வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு தினம் செப்டம்பர் 11,


மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு  தினம் செப்டம்பர் 11,
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள்குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சிப் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் . 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்குத் தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
இலக்கியப் பணி

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
“     தேடிச் சோறுநிதந் தின்று

    பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
    மனம் வாடித் துன்பமிக உழன்று
    பிறர் வாடப் பல செயல்கள் செய்து
    நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
    கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
    பல வேடிக்கை மனிதரைப் போலே
    நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

    ”
பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
படைப்புகள்

    குயில் பாட்டு
    கண்ணன் பாட்டு
    சுயசரிதை (பாரதியார்)
    தேசிய கீதங்கள்
    பாரதி அறுபத்தாறு
    ஞானப் பாடல்கள்
    தோத்திரப் பாடல்கள்
    விடுதலைப் பாடல்கள்
    விநாயகர் நான்மணிமாலை
    பாரதியார் பகவத் கீதை (பேருரை)
    பதஞ்சலியோக சூத்திரம்
    நவதந்திரக்கதைகள்
    உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
    ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
    சின்னஞ்சிறு கிளியே
    ஞான ரதம்
    பகவத் கீதை
    சந்திரிகையின் கதை
    பாஞ்சாலி சபதம்
    புதிய ஆத்திசூடி
    பொன் வால் நரி
    ஆறில் ஒரு பங்கு

இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்

பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908- 17. மே 1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள்
பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச்சட்ட சபையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகியுள்ளன.
தேசியக் கவி
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.
பெண்ணுரிமைப் போராளி
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பு

1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு இறந்தார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். யானை மிதித்து இறந்ததாகத் தகவல்கள் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்ததே உண்மை. அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

 வாய் பிளக்க வைத்த கவி மேதை

சுப்ரமணிய பாரதியின் அப்பா சின்னசாமி, அந்தக் காலத்திலேயே பருத்தி ஆலை வைச்சிருந்தாரு. எதிர்காலத்தில் தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கும் கனவோட இருந்தாரு. மகன் வளர்ந்தவுடன் அந்தத் தொழிற்பேட்டையை கவனித்துக் கொள்வான்னு நினைச்சாரு.

சுப்ரமணியனோட அம்மா ஐந்து வயசுலேயே இறந்து போயிட்டாங்க. அதோட சுப்ரமணியனுக்குப் படிப்புல பெரிசா ஆர்வம் இல்ல. பள்ளிக்கூடம் முடிஞ்ச ஒடனே தோப்பு, தோட்டம்னு சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவாரு. அப்புறம் அடிக்கடி தாத்தாவோட வீட்டுக்கும் போவாரு. அவரோட தாத்தா இலக்கியம், பாட்டெல்லாம் வாசிச்சுக் காட்டுவாரு. சுப்ரமணியனுக்குத் தமிழ் இலக்கணமும், தமிழ்க் காப்பியங்களும் ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு.

மற்றொரு பக்கம் பாடத்தைப் படிக்காமல், வீட்டுப் பாடம் செய்யாம பள்ளிக்கூடம் போன சுப்ரமணியனுக்குத் தண்டனை வழங்கினாங்க. “எனக்கு என்ன பிடிக்கிதோ, அதை யாரும் சொல்லித் தர மாட்டாங்களா”ன்னு சுப்ரமணியன் ஏங்கினான்.

சீக்கிரத்திலேயே பார்வையற்ற ஒரு படிப்பாளியைக் கண்டுபிடிச்சு, அவர்கிட்ட கம்ப ராமாயணத்தைக் கத்துக்கிட்டான். அதுக்கப்புறம் சொந்தமாகவே சுப்ரமணியன் தமிழ் இலக்கணம் கத்துக்க ஆரம்பிச்சான்.

ஒரு நாள் சுப்ரமணியனோட நண்பன் ஒருவன் எட்டயபுரம் ராஜாவோட அரண்மனைக்கு அழைச்சுட்டுப் போனான். ஏதாவது ஒரு குறளின் முதல் வார்த்தையையோ அல்லது ஒரு வெண்பாவின் ஒரு பகுதியையோ சொன்னால், சுப்ரமணியன் உடனடியா எஞ்சிய அடிகளைச் சொன்னான். சுப்ரமணியன் நகைச்சுவையா பேசுறதையும் கவிதை சொல்றதையும் எட்டயபுரம் ராஜா ரசிச்சார்.

“இவன் ஒரு குழந்தை மேதை. பெரிய கவிஞன் ஆவதற்கான அறிவு, உங்க மகன்ட்ட இருக்கு”ன்னு சுப்ரமணியனோட அப்பாகிட்ட சொன்னார் எட்டயபுரம் ராஜா.

ஏற்கெனவே சுப்ரமணியன் செஞ்ச விஷயங்கள் பிடிக்காம இருந்த அவனோட அப்பா, தன் மகன் இப்படிக் கவிதையே கதின்னு இருந்துறக்கூடாதுன்னு நினைச்சாரு. அதனால திருநெல்வேலில ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு சுப்ரமணியனை படிக்க அனுப்பினார். அப்படிச் செஞ்சா எல்லாம் மாறிடும்னு அவர் நினைச்சாரு.

அங்கேயும் சுப்ரமணியனோட நகைச்சுவை உணர்வும், கவிதை எழுதுற திறனும் சக மாணவர்கள்கிட்ட பிரபலமாச்சு.

ஒரு நாள் வகுப்பறையில சுப்ரமணியன் கொஞ்சம் கண் அசந்துட்டான். சுப்ரமணியனை எழுப்பி, நடத்துன பாடத்தில இருந்து ஆசிரியர் கேள்வி கேட்டார். சுப்ரமணியனுக்கோ பதில் தெரியல. கோபமடைஞ்ச ஆசிரியர், “மேகம் மழையைப் பொழியறது போல, நீ கவிதை சொல்வேன்னு கேள்விப்பட்டேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதிலே இல்லையே”ன்னு கேட்டாரு.

“மெத்தப் படித்த ஆசிரியரே, ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. மேகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் மழை பொழிகின்றன. நீங்க கேள்வி கேட்கிறதால இல்ல”ன்னு பட்டென்னு பதில் சொன்னான் சுப்ரமணியன். ஆனா, இறுதிப் பரீட்சைல ஃபெயிலான அவன் ஊருக்குத் திரும்பினான்.

இதனால் வருத்தப்பட்ட அவனுடைய அப்பா, எட்டயபுரம் ராஜாவைப் பார்த்து அரசவை பணியில சுப்ரமணியனைச் சேர்த்துவிட்டார். ராஜாவோட நண்பர்கள் சிலருக்கு சுப்ரமணியனைப் பிடிக்கல. அவர்கள்ல ஒருத்தர், “நீங்க பெரிய புத்திசாலி போலத் தெரியுது. ஆனா, பரீட்சைல தோத்துப் போயிருக்கீங்களே” என்று மறைமுகமாகக் கிண்டல் செய்ய ஆரம்பிச்சாரு.

இதனால ரெண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. கல்வியைப் பற்றி ஒரு விவாதம் நடத்தலாம்னு முடிவாச்சு. முதல்ல எதிர்த் தரப்பு ஆள் பேசினார். அடுத்ததாகப் பேச ஆரம்பிச்ச சுப்ரமணியன், எல்லோரும் ஆச்சரியப்படுற மாதிரி அற்புதமாகப் பேசினார். அவருடைய வாதம் எதிராளியையும் வசப்படுத்துச்சு.

அந்த விவாதம் முடிஞ்சதும், ஒரு முதிர்ந்த பண்டிதர் எழுந்து சுப்ரமணியன்கிட்ட போனாரு. “நீ உன் வயசை மீறுன புத்திசாலித்தனத்தோட இருக்கிறாய். அதனால், நீ ஒரு பாரதி (அனைத்தும் அறிந்த பண்டிதர்)”ன்னு பட்டம் சூட்டினார்.

அதுக்கப்புறம் சுப்ரமணியனை, எல்லோரும் பாரதின்னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. உலகம் போற்றும் கவிஞரா மாறின அவர், சுப்ரமணிய பாரதியாராக ஜொலித்தார்.
நன்றி -விக்கிப்பீடியா ,தி இந்து தமிழ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக