புதன், 28 செப்டம்பர், 2016

தந்தை என். சிவராஜ் பிறந்த தினம் செப்டம்பர் 29.

தந்தை என். சிவராஜ் பிறந்த தினம் செப்டம்பர் 29.

வறுமை என்னவென்று தெரியாத
நமச்சிவாயம் -வாசுதேவி
தம்பதியருக்கு சென்னை
ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த
கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29
ஆம் தேதி பிறந்தார்.
4 ஆம் வகுப்பு வரை தன்
வீட்டிலேயே படித்தார். பின்
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி
பள்ளியில் அப்போது தலைமை
ஆசிரியராக இருந்த
டி.ஜான்ரத்தினம் அவர்களிடம் 5 ஆம்
வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக்
படிப்பை முடித்து வெஸ்லி
கல்லூரியில் 'இண்டர்மீடியேட்'
பயின்றார்.
பிறகு சென்னை
மாநிலக்கல்லூரியில் B.A பட்டம்
பயின்றார். இக்கல்லூரியில் டாக்டர்
இராதாக்கிருஷ்ணன் இவரின்
ஆசிரியராக இருந்தது
சிறப்புக்குரியது.
பின் சென்னை டாக்டர் அம்பேத்கர்
சட்டக் கல்லூரியில் சட்டப்
படிப்பினை முடித்தார். மேலும்
சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள்
பேராசியராக பணியாற்றினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட
தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
தனக்கு துணை நீதிபதி பதவி
தந்ததை ஏற்காமல் மக்கள் பணி
செய்வதை உயர்வாக கருதினார்.
1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம்
வயதில் அன்னை மீனாம்பாளை
வாழ்க்கை
இணையராக்கிக்கொண்டார்.
தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன
சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை
இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து
சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு
மறியல் போராட்டங்களில் தீவிரமாக
ஈடுபட்டனர்.
கல்யாணி, தயாசங்கர், பத்மினி,
போதி சந்தர் என 4 மகவுகள்
இவர்களுக்கு பிறந்தனர்.
பவுத்தத்தை தங்களுடைய
வாழ்வியல் நெறியாக இருவரும்
பின்பற்றினர்.
சென்னை மற்றும் அண்ணாமலை
பல்கலைக்கழகங்களில் செனட்
உறுப்பினராக தந்தை திகழ்ந்தார்.
அப்பொழுது மிகப்பெரிய
அந்தஸ்தில் உள்ள பெரு
முதலாளிகளுக்கு சரி நிகராக
பந்தயக்குதிரைகளை வைத்து
போட்டிகளில் வென்று காட்டியவர்.
ஆதிதிராவிட மக்கள் சட்டை
அணியக்கூடாது, காலில்
செருப்பு போடக்கூடாது
என்பவை மனித உரிமைக்கு
துரோகமானது. இதனை
கண்காணித்து நடவடிக்கை
எடுத்திட தனி அதிகாரியினை
நியமிக்க வேண்டுமென சட்ட
சபையில் முழங்கியவர்.
சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட
சம்மேளனத்தின்
பொதுச்செயலாளராகவும்,
சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர்
துணைத் தலைவராகவும்
இருந்தவர்.
இரட்டை மலை சீனுவாசனாருடன்
டாக்டர் அம்பேத்கர் அமைத்த அகில
இந்திய தாழ்த்தப்பட்டோர்
சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942
முதல் தலைவராக இருந்தவர்.
பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F ஐ
கலைத்து விட்டு அகில இந்திய
குடியரசுக் கட்சியை அமைத்தார்.
1956 முதல் அக்கட்சியின் தலைவராக
தந்தை சிவராஜ் ஏக மனதாக
நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டு
இறுதிக்காலம் வரை
அப்பொறுப்பினை வகித்தார்.
இந்து மதத்தினை புறக்கணித்து
விட்டு , மதம் மாறினால்தான் , நாம்
ஒரு தனி இனமாக உரிமைக்குரல்
எழுப்பிட முடியும்,போராட
முடியும் என வலியுறுத்தினார்.
நம் பூர்வீக பவுத்த நெறியினை
மக்களிடையே பரப்பினார்.
1945-46 ல் சென்னை மாநகர மேயராக
பதவி வகித்தார். அப்போது
கல்விக்காக 16 பள்ளிகளை
ஏற்ப்படுத்தி, இலவச உணவும்
அளிக்கச்செய்தார்.
1964 செப்டம்பர் 29 ஆம் நாள்
அதிகாலை 5.30 மணிக்கு
மாரடைப்பால் பரிநிப்பானம்
அடைந்தார்.
**********************************
புரட்சியாளர் அம்பேத்கருக்குப்
பிறகு அகில இந்திய அளவில் தலித்
மக்களின் தனிப்பெரும் தலைவராக
விளங்கியவர் தந்தை என்.சிவராஜ்
அவர்கள். அவர் பல்வேறு பதவிகளை
வகித்தவர். வழக்கறிஞர். சென்னை
சட்டக்கல்லூரியின் பேராசிரியர்,
அகில இந்திய அட்டவணைச் சாதிகள்
கூட்டமைப்பின் தலைவர். அம்பேத்கர்
உருவாக்க முயன்ற இந்திய
குடியரசு கட்சியை உருவாக்கி
இந்தியா முழுமைக்கு வளர்த்தவர்.
சென்னையில் வளர்ச்சிக்கு
வித்திட்ட முன்னோடிகளுள்
ஒருவர். இவ்வளவு சிறப்புகள்
வாய்ந்த தந்தை சிவராஜ் அவர்கள்
சென்னை மாநகராட்சியின்
உறுப்பினராகவும் பின்பு
மேயராகவும் பதவி வகித்தவர்.
தந்தை சிவராஜ் அவர்கள் சென்னை
மேயராக 20.11.1945 அன்று
பதவியேற்றார். 20.11.1946 அன்று
மேயர் பதவியை நிறைவு
செய்தார். இந்த இடைப்பட்ட தமது
பதவி காலத்தில் அவர் ஆற்றிய
பணிகள் ஏராளம் என்பதை
மாநகராட்சியின் அறிக்கைகள்
சான்றுகளாக விளங்குகின்றன.
அவர் தமது பதவி காலத்தில்
சென்னை நகராட்சியில் பல
சாலைகளை அமைத்தார் ,
பாலங்களை கட்டினார்,
குடிசைப்பகுதிகளை காரை
வீடுகளாக மாற்றியது, கண்வரும்
பூங்காக்களை அமைத்தார் (தி
நகரில் உள்ள நடேசன் பூங்கா,
சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள
நேப்பியர் பூங்கா உட்பட) மேலும்
பள்ளிகளை புதுபித்தது,
புதிதாக உருவாக்கியது,
பள்ளிகளில் மதிய உணவினை
அளித்தது உள்ளிட்ட பல பணிகளை
அவர் நிறைவேற்றினார். இவற்றில்
சிவராஜ் அவர்கள் நிகழ்த்திய
சாதனைகளில் சிகரமானது
சென்னையில் மிக பிரமாண்டமான
ஒரு விளையாட்டுத் திடலை
அமைத்தது.
மக்கள் விளையாட்டுத் அரங்கம்
உருவாக்கம் (People Stadium)
இன்றைக்கு சென்னையை
தெரிந்தவர்களுக்கு சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
பக்கத்தில் உள்ள மூர் மார்க்கெட்
பகுதியைத் தெரிந்திருக்கும், அந்த
இடத்திற்கு அருகில் சென்னை
மாநகராட்சிக் கட்டிடம், சென்னை
நகர அரங்கம் (Town Hall) மற்றும்
மிகப்பெரிய குளம் ஒன்றும்
இருந்தன. .குளத்தில் அல்லி மலர்கள்
நிறைந்திருந்ததால் அதற்கு அல்லி
குளம் என்று பெயர். அதற்கு
அருகில் கடந்த 1900களில்
மிகப்பெரிய பூங்கா ஒன்று
வெள்ளையர்களால்
அமைக்கப்பட்டிருந்தது, அதற்கு
மக்கள் பூங்கா (People’s Park) என்று
பெயர். அந்தப் பூங்காவைச் சுற்றி
ஏராளமான காலி நிலம் இருந்தது
அந்த காலி நிலத்தில்தான் மூர்
மார்கெட், சென்னை மிருகக்காட்சி
சாலை ஆகியன பிற்காலத்தில்
அமைக்கப்பட்டன.
இந்த காலி நிலப்பகுதியில்
பகுதியில்தான் பெரிய
விளையாட்டு அரங்கம் கட்ட
வேண்டும் மாநகராட்சியினால் 25
ஆண்டுகளுக்கு மேலாக
முயற்சிக்கப்பட்டது, ஆனால்
கைகூடவில்லை. பேராசிரியர்
சிவராஜ் அவர்கள் மேயர் ஆனவுடன்
மேற்கண்ட காலி இடத்தில் பெரிய
விளையாட்டு அரங்கம் கட்டப்படும்
என்று சென்னை மாநகர மன்றக்
கூட்டத்தில் தீர்மானத்தைக்
கொண்டு வந்து
நிறைவேற்றினார். அதன் பின்பு
உடனடியாகப் பணிகள் தொடங்கின.
பெரிய இடமாக இருந்தததால் அதை
சமப்படுத்துவதற்கு ராணுவத்தின்
உதவி கோரப்பட்டது. ராணுவம்
களத்தில் இறங்கி பெரிய பெரிய
தளவாடங்களைப் பயன்படுத்தி
நிலத்தை சமப்படுத்திக்
கொடுத்ததுடன், கட்டுமானப்
பணிகளையும் மேற்கொள்ள
உதவியது. விளைவாய் மிக
குறுகிய காலத்திற்குள் அதாவது
பத்து மாதத்திற்குள் விளையாட்டு
அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.
மக்கள் விளையாட்டரங்கம்
திறப்பு.
11 லட்சத்து நாற்பதாயிரம்
ரூபாயில் செலவில் கட்டி
முடிக்கப்பட்டத் திடல், ஒரே நேரத்தில்
35,000ம் பேர் அமரக்கூடிய மாபெரும்
விளையாட்டுத் திடலாக எழுந்தது.
அது மக்கள் பூங்கா இருக்கும்
இடத்திலேயே கட்டப்பட்டதால் அதற்கு
மக்கள் விளையாட்டு அரங்கம் (People
Stadium) என்று பெயரிடப்பட்டது.
மக்கள் விளையாட்டு அரங்கம் ஓர்
ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டது
மிக பிரமாண்டமான சாதனையாக
இருந்தது எனவே மாநகராட்சியின்
ஆண்டு விழாவை அரங்கத்தின்
திறப்பு விழாவிலேயே நடத்த
வேண்டும் என மேயர் சிவராஜ்
அவர்களின் தீர்மானத்தின் பேரில்
இரு பெரும் விழாவாக
நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கான பேரணி
யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள்
மற்றும் அலங்கார வண்டிகளோடு
சென்னை தீவுத் திடலில் தொடங்கி
தாமஸ் மன்றோ சிலை வழியாக
வந்தன. மன்றோ சிலை அருகில்
மேடையில் அமர்ந்திருந்த மேயர்
சிவராஜ் உள்ளிட்ட தலைவர்கள்
பேராணியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து சென்ற பேரணி
சென்ட்ரல் ரயில் நிலைய
மேம்பாலத்தினைக் கடந்து மூர்
மார்கெட் வழியாக மக்கள்
விளையாட்டு அரங்கை
வந்தடைந்தது. கலை நிகழ்ச்சிகள்,
போட்டிகள் நடந்தன. கோலாகலமான
நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
மேயர் சிவராஜ் அவர்களின்
பணியின் சாதனைகளை
பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதின.
மக்கள் விளைட்டுத் திடல் சர்வதேச
அளவில் அனைத்து
விளையாட்டுகளும்
விளையாடுவதற்கு தேவையான
வசதிகளைக் கொண்டதாக
இருந்தது. சர்வதேச கிரிக்கெட்,
கால்பந்தாட்டம், தடகளப் போட்டிகள்
ஆகியன நடத்துவதற்கு எற்ற
வகையில் மைதானம்
அமைக்கப்பட்டதால் சர்வதேசப்
போட்டிகள் தொடர்ந்து வந்த
ஆண்டுகளில் நடந்தன.
அதுவுமின்றி பள்ளிகள்,
கல்லூரிகள் மற்றும் உள்ளூர்
போட்டிகள் நடந்தவண்ணம் இருந்தன.
மாநகராட்சியின் ஆண்டு
அறிக்கையில் மக்கள் விளையாட்டு
அரங்கத்திற்கான தனி செலவின
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
எனவே தந்தை சிவராஜ் அவர்களின்
சாதனைகளில் மிகப்பெரியதாக
மக்கள் விளையாட்டு அரங்கை
அமைத்ததை ஆய்வாளர்கள்
குறிப்பிடுகின்றனர். ஆனால்
தொடர்ந்து வந்த ஆண்டுகளில்
அவரது சாதனை எப்படி
மறைக்கப்பட்டது. அது எவ்வாறு
நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.
டாக்டர்.அம்பேத்கர் சிலை
அமைப்பும் பெயர் மாற்றமும்
நாடு விடுதலைப் பெற்ற பிறகு
சென்னை மாகாணத்தில் காங்கிரஸ்
தலைமையிலான ஆட்சி
அமைந்தது. 1963ஆம் ஆண்டு முதல்
1967 வரை சென்னை மாநிலத்தின்
முதல்வராக பக்தவச்சலம் இருந்தார்.
இந்த காலத்தில் சென்னை
மாநகராட்சியின் மேயராக குசேலர்
பதவியேற்றார். தலித் சமூகத்தின்
தலைவர்களுள் ஒருவராக இருந்த
குசேலர் அவர்கள் தந்தை சிவராஜ்
அவர்களின் தொடர்பில் இருந்தவர்,
விளைவாக 28.11.1963 அன்று நேரு
விளையாட்டரங்கின்
நுழைவாயிலில் புரட்சியாளர்
அம்பேத்கர் சிலையை நிறுவி
அதை அன்றைய முதல்வர் பக்தவச்சலம்
அவர்களின் கைகளால் திறக்க
வைத்தார். மிக கம்பீரமாக வட்டமான
படிகளோடு பீடம் அமைக்கப்பட்டது.
படிகள் உயர்ந்து உச்சியில்
அம்பேத்கர் சிலை நிற்கும்படி
அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நேரு 1964
மே மாதம் 27ம் நாள் மறைந்தார்.
இதன் விளைவாய் நேருவின்
நினைவாக தந்தை சிவராஜ் அவர்கள்
கட்டிய மக்கள் விளையாட்டரங்கத்தின்
பெயர் நீக்கப்பட்டு நேரு
விளையாட்டரங்கம் என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
அதன் பிறகு எந்தவிதமான
மாற்றமும் இன்றி மக்கள் நேரு
விளையாட்டுத் திடலும், அம்பேத்கர்
சிலையும் பராமரிக்கப்பட்டு வந்தன.
பின்புதான் 30 ஆண்டுகள் கழித்து
நேரு விளையாட்டு அரங்கம் வேறு
தோற்றத்தை எடுத்தது.
நேரு ஸ்டேடியம் புதுப்பிப்பு
1993
கருணாநிதி அவர்களின் ஆட்சி
1990ல் கலைக்கப்பட்டப் பிறகு செல்வி
ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு
வந்தார். அவரது ஆட்சியில்
01.05.1992ம் நாளன்று தந்தை சிவராஜ்
கட்டிய நேரு விளையாட்டு அரங்கம்
இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும்
என்று அறிவித்தார். அதன்படி நேரு
விளையாட்டரங்கம்
இடிக்கப்பட்டதுடன், மேயர் சிவராஜ்
அவர்கள் திறந்ததைக் குறிக்கும்
கல்வெட்டுக்களும், நுழைவாயிலி
ல் இருந்த டாக்டர். அம்பேத்கர்
சிலையும் அகற்றப்பட்டன.
தொடர்ந்து 260 நாள்களுக்குள்
அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு
17.01.1993 அன்று திறப்பு விழா
நடைபெற்றது.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா,
பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும்
தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
ஏற்கெனவே இருந்த மக்கள்
விளையாட்டு அரங்கம் பத்து
மாதங்களுக்குள் கட்டப் பட்டதால்,
புதிய நேரு விளையாட்டு
அரங்கம் 6 மாதங்களுக்குள் கட்டப்பட
வேண்டும் என்று
நிர்ணயிக்கப்பட்டது. அது கின்னஸ்
சாதனையாகவும்
அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்ட முறையில் முதல் அரங்கம்
கட்டப்பட்டபோது தந்தை சிவராஜ்
அவர்கள் திறந்ததாக இருந்த
கல்வெட்டுகள் அகற்றப்பட்டு
கவனமாக மீண்டும்
அமைக்கப்படவில்லை. மேலும்
அம்பேத்கர் சிலையும் மீண்டும்
நிறுவப்படவில்லை. எனவே
மேற்கண்ட வரலாற்று சான்றுகளை
மீண்டும் அமைக்க வேண்டும் என
தலித் இயக்கங்கள் அரசிடம் கோரின.
ஆனால் ஜெயலலிதா அரசு அதை
காதில் போட்டுக்கொள்ளவே
இல்லை.
எனவே சென்னையில் தலித்
போராட்டக் கூட்டுக்குழு
அமைக்கப்பட்டது.
அம்பேத்கர் சிலையை மீண்டும்
நிறுவ வேண்டும், தந்தை சிவராஜ்
அவர்களின் பெயர் பொறித்த
கல்வெட்டுகள் மீண்டும் அமைக்கப்பட
வேண்டும் என்று கோரிக்கைகளை
முன்வைத்து போராட்டங்கள்
நடைபெற்றன.
இப்போராட்டங்களுக்கு பௌத்த
பெரியார் சுந்தராசனார் தலைமை
தாங்கினார். சொல்லின் செல்வர்
சக்திதாசன், டாக்டர் சேப்பன்,
உள்ளிட்ட முன்னணி தலைவர்களும்,
பல்வேறு அமைப்புகளைச்
சேர்ந்தவர்களும் போராட்டங்களை
முன்னெடுத்தனர். இதன்
விளைவாய் ஜெயலலிதா அரசு
இறங்கிவந்து அம்பேத்கர் சிலையை
மீண்டும் அமைக்க உறுதி தந்தது.
ஆனால் சிலையை நேரு
விளையாட்டரங்கின் முன்னே
வைக்காமல் பெரிய மேடு காவல்
நிலையத்தின் அருகில் சாலை
ஓரத்தில் வைத்துவிட்டது. இதனால்
தலித் மக்களிடையே கொதிப்பு
உருவாகி மேலும் போராட்டங்கள்
நடந்தன. இந்த போராட்டங்களினால்
தந்தை சிவராஜ் அவர்களின் பெயர்
பொறித்த கல்வெட்டுகள் வைக்கும்
கோரிக்கை மறைந்தே போனது.
அதுமட்டுமின்றி 1994ம் ஆண்டு
நேரு விளையாட்டரங்கிற்கு
செயலலிதா வந்தபோது
தற்குறிகளான அவரது கட்சியினர்
அம்பேத்கர் சிலையை முற்றாய்
மறைத்து பேனர்களை வைத்தனர்.
அதனால் அதை அகற்ற வேண்டி
போராட்டங்கள் நடைபெற்றன.
பிறகு ஆட்சிகள் மாறின, காட்சிகள்
மாறின. 2011ல் மீண்டும் ஆட்சிக்கு
வந்த ஜெயலலிதா அவர்கள் நேரு
விளையாட்டரங்கில் சில
புதுப்பிப்பு பணிகளை
மேற்கொண்ட போது அதற்காக ஒரு
தனிக் கல்வெட்டையும் வைத்தார்.
அது 11.11.2013 அன்று திறக்கப்பட்டது.
அப்போதும் தந்தை சிவராஜ்
திறப்புப் பற்றி யாருக்கும் எந்த
கவலையும் இல்லாமல் போனது.
தந்தை சிவராஜ் அவர்கள் திராவிட
இயக்கத்தின் முன்னோடிகளுள்
ஒருவர் என்று பேசிவரும்
திராவிடக் கட்சிகள் எவையும்
அவரின் வரலாற்றுப் பங்களிப்பைப்
பற்றி பேசுவதும் இல்லை.
அவருக்கான அங்கீகாரத்தை
அளிப்பதும் இல்லை என்பதற்கு இது
அப்பட்டமான சாட்சி.
இப்படி உயர்ந்த வரலாற்றையும்,
போராட்டங்களை கட்டமைத்த
வரலாறும், தலித் மக்களின் உன்னத
சாதனைகளையும் கொண்டதுதான்
சென்னையில் உள்ள நேரு
விளையாட்டு அரங்கம். ஆனால் இந்த
முற்போக்கு முகமூடிகள் தலித்
மக்களுக்கு எந்த வரலாற்று
பின்னணியும் இல்லை
என்பதுபோல பேசிக் கொண்டுத்
திரிகிறார்கள். எப்போதுதான் இது
மாறுமோ தெரியவில்லை.
நேரு விளையாட்டு அரங்கத்தை
கடக்கும் போதெல்லாம் எனக்கு இந்த
வரலாற்று சம்வங்கள் நினைவுக்கு
வரும். மனம் நெருடும். இதைப்
படிக்கும் ஒவ்வொருவருக்கும் இனி
அந்த நெருடல் உருவாகும் என
நினைக்கிறேன்.
அதோபோல, சிந்தாதிரிப்
பேட்டையில் உள்ள நேப்பியர்
பூங்கவை அமைத்ததும் மேயர்
சிவராஜ் அவர்கள்தான். பின்னர் அது
திமுக ஆட்சியில் மே தினப்
பூங்கா என பெயர் மாற்றப்பட்டது.
புதிய கல்வெட்டுகள் வைக்கப்பட்டன.
மேயர் சிவராஜ் அவர்களின் பெயர்
முற்றிலிம் மறைக்கப்பட்டது.
இந்த மோசடிகளை செய்பவர்கள்
நாமறிந்த முற்போக்காளர்கதான்.
வரலாற்றை மறைத்து அவர்கள் எதை
உருவாக்க முயல்கிறார்கள் என்பதை
உங்கள் யூகத்திற்கே
விட்டுவிடுகிறேன்.
குறிப்புகள்.
1. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள
புகைப்படங்கள் தந்தை சிவராஜ்
அவர்களின் குடும்ப புகைப்படத்
தொகுப்பிலிருந்து பெற்றவை.
சிவராஜ் அவர்களின் இளைய மகன்
தயாசந்தர் அவர்கள் அதை எனக்கு
அளித்தார். அவற்றில் சில மட்டுமே
இங்கு பதியப்பட்டுள்ளது.
2. மக்கள் விளையாட்டுத் திடலில்
அம்பேத்கர் சிலையை வைத்த மேயர்
குசேலர் அவர்கள் தனிப்பட்ட
முறையில் எனக்கு பாட்டனார்
முறை. எனது தந்தையின்
சித்தப்பா. அவர் பிறந்த ஊர்
தற்போது ஊத்துக்கோட்டைக்கு
அருகே, ஆந்திராவில்
சேர்க்கப்பட்டிருக்கும் மதனம்பேடு
கிராமம்.
3. பழைய நேரு விளையாட்டு
அரங்கத்தின் புகைப்படத்திற்காக
அலைந்துக் கொண்டிருக்கிறேன்.
அது கிடைக்கவில்லை. என் சிறிய
வயதில் அந்த அரங்கில்
விளையாடிய நினைவு
இருக்கிறது. ஒரே நேரத்தில்
இரண்டு கால் பந்தாட்ட போட்டிகள்
நடத்தும் அளவிற்கு அது பெரியது.
நன்றி - நமது தமிழ்மண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக