு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகும். கடிதம் எழுதுதல் என்பது ஒரு தனிக்கலை. கடிதம் தகவல் பரிமாற்றத்திற்கான களம்.

ஒருவர் பிறரிடம் நேரடியாகப் பேச முடியாத சூழல் உருவாகும் போது உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகளை வார்த்தைகள் மூலம் புலப்படுத்தும் முறைமையாக கடிதங்கள் கருதப்படுகின்றன. கடிதங்கள் இரு தனிநபர்களுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. இது எழுத்து வடிவிலான உணர்வுப் பரிமாற்றம். இல்லை. உறவுப் பரிமாற்றம்.

தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் கடிதம் எழுதும் முறையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம் தான் கடித தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மின்னல் வேகத்தில் தகவல்களைப் பரிமாற மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப் எனப் பல வசதிகள் இருப்பினும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் அறிந்த ஒரே தகவல் பரிமாற்ற வழி கடிதம் மட்டும் தான்.

எப்போது கடிதம் வரும் என ஏங்கிக் கிடந்தவர்களும் உண்டு. ஏன் இந்தக் கடிதம் வந்தது என்று பயந்து நடுங்கியவர்களும் உண்டு. காரணம் கடிதம் தாங்கி வரும் செய்தி இன்பமா? துன்பமா? தெரியாது.

எனவே வீட்டு வாசலில் ‘தபால்’ என்ற குரல் கேட்டாலே வீடு மட்டுமல்ல அந்தத் தெருவே பரபரப்பாகிவிடும். வந்த கடிதத்தை ஒருவர் விடாமல் படித்து மகிழ்ந்ததுடன் உடனடியாகப் பதில் கடிதத்தையும் எழுதித் தபாலில் சேர்ப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களை வாழ்வியலோடும் சமூக எதார்த்தத்தோடும் உறவுகளை, நண்பர்களை, பகைவர்களைக் கூட கட்டிப்போட்ட மாபெரும் மக்கள் தொடர்பு சாதனமாக கடிதம் இருந்தது.

ஆனால் இன்றைய கணினி உலகில் கடிதம் அனுப்புவதும், வருவதும் விலை மதிக்க முடியாத பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வாக மாறிவிட்டது.

நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், வணிகக் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள் எனக் கடிதங்கள் பல வகைப்பட்டாலும் ஒவ்வொன்றும் ஒருவித ஆழமான, அழகான கருத்தினை வெளிப்படுத்துபவை.

கடிதம் எத்தன்மைதாயினும் இதன் மூலம் எழுத்து, சிந்தனை, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நயம்படக் கருத்துரைக்கும் பாங்கு, நட்பு பாராட்டுவது எனப் பல திறமைகள் வெளிப்படுகின்றது. இவற்றில் தனி நிலைக் கடிதங்களைக் காட்டிலும் பொது நிலைக் கடிதங்கள் சமூகத்திற்கானதாக இருப்பதால் அவை மக்களின் மனங்களில் ஊடுருவி உணர்வோடும் உதிரத்தோடும் கலந்து விடுகின்றன. இதற்கு பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கடிதங்களே சாட்சி.

தமிழர்தம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அரசியல் என அனைத்துத் தளங்களிலும் இழந்த அடையாளங்களை மீட்கப் போராடிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா. கட்சியினரின் கருத்துகளை அறிவதற்கும், தொண்டர்களுக்குச் சமகால அரசியல் போக்குகளை அறிவிப்பதற்கும், தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கும் ‘தம்பிக்கு...’ என அவர் எழுதிய கடிதங்கள் அரசியலில் ஓர் புதிய பாதையை வகுத்தன.

அண்ணாவைத் தொடர்ந்து திராவிடக் காரர்களை மட்டுமன்றி வெகுஜன மக்களையும் காலந்தோறும் தன் கடிதங்களால் கட்டிப்போட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். ‘உடன் பிறப்பே’ என அழைக்கும் அவரின் கடிதங்கள் முற்போக்குச் சிந்தனைகளை, மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முழுப்பகுத்தறிவுக் கருத்தாக்கங்களாகத் திகழ்ந்தன. கலைஞரின் எழுத்துக்கள் சுருக்கமானதாகவும் எளிமையான தெளிந்த கருத்தாழம் மிக்க தன்மை கொண்டதாகவும் இருந்தன.

தொண்டர்களுக்கான அறிவுரைகளையும் நாட்டு நடப்பையும் பிற கட்சியினரும் படித்து ரசிக்கும் அளவில் இலக்கிய நயம் குழைத்துத் தந்ததால் கலைஞரின் கடிதங்கள் காலம் கடந்தும் பேசப்படுவது மட்டுமன்றி, தொண்டர்கள் அவரின் கடிதங்களுக்காக ஏங்கும் நிலையையும் உருவாக்கியது. எந்தப் பிரச்சினையானாலும், கடிதம் எழுதி அதற்குப் பதில் கடிதம் பெறுவதையே பெரும் தீர்வாக எண்ணிக் கடிதங்களை வரைந்தார்.

மூதறிஞர் ராஜாஜி தனக்கு வரும் கடிதங்களைத் தவறாமல் படித்து அதற்குத் தன் கைப்பட பதில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு சிறையிலிருந்த போது மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதம் மிகவும் புகழ் பெற்றவை. மகாகவி பாரதி தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அன்பை வெளிப்படுத்தினாலும் மொழிப் பற்றையும் புரட்சிகர கவிதைகளையும் பறைசாற்றி நிற்கும்.

யார் மீதாவது கோபம் வந்தால் அவ்வளவுதான், அவருக்குக் கோபமாக கடிதம் எழுதும் பழக்கமுடையவர் ஆபிரகாம் லிங்கன். துன்பமான சூழலிலும் மனைவிக்கு அன்பையும் நம்பிக்கையையும் தன் கடிதங்கள் வழியே பகிர்ந்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். தமிழறிஞர்கள் மு.வ., உ.வே.சா. போன்றோரின் கடிதங்கள் இலக்கியச் செழுமைக்கும் தொன்மைக்கும் சான்றுகளாக இன்றும் பேசப்படுகின்றன.

கடிதம்! வெறும் வார்த்தைகளைத் தாங்கி வரும் காகிதம் அல்ல. எழுதுபவரின் எண்ணங்களைப் படிப்போரின் நெஞ்சில் பதிய வைக்கும் பண்பாட்டுப் பெட்டகம். உணர்வோடும் உறவோடும் கலந்து நிற்கும் காலக் கண்ணாடி.

மகன் அம்மாவுக்கு எழுதும் கடிதம் அன்பின் வெளிப்பாடு. தந்தை மகனுக்கு எழுதும் கடிதம் அறிவுரைகளின் தொகுப்பு. நண்பர்களின் கடிதம் நட்பின் உன்னதப் பிரதிபலிப்பு. காதலர்களின் கடிதம் புது விடியலை வரவேற்கும் வாசல்கள். இப்படிக் கடிதங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் எழுத்தாளனை அறிமுகப்படுத்தும் அடையாளச் சீட்டு.

மனித வாழ்வின் சாட்சியாகத் திகழும் கடிதங்கள் வாழ்க்கையை, காலத்தைப் பதிவு செய்கின்றன. எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த கடிதத்தின் முக்கியத்துவத்தை இழந்து நிற்கும் இன்றைய தலைமுறையிடம் எழுதும் வழக்கத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் கலாசாரப் பரிணாமம் அழிந்து விடாமல் பாதுகாக்க முடியும். இல்லையெனில் இனி வரும் தலை முறைகளுக்குக் கடிதம் காட்சிப் பொருளாகி விடும்.  நன்றி தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக