வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

உலக பூனைகள் தினம் ஆகஸ்டு 8-ந் தேதி



இன்று (ஆகஸ்டு 8-ந் தேதி) உலக பூனைகள் தினம்.

“யானைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்” என்பது ஒரு தமிழ் பழமொழி. அதற்கேற்ப, பூனைகளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதியை உலக பூனைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். கடந்த 2002-ம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17-ந் தேதியும், ரஷியாவில் மார்ச் 1-ந் தேதியும் பூனை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் பூனைகளை வீட்டில் வளர்க்கத்தொடங்கினர் என்கிறது வரலாறு. எகிப்தியர்கள் பூனைகளை புனிதமாக கருதினர். பூனை தலை மற்றும் பெண்ணின் உடலமைப்பு கொண்ட கடவுள் உருவத்தை எகிப்தியர்கள் வணங்கியுள்ளார்கள். பூனைகளைக் கடத்தி, வெளிநாட்டில் விற்றால், தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. வீட்டில் பூனை இறந்தால், ஆண்கள் தங்கள் புருவத்தை மழித்து, துக்கம் அனுசரித்தனர்.

பொதுவாக, வீட்டுப்பூனை மற்றும் காட்டுப்பூனை என்று இரு வகைப்படும். உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் உள்ளன. இவற்றில் 40 இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட இனங்களாகும். இந்தியாவில் 8 பூனை இனங்கள் உள்ளன. பூனை மிகவும் சுத்தமான பிராணியாகும். தன் உடலை அவ்வப்போது நக்கி, சுத்தம் செய்துகொள்ளும்.

இரை தேட உதவும் உடல் அமைப்பைக் கொண்டவை பூனைகள். மனிதர்களுக்கு உள்ளதைவிட அதிகமான முதுகுத்தண்டு எலும்புகள் உள்ளதால், பூனையின் உடல் அதிக அளவில் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. அதனால், முதுகுத்தண்டை வளைத்து எழ முடியும். தன்னுடைய தலை நுழையும் அளவு ஓட்டை இருந்தால்கூட அதன்மூலம் அது வெளியேறும் ஆற்றல் கொண்டது. அதன் காதுகள் 180 டிகிரி சுழலும் ஆற்றல் கொண்டது. ஒரே சமயத்தில் இரண்டு காதுகளையும் வெவ்வேறு பக்கம் சுழற்றும் ஆற்றல் கொண்டது பூனை. அவற்றின் கண்களுக்கு மூன்று இமைகள் உண்டு. மூக்கிலுள்ள மீசைகள் அதை வழிநடத்துகின்றன. மூக்கின் முகட்டிலுள்ள பகுதி, மனிதனின் கைரேகை போன்ற தனித்தன்மை கொண்டது. ஒரு பூனைக்கு உள்ளது போன்று மற்றொரு பூனைக்கு இருக்காது. மூக்கின் நேர்கீழே இருக்கும் பொருட்களை பூனையால் பார்க்க முடியாது.

காட்டுப்பூனைகள் தனித்து வாழும். ஆனால், வீட்டுப்பூனைகள் கூட்டமாக வாழும். பொதுவாக இரவு நேரங்களில் அதிகநேரம் விழித்திருக்கும். குறிப்பாக, பூனைக்குட்டிகள் தூங்கும்போதுதான், வளர்ச்சிக்கான இயக்குநீர் (ஹார்மோன்) சுரக்கும். ஆகையால், ஒரு நாளில் சுமார் 12 முதல் 16 மணி நேரம் வரை தூங்கும். அது தன் வாழ்நாளில் சுமார் 70 சதவீத நேரம் தூங்கிக்கொண்டே இருக்கும். பொதுவாக தூங்குவதற்கு, உயரமான இடத்தையே தேர்ந்தெடுக்கும்.

பூனையின் கண்பார்வைத் திறன் கூர்மையானது. அதன் கேட்கும் திறனும் அசாத்தியமானது. எலி நடக்கும் சத்தத்தைக்கூட கேட்கும் ஆற்றல் அதற்கு உண்டு. அதிக அளவு வெப்பத்தை தாங்கக்கூடியவை. பூனைகள் 100 விதமான சத்தங்களை எழுப்பும். ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பொருள் உண்டு. அதை பிற பூனைகள் புரிந்துகொள்ளும்.

பூனைகள் இறைச்சி மற்றும் தாவர உணவு என்று இருவகை உணவுகளையும் உண்ணும் தன்மை கொண்டவை. மிதமான சூடு கொண்ட உணவுகளையே உண்ணும். மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உண்ணுவதில்லை. கடல் தண்ணீரை குடிக்கும் தன்மை கொண்டவை. பூனைக்கு பசும்பால் தரக் கூடாது. மேலும், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, திராட்சை, சாக்லெட் ஆகியவற்றை தரக்கூடாது.

பூனைகள் மனிதர்களோடு தோழமை உணர்வோடு பழகும் தன்மை கொண்டவை. மனிதர்களின் மீது தனது உடலைத் தேய்த்து தன் தோழமை உணர்வை வெளிப்படுத்தும். பூனைக்கு பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. எனவே, பூனையின் உடல்நிலை சரியில்லை எனில், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உரிய காலத்தில் நோய் தடுப்பூசிகளை போடவேண்டும். பூனைகள் சராசரியாக 7 முதல் 12 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. விதிவிலக்காக 38 ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த எமகாதகப் பூனையும் உண்டு. மேலைநாடுகளில் பூனையின் உரோமத்திலிருந்து பெண்களுக்கான மேலாடைகள் செய்யப்படுகின்றன. ஒரு மேலாடை செய்ய 24 பூனைகளின் தோல் தேவைப்படும். மேலும், தொப்பிகள், போர்வைகள், கையுறைகள், பொம்மைகள் போன்றவையும் பூனைத்தோலால் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் பூனை குறுக்கே போனால், சிலர் அதை கெட்ட சகுனமாக கருதுவதுண்டு. இதே போன்ற நம்பிக்கை அமெரிக்காவிலும் உண்டு. ஆனால் அவர்கள், கருப்பு பூனை குறுக்கே போனால் மட்டுமே அதை கெட்ட சகுனமாக கருதுகிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் கருப்பு பூனை குறுக்கே போனால், அது நல்ல சகுனம்.

பூனை மரத்திலிருந்து இறங்கும்போது, தலையை கீழ் நோக்கி வைத்து இறங்காது. மிகக்குறுகலான பாதையிலும், மிகுந்த எச்சரிக்கையுடன், லாவகமாக, விழாமல் நடக்கும் ஆற்றல் கொண்டது. இதனால்தான், இவ்வாறு நடப்பவர்களை ‘பூனை நடை’ நடக்கிறார் என்கிறோம்.

உயரத்திலிருந்து பூனைகளை எப்படி தூக்கிப்போட்டாலும், அவை கீழே தரையில் விழும்போது, கால்களை ஊன்றி நிற்கும் தன்மை கொண்டவை. பூனையின் மூளை கிட்டத்தட்ட 90 சதவீதம் மனித மூளையைப் போன்றதே. அவற்றாலும், மனிதர்களை போல உணர்ச்சிகளைக் காட்ட முடியும். எங்கு சென்றாலும், தான் வசிக்கும் இடத்துக்கு சரியாக திரும்பி வரும் ஆற்றல் பூனைக்கு உண்டு. அதன் மூளையில் மின்காந்த சக்தி இருப்பதே காரணம். தன் உயரத்தைவிட ஆறு மடங்கு உயரத்தை தாண்டும் ஆற்றல் பூனைக்கு உண்டு. அலாஸ்காவிலுள்ள ஒரு நகரத்துக்கு பூனை ஒன்று 20 ஆண்டுகள் மேயராக இருந்துள்ளது. மெக்சிகோ நகரத்துக்கு 2013-ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் பூனை ஒன்றும் போட்டியிட்டது. வளர்த்த எஜமானர் இறந்த பிறகு, பூனை ஒன்றுக்கு 10.5 மில்லியன் டாலர் சொத்து கிடைத்தது.

1963-ம் ஆண்டு பிரான்ஸ் விண்வெளிக்கு அனுப்பிய பூனை, மீண்டும் உயிருடன் பூமிக்கு திரும்பி வந்தது பலருக்கும் ஆச்சரியம். டோவ்சர் என்ற பெண் பூனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சுமார் 24 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த இது, ஸ்காட்லாந்தில் ஒரு மது உற்பத்தி நிறுவனத்தில் வளர்க்கப்பட்டது. அது தன் வாழ்நாளில் 28,899 எலிகளை கொன்றதே, இதுவரை உலக சாதனையாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தெய்வீக தன்மை வாய்ந்தவர்களின் ஆன்மா, தற்காலிகமாக தங்கும் இடமாக, பூனையின் உடல் விளங்குகிறது என்று நம்புகிறார்கள் பவுத்தர்கள். இந்திய வாஸ்து சாஸ்திரம் பூனைகள் குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறது. சாம்பல் நிற பூனை அதிர்ஷ்டத்தின் அடையாளம். ஒரு வீட்டில் கருப்பு பூனை நுழைகிறது என்றால், அது அதிர்ஷ்டம். நீங்கள் வெளியே பயணம் கிளம்பும்போது, இடது புறமாக பூனை போனால், அது நல்ல சகுனம். வீட்டினுள் பூனை குட்டிகள் போட்டால், அந்த குடும்பத்தலைவருக்கு செல்வம் சேரும். அந்த வீட்டில் தீய சக்திகள் நுழையாது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒருவரை, பூனை பின்தொடர்ந்து சென்றால், அது அந்த குடும்பத்துக்கு செல்வத்தை கொண்டுவரும். ஒரு வீட்டில் பூனை இறந்தால், அது அந்த வீட்டுக்கு ஆகாது. பூனை தன் ஒரு காதை மூன்று முறை நக்கினால், வீட்டுக்கு விருந்தினர் வருவார். மூன்று கருப்பு பூனைகளை ஒன்றாக கண்டால், அது மிகுந்த அதிர்ஷ்டமாகும்.

முனைவர் வே.ஞானப்பிரகாசம், முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
நன்றி தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக