புதன், 21 செப்டம்பர், 2016

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 24.


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 24.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் (Sivanthi Adithan)
(செப்டம்பர் 24, 1936 - ஏப்ரல் 19, 2013)
தமிழ் செய்தி நாளேடுகள்
தினத்தந்தி மற்றும் மாலைமலரின்
உரிமையாளராகவும், முதன்மை
தொகுப்பாசிரியராகவும்
இருந்தவர். தினத்தந்தி நிறுவனர்
சி. பா. ஆதித்தனார் -
கோவிந்தம்மாள் தம்பதியரின்
இரண்டாவது மகன் ஆவார்.
கைப்பந்தாட்டத்தில் மிகுந்த
முனைப்பு உடையவர். இந்திய
கைப்பந்து விளையாட்டு சங்கத்
தலைவராகவும் இந்திய ஒலிம்பிக்
சங்கத் தலைவராகவும்
பணியாற்றியவர்.
2008ஆம் ஆண்டில் இவருக்கு
பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை குறிப்பு
தமிழ்ப் பத்திரிகை உலகின்
முடிசூடா மன்னர்; தமிழ்நாட்டில்
மாலைப் பத்திரிகைகள்
தோன்றுவதற்கு முன்னோடி;
இந்தியாவிலேயே அதிக
வாசகர்களைக் கொண்ட‘‘நம்பர் 1’’
நாளிதழாகத் திகழும்
‘‘தினத்தந்தி’’யின் அதிபர்;
விளையாட்டுத் துறையில்,
இந்தியாவின் பெருமையை
சர்வதேச அரங்கில் உயர்த்தியவர். –
இப்படி பல பெருமைகளுக்கு
உரியவராகத் திகழ்ந்தவர் டாக்டர்
பா.சிவந்தி ஆதித்தன். இந்திய
துணைக்கண்டத்தில், பத்திரிகை,
விளையாட்டு, கல்வி, தொழில்
முதலான பல்வேறு துறைகளிலும்
பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், பிறந்த
போதே வெள்ளிக்கரண்டியுடன்
பிறந்தவர் என்று கூறலாம். ஆம்;
இவருடைய தந்தையார் தமிழ்ப்
பத்திரிகை உலகில்
மறுமலர்ச்சியையும், பெரும்
திருப்பத்தையும் உண்டாக்கிய அமரர்
சி.பா.ஆதித்தனார் எம்.ஏ., பார்–அட்–
லா. அவர்கள்.
மாணவப் பருவம்
ஆதித்தனார்–கோவிந்தம்மாள்
தம்பதிகளின் இரண்டாவது
புதல்வராக, 1936 செப்டம்பர் 24–ந்
தேதி பா.சிவந்தி ஆதித்தன்
பிறந்தார். சென்னை
ராமகிருஷ்ணா
உயர்நிலைப்பள்ளியில் படித்த பின்,
மாநிலக் கல்லூரியில் படிப்பைத்
தொடர்ந்து, “பி.ஏ.’’ பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படிக்கும் போது
தேசிய மாணவர் படை (என்.சி.சி.)
தளபதியாக இருந்ததுடன், சென்னை
மாநகரில் உள்ள அனைத்துக்
கல்லூரிகளின் என்.சி.சி.
படைகளுக்குத் தலைவராக
(சார்ஜண்ட் மேஜர்) நியமிக்கப்பட்டார்.
சிறந்த வீரர் (கேடட்) விருது
பெற்றார்.
பத்திரிகைத் துறையில் கடும்
பயிற்சிகள்
சி.பா.ஆதித்தனார், 1942–ல்
‘‘தினத்தந்தி’’யைத் தொடங்கி,
பத்திரிகை உலகில் பெரிய
திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய
மக்களுக்கும் பத்திரிகை படிக்கும்
வழக்கத்தை உண்டாக்கினார்.
தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத்
துறையில் ஈடுபட சிவந்தி ஆதித்தன்
விரும்பினார். அதை
மகிழ்ச்சியுடன் வரவேற்ற
சி.பா.ஆதித்தனார், பத்திரிகைத்
துறைக்கு தேவையான அனைத்து
பயிற்சிகளையும் அளித்தார்.
அந்தப் பயிற்சிகள் மிகக் கடுமையாக
இருந்தன. அதிபரின் மகனாக
இருந்தபோதிலும், அச்சுக்
கோர்ப்பவராக – அச்சிடுபவராக –
‘‘பார்சல்’’ கட்டி அனுப்புகிறவராக –
பிழை திருத்துபவராக – நிருபராக
– துணை ஆசிரியராக
(பத்திரிகையின் அனைத்து
துறைகளிலும்) சிவந்தி ஆதித்தன்
பயிற்சி பெற்றார்.
தொழிலாளியுடன்
தொழிலாளியாக,
பத்திரிகையாளர்களுடன்
பத்திரிகையாளராக வேலை
பார்த்தார். ஒரு சிறந்த
பத்திரிகையாளராக பட்டை தீட்டப்பட்ட
பிறகு, நிர்வாகத் துறையிலும்
பயிற்சி பெற்றார்.
‘தினத்தந்தி’ நிர்வாகம்
பா.சிவந்தி ஆதித்தனிடம் 1959–ம்
ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப்
பொறுப்பை (டைரக்டர்) ஆதித்தனார்
ஒப்படைத்தார். அச்சமயத்தில்,
சென்னை, மதுரை, திருச்சி ஆகிய
மூன்று இடங்களில் இருந்து
மட்டுமே தினத்தந்தி வெளிவந்து
கொண்டிருந்தது. சிவந்தி
ஆதித்தனின் நிர்வாகத் திறமையில்,
தினத்தந்தி நாளுக்கு நாள்
வளர்ந்து, இப்போது பெங்களூர்,
மும்பை, புதுச்சேரி உள்பட 15
நகரங்களில் இருந்து
வெளிவருகிறது. அதிக
விற்பனையுள்ள தமிழ் நாளிதழ்
என்ற பெருமையை 40
ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து
தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கல்விப்பணி
திருச்செந்தூரில் ஆதித்தனார்
நிறுவிய கல்லூரியை,
பல்கலைக்கழகம் அளவுக்கு சிவந்தி
ஆதித்தன் உயர்த்தினார். டாக்டர்
சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங்
கல்லூரி, கோவிந்தம்மாள்
ஆதித்தனார் பெண்கள் கல்லூரி,
ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின்
தலைவராகவும், டாக்டர் சிவந்தி
ஆதித்தனார் உடற் கல்வியியல்
கல்லூரி, டாக்டர் சிவந்தி
ஆதித்தனார் கல்வி யியல் கல்லூரி
ஆகியவற்றின் நிறுவன
தலைவராகவும் இருந்து வந்த
சிவந்தி ஆதித்தன், மதுரை
காமராஜர் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை பல்கலைக்கழகம்,
திருச்சி பாரதிதாசன்
பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட்
உறுப்பினராகவும், சென்னை
பல்கலைக்கழக சிண்டிகேட்
உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
டாக்டர் பட்டம்
பத்திரிகை, விளையாட்டு, கல்வி
ஆகிய துறைகளில் செய்த
சேவையை பாராட்டி இவருக்கு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
1994 நவம்பர் 23–ந்தேதி ‘டாக்டர்‘ பட்டம்
வழங்கி கவுரவித்தது.
அண்ணாமலை பல்கலைக் கழகம் 1995–
ம்ஆண்டிலும், மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004–ம்
ஆண்டி லும், சென்னை
பல்கலைக்கழகம் 2007–ம் ஆண்டிலும்
டாக்டர் பட்டம் வழங்கின. 1982–ம்
ஆண்டும், 1983–ம் ஆண்டும்
தொடர்ந்து இரண்டு முறை
சென்னை மாநகர ஷெரீப் ஆக
நியமிக்கப்பட்டார்.
கோவில் பணி
தமிழ்நாட்டில், ஏராளமான கோவில்
திருப்பணிகளையும் சிவந்தி
ஆதித்தன் செய்துள்ளார். இந்த
திருப்பணிகளின் சிகரமாக
திகழ்வது, தென்காசி
காசிவிசுவநாதர் கோவில் ராஜ
கோபுரத்தை கட்டியதாகும். 200
ஆண்டுகள் மொட்டை கோபுரமாக
இருந்த இந்த கோபுரத்தை, 178 அடி
உயரத்துக்கு வானளாவும்
ராஜகோபுரமாக கட்டி 25–6–1990
அன்று குடமுழுக்கு விழாவை
நடத்தி வைத்தார்.
விளையாட்டு
விளையாட்டு துறையில், உலக
அரங்கில் இந்தியாவின்
பெருமையை உயர்த்தியவர் டாக்டர்
சிவந்தி ஆதித்தன். 1978–ம் ஆண்டு
டிசம்பரில், தாய்லாந்து நாட்டு
தலைநகரான பாங்காக்கில்
நடைபெற்ற 8–வது ஆசிய
விளையாட்டு போட்டிக்கு சிவந்தி
ஆதித்தன் தலைமையில் சென்ற
இந்திய அணி, 11 தங்க
பதக்கங்களையும், 11 வெள்ள
பதக்கங்களையும், 6 வெண்கல
பதக்கங்களையும் (மொத்தம் 28
பதக்கங்கள்) வென்றது.
இதுவரை, இந்தியாவுக்கு
வெளியே நடைபெற்ற
விளையாட்டு போட்டிகளில்
இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள்
கிடைத்தது இந்தப் போட்டியில்தான்.
சிறந்த விளையாட்டு வீரரான
சிவந்தி ஆதித்தன், துப்பாக்கி
சுடும் போட்டியில் மாநில
அளவிலும், தேசிய அளவிலும்
பதக்கங்கள் வென்றுள்ளார். அகில
இந்திய கராத்தே பெடரேஷன்
நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக்
சங்கத்தின் வாழ்நாள் தலைவராக
2000–வது ஆண்டு நவம்பர் 3–ந் தேதி
தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு
விளையாட்டு அமைப்புகளிலும்
அங்கம் வகித்து வந்த சிவந்தி
ஆதித்தன், விளையாட்டு
துறைக்கான உலக வரைபடத்தில்
இந்தியாவை ஆழமாக பதிவு
செய்தவர் என்று கூறினால், அது
மிகையல்ல.
பத்மஸ்ரீ விருது
இலக்கியம் மற்றும்
கல்வித்துறையில் சிறந்த சேவை
புரிந்ததற்காக, ‘தினத்தந்தி’ அதிபர்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு
கடந்த 2008–ம் ஆண்டில் மத்திய அரசு
பத்மஸ்ரீ விருது வழங்கி
கவுரவித்தது.
உலக பயணம்
சிவந்தி ஆதித்தன், பல முறை உலகை
வலம் வந்தவர். அமெரிக்கா,
இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா,
சீனா, ஜப்பான், மலேசியா,
சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு
அவர் பல முறை சென்று
வந்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக