திங்கள், 29 ஆகஸ்ட், 2016

ஹாக்கி உலகின் முடிசூடா மன்னன் தியான்சந்த் பிறந்தநாள் ஆகஸட் 29.


ஹாக்கி உலகின் முடிசூடா மன்னன் தியான்சந்த் பிறந்தநாள் ஆகஸட் 29.
இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி 3
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு
காரண கர்த்தவாக விளங்கிய
தியான்சந்தின் பிறந்ததினமான ஆகஸ்ட் 29,
தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்பட்டு
வருகிறது. ஹாக்கி விளையாட்டின் மேஜிக் மேன்
என உலகம் போற்றும் அளவுக்கு விளையாடிய
தியான்சந்த், உத்தரப்பிரதேச மாநிலம்
ஜான்சியில் 1905 ஆக. 29 ஆம் தேதி
பிறந்தார். ஹாக்கி வீரர் சமேஷ்வர் தத்
சிங்குக்கு மகனாக பிறந்த தியான்சந்தின்
கவனம், இளம் வயதில் மல்யுத்தத்தின் மீதே
இருந்தது.
16 வயது சிறுவனாக இருந்த தியான்சந்த்,
இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்த போது,
அவரது ஆர்வம் ஹாக்கியின் பக்கம்
திரும்பியது. ஒவ்வொரு நாள் பணி
முடிந்த பின்னும், இரவு நேரத்தில் ஹாக்கி
விளையாடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார் தியான்சந்த்.
மின்னொளி வசதி இல்லாத கால
கட்டத்தில், நிலவொளியின் துணையுடன்
ஹாக்கி விளையாடிய தியான்சந்துக்கு
துல்லியமாக கணித்து ஆடும் திறன் மேம்பட்டது.
கோல் கம்பம் இடைவெளியை கணித்த
தியான்: ஒருமுறை ஹாக்கி
ஆடிக்கொண்டிருந்த தியான்,
கோலடிக்க முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தார். நடுவர்களை
அணுகிய அவர், கோல் கம்பங்களுக்கு
இடையிலான அளவு குறித்து
விவாதித்தாராம். நடுவர்கள் ஆய்வு
செய்தபோது, இரு கம்பத்துக்கும்
இடையிலான அகலம் சர்வதேச விதிமுறைப்படி
இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம், தியான்சந்த் எவ்வளவு
துல்லியமாகவும், நுணக்கத்துடனும் ஹாக்கி
ஆடினார் என்பதை உணர முடியும்.
வாழ்வை மாற்றிய நியூஸிலாந்து பயணம்:
1922 முதல் சுமார் 14 ஆண்டு காலம்,
ராணுவ ரெஜிமென்ட் ஹாக்கிப்
போட்டிகளில் விளையாடிய தியான்,
நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த
இந்திய ராணுவ அணியில் இடம் பிடித்தார்.
அங்கு நடைபெற்ற 18 ஆட்டங்களில் இந்திய
அணி 15 வெற்றிகளைப் பதிவு
செய்தது. 2 ஆட்டம் டிராவான நிலையில்,
ஒரு போட்டி தோல்வியில் முடிந்தது. 2 டெஸ்ட்
போட்டிகளில் தலா ஒரு வெற்றி, தோல்வியை
பதிவு செய்தது இந்திய அணி.
நியூஸிலாந்து பயணத்தில் சிறப்பாக
செயல்பட்ட தியான்சந்த்துக்கு,
ராணுவத்தில் பதவி உயர்வு கிடைத்ததோடு,
சர்வதேச ஹாக்கி உலகில் நுழைவதற்கான
வாய்ப்பும் கிடைத்தது. 1928 ஆம் ஆண்டு
ஒலிம்பிக்கில், ஹாக்கிப் போட்டிக்கு மீண்டும்
அனுமதி அளிக்கப்பட்டது. அதில் பங்கேற்கும்
இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக
1925 ஆம் ஆண்டு மாகாண அளவிலான
ஹாக்கிப் போட்டி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக
மத்திய முன் கள வீரராக விளையாடினார்
தியான். எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை
கடத்திச் சென்று கோலாக மாற்றும்
தயான்சந்தின் அற்புதமான ஆட்டம்,
பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியையும்,
ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில்,
இந்திய ஒலிம்பிக் அணியில் தியானுக்கான
இடமும் உறுதி செய்யப்பட்டது.
ஒலிம்பிக்கில் மும்முறை தங்கம்:
ஆம்ஸ்டர்டாமில் 1928-இல் நடைபெற்ற
ஒலிம்பிக் போட்டியில் தியான் சந்தின் ஆட்டம்
முக்கிய பங்கு வகித்தது. அரையிறுதிக்கான
தகுதிச் சுற்றில் 6 கோல்கள் அடித்த தியான்,
அரையிறுதி ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்தார்.
இதனால், 6-0 என்ற கணக்கில்
ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய
அணி.
உடல் நலக்குறைவு காரணமாக,
நெதர்லாந்துக்கு எதிரான இறுதி
ஆட்டத்தில் தியான் சந்த் விளையாட
முடியாமல் போனது. ஆனாலும், 3-0 என்ற கோல்
கணக்கில் இந்தியா வெற்றி
பெற்று, ஒலிம்பிக்கில் முதல் தங்கப்
பதக்கத்தை கைப்பற்றியது. அதிக கோல் அடித்தவர்
என்ற சிறப்பு தியான் சந்துக்கு (14 கோல்கள்)
கிடைத்தது. இதனால், ஹாக்கியின்
வித்தைக்காரர் என்ற
பாராட்டுக்குரியவரானார்.
1932-ஆம் ஆண்டில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில்
நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்,
ஹாக்கியில் 2 ஆவது முறையாக தங்கப்
பதக்கத்தை கைப்பற்றிய இந்தியா, இறுதி
ஆட்டத்தில் 24-1 என்ற கணக்கில்
அமெரிக்காவை வீழ்த்தியது. இந்த
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 35 கோல்கள்
அடிக்கப்பட்டன. அதில், 25 கோல் தியான் சந்த்
மற்றும் அவரது சகோதரர் ரூப்சிங் ஆகியோரால்
அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
1934-ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின்
கேப்டனாக உயர்த்தப்பட்டார் தியான்
சந்த். 1936-இல் பெர்லின் நகரில்
நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்
தியான்சந்த் தலைமையிலான இந்திய அணி,
இறுதி ஆட்டத்தில் 8-1 என்ற கோல்களில்
ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக்
கைப்பற்றியது. இதில், 3 கோல்கள் அடித்து
அசத்தினார் தியான்சந்த் என்பதோடு, அந்த
போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்றது
என்பதும் குறிப்பிடத்தக்கது. 22 ஆண்டுகள்
இந்திய ஹாக்கியில் முடிசூடா மன்னனாக
திகழ்ந்த தியான் சந்த், உலக ரசிகர்கள்
மத்தியிலும் தனக்கான ஒரு இடத்தை
உருவாக்கினார்.
வாழும் போது புறக்கணிப்பட்ட தியான்:
இந்தியாவின் 3ஆவது உயரிய விருதான
பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட
தியான், ஓய்வுக்குப் பின்னும் ஹாக்கியின்
வளர்ச்சிக்காக உழைப்பதை நிறுத்தவில்லை.
பல்வேறு சாதனைகளுக்கு
சொந்தக்காரராக திகழ்ந்த
அவருக்கு உரிய அங்கீகாரம்
வழங்கப்படவில்லை என்பது துரதிருஷ்டமே.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,
சிறப்பு சிகிச்சை வசதி கிடைக்காமல், எய்ம்ஸ்
மருத்துவமனையில் பொதுப் பிரிவில்
அனு
மதிக்கப்பட்ட அவர், 1979 }ஆம் ஆண்டு
டிசம்பர் 3-ஆம் தேதி உயிரிழந்தார்.
இறந்த பின் கௌரவிக்கப்பட்ட தயான் சந்த்:
எதிரணியினருக்கு சிம்ம
சொப்பணமாக திகழ்ந்த
தியான்சந்த், வாழ்வின் இறுதி நாள்களில்
புறக்கணிக்கப்பட்டார். ஆனாலும், அவரது
மறைவுக்குப் பின் தேசிய விளையாட்டு தினமாக
அவரது பிறந்தநாளை அறிவித்து கௌரவித்தது
மத்திய அரசு. மேலும், விளையாட்டுத்துறையில்
சிறந்து விளங்குவோருக்கு, தியான்சந்தின்
பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர்
விருதும் வழங்கப்படுகிறது.
தியான் சந்தின் சிறப்புகள்
ஹாக்கி ஆடிய 22 ஆண்டுகளில், உள்ளூர்
மற்றும் சர்வதேச போட்டிகளில் 1,000 கோல்களுக்கு
மேல் அடித்துள்ளார். டெல்லியில் உள்ள
தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில்
உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில்
அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம்
ஆகியவற்றுக்கு தியான்சந்த் பெயர்
சூட்டப்பட்டுள்ளது.

1936 ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய மேஜிக்
மேன் தியான்சந்தின் ஆட்டத்தைக் காண
செல்லுங்கள் என ஜெர்மனி பத்திரிகை
செய்தி வெளியிட்டது. லண்டனில்
உள்ள சுரங்க ரயில்பாதையில் உள்ள ஒரு
நிறுத்தத்துக்கு தியான்சந்தின் பெயர்
சூட்டப்பட்டுள்ளது.
1936 ஒலிம்பிக் போட்டியில் தியான்சந்தின்
ஆட்டத்தை பார்த்து ஜெர்மனியை ஆண்ட
சர்வாதிகாரி ஹிட்லர் அசந்து போனார்.
ஜெர்மனி குடியுரிமையுடன், அந்நாட்டு
ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி
தியான்சந்தை அழைத்துள்ளார் ஹிட்லர்.
அதற்கு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்த
தியான், ஹிட்லரின் கோரிக்கையை மறுத்து
விட்டாராம்.
நன்றி...தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக