திங்கள், 8 ஆகஸ்ட், 2016

நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு )


நண்பர்கள் தினம்  (ஆகஸ்ட்  மாதம் முதல் ஞாயிறு )
தோழனின் தோள்களும் அன்னை மடி... அவன் துாரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி' என்ற பாடல் வரி நட்பின் ஆழத்தை விளக்குகிறது. உறவினர்கள் இல்லாமல் கூட இருக்கலாம். நண்பர்கள் இல்லாமல் இருப்பது கடினம். உண்மையான நட்பு என்றுமே அழியாது. நட்பு என்பது மிகவும் நெருக்கமான, இனிமையான ஓர் உறவு. மிகத் துாய்மையானதும் கூட. நட்புக்கு மதிப்பளிக்கும் விதமாக ஆகஸ்ட் முதல் ஞாயிறு (ஆக., 7) நண்பர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. தினமும் சந்திக்கும் நண்பர்களை நினைவுபடுத்த தேவையில்லை எனினும் பள்ளி, கல்லுாரி கால நண்பர்களை நினைவுபடுத்தி, சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது நண்பர்கள் தினம்.

தொடரும் நட்பு : ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய, புதிய நண்பர்களின் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பழைய நண்பர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்', 'பேஸ்புக்', அலைபேசி, 'இ--மெயில்' மூலம் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்பை, திரும்பவும் உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. கருத்து வேற்றுமையினால்
நண்பர்களுக்குள் பிரிவு வருவது இயற்கைதான். அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும்.

நட்பை போற்றும் சில பொன்மொழிகள்...

நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக்
கொடுக்காதே.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களை காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்து.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, துாக்கி
விடுபவன் நண்பன்.
நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.
இன்று  நண்பர்கள் தினம் ஆகும். நட்பு என்பது முழுமையான மகிழ்ச்சி, விலை மதிப்பற்றது, ஈடு இணையில்லாதது, துன்பத்தை போக்கக்கூடியது, சுயநலமற்றது என நட்பு பற்றி விளக்கம் அளித்துக்கொண்டே போகலாம்.

நண்பர்களிடையே முறிவு என்பது வரக்கூடாது ஒன்று, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் நண்பர்களை பிரிந்துவிட்டால், இந்த தினத்தை பயன்படுத்தி உங்கள் உறவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணருங்கள்.

நண்பர்கள் குறித்து சில பொன்மொழிகள்

"பனைமரம்" தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
"தென்னைமரம்" தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
"வாழைமரம்" தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும். - கவிஞர்.கண்ணதாசன்
ஒரு நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பது தான் - எமர்சன்
புது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான் - புல்லர்
நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு, நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய் - வில்லியம் ஜேம்ஸ்
நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது, துயரத்தைப் பாதியாக்குகின்றது - பிரான்சிஸ் பேகன்
நல்ல நட்பை இழப்பதை விட, கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது - காந்தியடிகள்
உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும், உன் நண்பர்கள் அல்லர் - தோமஸ்.ஏ பெக்கட்
பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான், கோபக்காரன் தன்னையே இழக்கிறான் - பீட்டர் வெல்ஸ்
வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்வார், வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கின்றோம் - இங்கர்சால்
நிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பனைவனையும் நண்பனாக்கி கொள்ளாதே - ஜெசி
எல்லா நட்புகளுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக