வியாழன், 1 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தி
பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.

இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்[, யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
விநாயகரின் வேறு பெயர்கள்
வித்தியாசமான விநாயகர் சிலை

    பிள்ளையார்
    கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
    ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்

    பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

காணபத்தியம்

இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
கிருத யுகம்

காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
திரேதா யுகம்

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
துவாபர யுகம்

கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
கலி யுகம்

சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது

புராணங்களும் வரலாறும்
’வேத காலம்’ என்று கூறப்படும் தொன்மையான காலகட்டத்திற்கும் முன்பிருந்தே விநாயகர் வழிபாடு உலகின் பலபகுதிகளிலும் இருந்து வந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
’கணேச புராணம்’ விநாயகர் அவதாரத்தை யுகத்திற்கொன்றாக நான்கு அவதாரமாகக் கூறுகின்றது.

விநாயகரின் தோற்றம் பற்றி பலவிதமான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.

    கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார்.(உமையம்மை மஞ்சளைத் திரட்டி விநாயகர் செய்தார் என்றும் கூறுவர் ) யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அதன் பின்னர் தாம் காவல் காக்கும்போது உள்ளே நுழைய அங்கே வந்த சிவபெருமானைத் தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்ட வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.

    கயிலாய மலையின் மந்திர சித்திர மண்டபத்தில் சிவபெருமான் உமையம்மையோடு எழுந்தருளினார். அங்கு ஏழு கோடி மந்திர சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே சமஷ்டிப் பிரணவம் என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன. சிவபெருமானும் உமையம்மையும் அவற்றை நோக்க அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடன் விநாயகர் அவதரித்தார்.
    சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து விநாயகரை பெற்றெடுத்தனர் என மகாபுராணங்களில் ஒன்றான இலிங்க புராணம் கூறுகிறது.
சிவபெருமான், உமையம்மைக்கு யானை முகம் மனித உடலும் உடைய ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையை எடுத்து மகிழ்ந்தார் பார்வதி தேவி. அக்குழந்தை தாயின் மடிவிட்டு இறங்கி கைகொட்டி தாண்டவம் ஆடியது. ஐந்து கைகளை உடைய குழந்தை என்பதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டார்.

தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.
திருவுருவ விளக்கம்
திருவடி

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்
கொம்புகள்

மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.
தாழ்செவி

விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
விநாயகர் மூர்த்தங்கள்

பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.

நரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையின்றி மனித உருவில் உள்ளார்
நடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும் விநாயகர். சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்

    உச்சிட்ட கணபதி
    உத்தண்ட கணபதி
    ஊர்த்துவ கணபதி
    ஏகதந்த கணபதி
    ஏகாட்சர கணபதி
    ஏரம்ப கணபதி
    சக்தி கணபதி
    சங்கடஹர கணபதி
    சிங்க கணபதி
    சித்தி கணபதி
    சிருஷ்டி கணபதி
    தருண கணபதி
    திரயாக்ஷர கணபதி
    துண்டி கணபதி
    துர்க்கா கணபதி
    துவிமுக கணபதி
    துவிஜ கணபதி
    நிருத்த கணபதி
    பக்தி கணபதி
    பால கணபதி
    மஹா கணபதி
    மும்முக கணபதி
    யோக கணபதி
    ரணமோசன கணபதி
    லட்சுமி கணபதி
    வர கணபதி
    விக்ன கணபதி
    விஜய கணபதி
    வீர கணபதி
    ஹரித்திரா கணபதி
    க்ஷிப்ர கணபதி
    க்ஷிப்ரபிரசாத கணபதி



வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

துர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.
விநாயகர் அகவல்


ஔவையார் விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை.." எனத்துவங்கும் விநாயகர் அகவல்.விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை
கணேச பஞ்சரத்னம்

கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.
தமிழ் நாட்டின் சிறப்பு
மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்.

தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.
ரூபாய் நோட்டில்

இந்தோனேஷியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது.
/////

விநாயகர் சதுர்த்தி-விநாயகர் வழிபாடுபற்றி...

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா"
என்று முத்தமிழையும் வேண்டிப் பாடுகிறார் ஔவையார்.
முத்தமிழ் மட்டுமன்று; ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் ஏய உணர்விக்கின்ற செல்வம் ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவரும் சிவனது திருமகனும் ஞானச் சிகரமாய் விளங்குபவரும் அறிவினில் வைத்து வணங்க வேண்டிய திருவடிகள் உடையவரும்மாகிய விநாயகப் பெருமான்.
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே"
திருமந்திரம்.
சிவபெருமானின் திருவருட் சம்மதத்தோடு உமையம்மையால் ஆக்கப்பட்ட குழந்தையே விநாயகப் பெருமான். நந்தி(சிவன்) மகன் என திருமந்திரம் சிவபெருமானின் திருப்பிள்ளையை உரைக்கின்றது.
எல்லா உயிர்களுக்கும் தந்தையாகிய சிவனுக்கும் தாயாகிய உமைக்கும் முதல் பிள்ளையாய் பூத்ததால் பிள்ளையார் எனும் செல்லப் பெயருக்கு உரியவர். பார்வதி தேவி நீராடும்வேளையில் தனது பாதுகாப்புக்காக தோற்றுவித்த புதல்வனே விநாயகர் என்றும்
புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி தான் நீராடும்போது பாதுகாப்புக்காக விநாயகரை உருவாக்க, கஜமுகசூரனின் வதமே சிவனின் திருவருட் சம்மதமாக இருந்தது. ஆற்றங்கரைகளிலும் கிணற்றுக் கரைகளிலும் பிள்ளையார் குடிகொண்டது பார்வதி தேவி நீராடும்போது தனது பாதுகாப்புக்கு உருவாக்கியதன் நிமித்தமே என்பர்.
ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, அரச மரத்தடியிலும் பிள்ளையாரைக் காணலாம்.
அரச மரத்தில் பதினொரு உருத்திரர்களும் அட்ட வசுக்களும் மும்மூர்த்திகளும் வாசம் புரிவதாக பிரமாண்ட புராணம் கூறுகின்றது. அரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனிசுவரனால் ஏற்படும் இன்னல்கள் சூழமாட்டாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும் சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனிசுவரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன.
சனிசுவரனிடம் அகப்படாத கடவுள் பிள்ளையார் மட்டுமே! பிள்ளையாரைப் பிடிக்க வேண்டிய தருணம் சனீசுவரனுக்கு வந்ததும் பிள்ளையாரிடம் சென்றபோது, பிள்ளையார் பெருமான்,தான் இன்று ஆய்த்தமாக இல்லை என்றும் ஆதலால் நாளை வருமாரும் வேண்டியவர் தனக்கு நினைவூட்டும் வகையில் "நாளை வருவேன்" என எழுதி வைக்கச் சொல்லுகிறார். எனவே சனீசுவரன் மீண்டும் வரும் வேளைகளில் எல்லாம் எழுதியதைப் படிக்க வேண்டுவார். "நாளை வருவேன்" என சனிசுவரனும் படிக்க, அதுவே அவரது வாக்காக கருதி நாளை வரும்படி மீண்டும் வேண்டுவார். இப்படி, சனிசுவரரிடம் பிடிபட்டு இருக்கவேண்டிய காலத்தை பிடிபடாமல் புத்திசாதூரியமாக கழித்துவிடுவார். பிள்ளையாரிடம் ஏமாற்றம் அடைந்த சனிசுவரன் பிள்ளையாரை வழிபடுபவர்களுக்கு "அதிக இன்னல்களை கொடுக்கேன்" என வாக்குறுதி வழங்கினார்.இதனால் பிள்ளையாரை வழிபடுபவர்கள் சனிசுவரனின் இன்னல்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. எனவே சனிசுவரனின் இன்னல்களில் இருந்து விடுவிக்கும் அரச மரமும் பிள்ளையாரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கமாயிற்று.

விநாயகரின் நாபி பிரம்ம அம்சம்,முகம் திருமாலின் அம்சம்,கண்கள் சிவமயம்,இடப்பாகம் சக்தி அம்சம், வலப்பாகம் சூரிய அம்சம்.அரச மரம் மும்மூர்த்திகளின் தெய்வாம்சம் நிறைந்த விருட்சமாதலால் மும்மூர்த்திகளின் திருவருள் நிறைந்த பிள்ளையார் அங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பதும் முறையே.
விநாயகப்பெருமானின் திருவுருவம் ஓம் எனும் ஓங்கார வடிவமானதாகும். "கண்ணெதிரே காணும் இந்த உலகனைத்தும் ஓங்கார வடிவம்.சென்றவை,இருப்பவை,வருபவை எல்லாம் ஓங்காரம்.காலத்தின் மூன்று பகுதிகளைக் கடந்து நிற்கிற ஒன்றும் ஓங்காரமே." என்கிறது மாண்டூக்ய உபநிடதம்.
"வேதங்கள் எந்த வார்த்தையைக் குறிக்கோளாய்க் கொண்டிருக்கின்றனவோ, எதை முன்னிட்டு எல்லா தன்னொழுக்க முறைகளும் (தவம்) மேற்கொள்ளப்படுகிறதோ, எதை நாடி பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்தக் குறிக்கோளை அடைவதற்கான மந்திரம் ஓம் என்பதாகும்"
"ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன்.இதுவே கடைசி எல்லை. இம்மந்திரத்தை அறிந்தவன் எதை விரும்பினாலும் அது கிடைக்கும்.இதுவே மிகச் சிறந்த ஆதாரம்.இதுவே மிக உயர்ந்த ஆதாரமும்.இந்த ஆதாரப் பொருளை அறிந்தவன் பிரம்ம லோகத்தில் சிறப்படைகிறான்"
என ஓங்காரம் வேத சாரம் என்பதை தெளிவாக்கிறது கட உபநிடதம். விநாயகரின் வாயின் வலதுபுற ஓரம் தொடங்கி, கன்னம்,தலை வழியாகச் சுற்றிக் கொண்டு இடதுபுறத்தில் தும்பிக்கையின் வளைந்த நுனிவரை வந்தால் ஓம் எனும் வரி வடிவத்தைக் காணலாம்.
ஓம் எனும் பிரணவ மந்திரம் அகரம்,உகரம்,மகரம் எனும் மூன்றெழுந்துகளால் ஆனது. "அ" படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், "உ" காத்தல் தொழிலுக்குரிய திருமாலையும், "ம" அழித்தல் தொழிலுக்குரிய உருத்திரனையும் குறிக்கின்றது. ஓம் எனும் பிரணவ வடிவாய் இருக்கும் பிள்ளையார் மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குகின்றார் என்பது தெளிவாகும்.
எதை எழுதத் தொடங்கினாலும் "உ" என அடையாளம் இட்டு எழுதுவர். "உ" என்பது சிவசக்தியை குறிக்கும் நாதம்,விந்து ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும். இதனைப் பிள்ளையார் சுழி என்பர். சிவசக்தி இணைந்த நிலையை பிள்ளையாராகக் கருதுவதாலேயே அவ்வாறு அழைப்பர்.
முதல் வழிபாட்டுக்குரியவர் விநாயகப் பெருமான்.சிவ பூதகணங்களின் பதி என்பதால் கணபதி எனப் போற்றப்படுவார்.
கணேசன்,ஏகதந்தன்,சிந்தாமணி,விநாயகன்,டுண்டிராஜன்,மயூரேசன்,லம்போதரன்,கஜானனன்,ஹேரம்பன்,வக்ர துண்டன்,ஜேஷ்டராஜன்,நிஜஸ்திதி,ஆசாபூரன்,வரதன்,விகடராஜன்,தரணிதரன்,சித்தி புத்தி பதி,பிரும்மணஸ்தபதி,மாங்கல்யேசர்,சர்வ பூஜ்யர்,விக்னராஜன் என்று இருபத்தியொரு திருப்பெயர்கள் உடையவர் பிள்ளையார் என புராணங்கள் கூறுகின்றன.
விநாயகரின் பெண் வடிவமே விநாயகியாகும். அதாவது பெண் உருவப் பிள்ளையார். மதுரை,சுசீந்திரம்,திருச்செந்தூர் கோயில்,திருவண்ணாமலை அம்மன் ஆலயத் தூணிலும் ,ஏனைய ஒரு சில இடங்களிலும் தமிழ்நாட்டில் இப்பிள்ளையாரைக் காணலாம். எனினும் வடநாட்டில் ஏராளமான பெண் பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. சித்தி,புத்தி என மனைவியர் இருவர் பிள்ளையாருக்கு உண்டு என வடநாட்டில் கருதுவர்.
விநாயகப் பெருமானின் திருநடனத்தை கண்டு சிரித்தமையால் சந்திரன் தேயத் தொடங்கினான். விநாயகர் நிந்தை செய்வோருக்கு ஞானத்தில் தேய்பிறை என்பது திண்ணம்.ஞானம் கைகூடாது. கைகூடிய ஞானமும் கைவிட்டுப் போகும் என்க.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது கொன்றைவேந்தனில் ஔவையாரின் வாக்கு.
மாங்கனிக்காய் உலகை சுற்றிவர வேண்டியிருக்கையில் தாயையும் தந்தையையும் சுற்றி வந்து மாங்கனியை வென்றவர் பிள்ளையார். "தாயும் தந்தையுமே உலகு" என்பதையும் சிவசக்திக்குள் உலகம் அடக்கம் என்பதையும் உணர்த்தவே மாங்கனித் திருவிளையாடல் என்க.
முருகனோடு வள்ளி காதல் கொள்ள யானையாக வந்து உதவியவர் பிள்ளையார்.
வள்ளி என்னும் ஆன்மாவை இறைவனாகிய முருகன் தேடி வந்து தன்பால் ஈர்க்க முயலும்போது இறைவனாகிய விநாயகர் உதவுதல் என்பதே இதில் உள்ள தத்துவம் என்க.

பாசங்களில் இருந்து பசுக்களை மீட்டு தன்பால் ஈர்க்கும் பதியின் கருணையை சுட்டுவதே இதன் பொருளாகும். வள்ளியைத் தேடி முருகன் காடுகளிலும் அருவிகளிலும் அலைவது ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட இறைவன் எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது. விநாயகர் யானையாக வந்து வள்ளியை முருகன்பால் திருப்புவது, இறைவன் ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட்டு பதியை நோக்கி நகர இறைவனே சோதனைகளை உருவாக்கி இறைவனை உணர்த்துவான் என்பதாகும்.


மாணிக்கவாசகப் பெருமானுக்கு நரி-பரி என்று பல்வேறு சோதனைகளையூட்டி ஆட்கொண்டமை இந்தத் தத்துவத்தை தெளிவுபடுத்துகிறது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகராகிய மாணிக்கவாசகர் உருகுவதும் இதனையே ஆகும்.
கஜமுகசூரனின் மனைவியார் உமையை வழிபட்ட காரணத்தால் கஜமுகசூரனுடனான போரில் அவனை வதைக்காது மூசிக வாகனமாக மாற்றி ஏற்றருளியவர் விநாயகப் பெருமான்.
சிவபெருமான் விநாயகரை மறந்து திரிபுர தகனத்திற்கு சென்றதனாலேயே சிவபெருமானின் தேர் அச்சு முறிவுக்கு உள்ளாகியது என்பர். பரம்பொருளான சிவபெருமான் காரிய சித்தி தங்குதடையின்றி கைகூட வேண்டுமென்றால் விநாயகரை வழிபட வேண்டும் என்பதை பாருக்கு அறிவிக்கவே அவ்வாறு திருவருட்சம்மதம் பூண்டார் எனலாம்.
"நற்றவா உன்னை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமசிவாயவே" என்கின்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அதுபோல் பிள்ளையாரைக் கண்டதும் மனம் மறந்தாலும் உடல் அவயவங்கள் தோப்புக்கரணம் போட மறக்காது என்பது மனதார யாவரும் உணர்ந்ததே! கஜமுகாசூரனிடமிருந்து தேவர்களை மீட்ட பிள்ளையாருக்கு செலுத்தும் நன்றியுணர்வாக அசூரன் முன்னேயிட்டு வந்த தோப்புக்கரணத்தை, தேவர்கள் பிள்ளையார் முன் இட விரும்பி வரமாக பிள்ளையாரிடம் வேண்டினர். அசூரனிடம் இருந்து தேவர்களை மட்டுமா மீட்டார்? உலகையே மீட்டார் என்பதாலேயே நாமும் தோப்புக்கரணம் நன்றியுணர்வுடன் போடும் பழக்கம் உருவாயிற்று.
மகாவியாச முனிவர் மகாபாரதத்தைப் சொல்லச்சொல்ல எழுதிக் கொண்டிருந்த விநாயகப் பெருமானின் எழுத்தாணியின் முனை மழுங்க, தனது வலது தந்தத்தை முறித்து அதையே எழுத்தாணியாகப் பயன்படுத்தி மகாபாரதத்தை தொடர்ந்து எழுதினார். அதேபோல் ஒருமுறை பரசுராமர் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் வந்தபோது, இடைமறித்த விநாயகருடன் போர் தொடுத்தார். அப்போது சிவபெருமானால் அளிக்கப்பட்ட பரசு ஆயுதத்தை விநாயகப் பெருமான் மீது ஏவ அது சிவாம்சம் பொருந்திய ஆயுதம் என்பதால் அதை எதிர்ப்பின்றி தனது இடது தந்தத்தால் தாங்கியபோது, அவரது இடது தந்தமும் உடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு இருதந்தமும் இல்லாத நிலையில் அருள்பாலிக்கின்ற விநாயகரை திருவாரூர் தியாகேசர் கோயிலில் பாதிரி மரத்தடியில் காணலாம்.

மாணிக்கவாசகப் பொருமான் சிதம்பரத்துக்கும் தில்லைக் காளியம்மன் ஆலயத்திற்கும் இடையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சதுர்முடி விநாயகர் ஆலயத்தை வழிபட்ட பின்னரே திருவாசகத்தைப் பாடினார் என்கின்றது அவ்வாலயத்துக்குரிய கர்ணபரம்பரை கதை.
சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்த ஔவையார் (பல ஔவையார்கள் உண்டு.), சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீது ஏறிக்கொண்டு திருக்கயிலைக்குச் சென்று கொண்டிருக்க, விநாயகர் பூசையை செய்து விநாயகர் அகவலைப் பாடி, விநாயகப்பெருமானின் துதிக்கையின் உதவியுடன்(துதிக்கையால் ஔவையாரை தூக்கி கைலாயத்தில் இறக்கிவிட்டார்) அவர்களுக்கு முன்னரே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார்.விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவ் ஔவையார் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் என்பர் தமிழறிஞர்கள்.
"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே." என்று ஆத்தி சூடியிலும் (ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும்)"கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே" என்று கொன்றை வேந்தனிலும் ("கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். ) "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு" என்று மூதுரையிலும் "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் " என்று நல்வழியிலும் பிள்ளையாரை கடவுள் வாழ்த்தில் பாடும் ஔவையார்; பிள்ளையாருக்கு,
"சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
............."
என்று "விநாயகர் அகவல்" என்னும் பாமாலையையும் சூட்டியுள்ளார்.
முருகன் மீது தமிழை திருப்புகழாக்கி சூட்டிய அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பிள்ளையாருக்கு உகந்த இருபத்தியொருவகையான படையல்(நிவேதன) பொருட்களை பட்டியல் இடுகின்றார்.
"இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்
எட்பொரிய வற்று வரையிள நீர்வண்
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
வெளரிப்பழமிடிப் பல்வகை தினிமூலம்
மிக்க அடிசிற் கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கின சமார்த்தனெனு மருளாழி
வெற்ப குடி லச்சடிவ விற்பரம ரப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே"
இக்கு(கரும்பு), அவரைக்காய், நற்கனிகள்,சர்க்கரை,பருப்பு, நெய்,எள்,பொரி,அவல்,துவரை,இளநீர், வண்டு எச்சில்(தேன்),பயறு,அப்பம்,பச்சரிசி,அரிசி மாவினால் செய்யப்பட்ட பிட்டு, வெள்ளரிப்பழம், இடிப்பல் வகை(அரிசியை இடித்து செய்யப்படும் மோதகம்) தனி மூலம்(ஒப்பற்ற கிழங்குகள்) மிக்க அடிசில்(சிறந்த உணவு வகைகளான சித்ரான்னம்),கடலை என விநாயகப் பெருமானுக்கு உவந்த நிவேதனப் பொருட்களை திருப்புகழில் தீட்டியுள்ளார் அருணகிரிநாதர்.
முருக பக்தரான அருணகிரிநாதர் ஏன் பிள்ளையாரின் படையலுக்கு ஏற்ற பொருட்களை பாடலாக்க வேண்டும் என ஐயம் எழலாம். வயலூர் எனும் தலத்திற்கு வந்த அருணகிரிநாதருக்கு எதைப்பற்றி பாடுவதென்று உணரமுடியாது குழப்பம் ஏற்படவே திருப்புகழை தொடர்ந்து பாட முடியாமல் போயிற்று. அப்போது அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்ற பொள்ளாப் பிள்ளையார்(உளியால் செதுக்கப்படாது தானாகத் தோன்றிய பிள்ளையார்) ஆறுமுகன் புகழைப் பாட வழிகாட்டினார். ஆதலால் ஐம்முகனுக்கு நன்றி செலுத்தவே பிள்ளையார்மீதும் திருப்புகழைப் பாடிப்பரவசம் அடைந்தார்.
எருக்கம் பூ, அருகம் புல் போன்ற எளிய பொருட்களால் வழிபடக் கூடியவனும் ஆகம முறை, ஆகமம் அற்ற முறை என இருமுறைகளிலும் எழுந்தருளியிருப்பவனும் கோமயமும் அருகம்புல்லும் இருந்தாலே திருவுருவம் தாங்கும் தன்மையினால் ஏழை எளியவர்களின் குடிசைகள் தொட்டு செல்வந்தர்களின் மாளிகைகள்வரை எளிமையாக எழுந்தருளக்கூடியவனுமாக விளங்குபவன் விநாயகப் பெருமான்.
அருகம்புல்லுக்கு இணையானது என்று வன்னி மர இலையும் மந்தார மலரும் கருதப்படுகின்றது. இரு திருடர்கள் வன்னி மரத்தின் மேலேறி நின்று சண்டையிட்டு கிழே விழுந்து மரணித்தபோதும், அவர்கள் சண்டை செய்கையில் உதிர்ந்த வன்னி மர இலைகள் கிழே இருந்த விநாயகப் பெருமான் மீது வீழ்ந்த காரணத்தால் தேவலோக வாழ்வை பெற்றனர் என்று ஓர் கதையும் உண்டு.
காசியப்ப முனிவரின் யாகத்தினைக் குழைக்க முயன்ற அசுரனை யாகத்திற்காக வைத்திருந்த கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை எடுத்து அவன் மீது வீசி அவ்வசூரனை அழித்தார். யாகத்திற்கு ஏற்பட்ட இடையூறை தேங்காயைக் கொண்டு அழிந்ததனால், விக்கினங்கள் தீர்க்கும் விக்னேசுவரன் முன்னால் "இடர்களை உடைத்து காப்பான்" என்பதை உணர்த்தும் பொருட்டு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாயிற்று.
மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கியதால் விநாயகரின் திருமேனி வெப்பத்தால் தகித்தது.இந்த வெப்பத்தைப் போக்கி விநாயகரை குளிர்வித்த மகிமையுடையது அருகம்புல். அகரம் புல் என்பதுவே அருகம்புல் என வழங்கலாயிற்று என்பர். இவ் அருகம்புல் விநாயகரை வழிபட எளிய பூசைப் பொருளானதும் இதன் பொருட்டே!
பிள்ளையாருக்கும் அனந்தேசர் என்பவரின் பிள்ளையாகிய நம்பியாண்டார் நம்பிக்கும் உள்ள பந்தம் மூலம் திருமுறைகளை சைவத்தமிழ் உலகுக்கு அளித்த அருமை பிள்ளையாரின் பெருமையாகும்.அனந்தேசர் என்ற அந்தணர் திருநாரையூரில் உள்ள சுயம்பு பிள்ளையாராகிய பொள்ளாப் பிள்ளையாருக்கு பூசை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி அவரிடம் நைவேத்தியத்தை கேட்கும்போது, "விநாயகர் சாப்பிட்டுவிட்டார்" என சொல்லிவிடுவார். ஒருசமயம் அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூசை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்தியம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ மன்றாடி மனமுருகிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்தியம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையில் முட்டி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டார். இதை அறிந்த தந்தை அனந்தேசர் "நம்பி உண்டுவிட்டு பொய் சொல்கிறான் பிள்ளையார் எப்படி சாப்பிடுவார்?" என ஐயம் கொண்டு அதட்டியபோது நம்பி பிள்ளையாரே உண்டார் என பதிலளிக்கவே, மறுநாளும் நம்பியையே பூசைக்கு அனுப்பி சோதித்தபோது பிள்ளையார் உண்பதை உணர்ந்து நம்பி பொய்யுரைப்பதாக தவறாக கருதி தண்டித்ததை எண்ணி வருந்துகிறார். இப்படி நம்பியுடன் விளையாடியதால் "பொல்லாப்"பிள்ளையார் என்றும் இப்பிள்ளையார் வழங்கப்படலானார்.
நம்பியாண்டார் நம்பிக்கு வேதாகமங்களை ஓதாமல் உணர்வித்த இப்பொள்ளாப் பிள்ளையாரை "திருமுறை காட்டிய விநாயகர்" என்றும் அழைப்பர். திருமுறைகள் இருக்கும் இடத்தை அசரீரியாக நம்பியாண்டார் நம்பிக்கு கூறி,உலகுக்கு கிடைக்க வழிசெய்தமையால் இக்காரணப் பெயரும் உருவாயிற்று.
"பொள்ளா" என்றால் உளி கொண்டு செதுக்காத சுயம்பு என்று பொருள் - இது காழியூரார் அளித்த விளக்கம்.
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணத்தில்,"கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி
இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை
ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி
உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்
உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து"
என்று "பொல்லாப் பிள்ளையார்" எனக் குறிப்பிடுதல் நம்பியாண்டார் நம்பிக்கு செய்த திருவிளையாடல்களை கருத்தில் கொண்டே என்க.
காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டிவிட்டு காவேரியை பெருக்கெடுத்து ஓடச் செய்தமை, விபூடணனின் கைகளில் இருந்த திருவரங்கப் பெருமானை காவேரிக் கரையில் எழுந்தருளச் செய்தமை என பிள்ளையார் பெருமைகள் ஏராளம்.
"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார்" பெருமைகளை மனதில் நிறுத்தி விநாயகர் சதுர்த்தியை அநுட்டித்து சிவஞானம் சித்திக்க வேண்டுவோமாக.
"பிடியத னுருவுகை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வெளி வலமுறை இறையே"
என்கின்ற ஞானக்குழந்தை திருஞானசம்பந்தனின் தமிழால் பார் முழுதும் அமைதியும் சமாதானமும் உண்டாக பிரார்த்தித்துக் கொள்வோம்.

///
 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!
எப்படி வந்தது யானை முகம் ?
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.
பெண் உருவ பிள்ளையார்
பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி என அழைக்கப்படுகிறார்.
பிள்ளையார் சுழி தேவதைகள்!
பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.
விநாயகரும், சர்ப்பமும்!
விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். பிள்ளையார்பட்டியில் லிங்கமும் பாம்பும், திருப்பரங்குன்றத்தில் கரும்பும், பவானியில் வீணையும், மானாமதுரையில் சங்கும், சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தில் நாகத்தையும் கையில் கொண்டுள்ளார். தேனியில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார்.
பிள்ளையார் பிரார்த்தனை பலன்கள்!
மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.


விநாயகர் - சில தகவல்கள்!
தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.
இழந்த பதவிகளை மீண்டும் பெற...
சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்; சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

வியப்பூட்டும் விநாயகர்!
வித்தியாசமான விநாயகர்: கை - தொழில், கும்பம் ஏந்திய கை - ஆக்கும் தொழில், மோதகம் ஏந்திய கை - காக்கும் தொழில், அங்குசம் ஏந்திய கை - அழிக்கும் தொழில், பாசம் ஏந்திய கை -மறைத்தல் தொழில். விநாயகருக்கு விருப்பமான நிவேதனம்: மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, பாகு, அதிரசம் முதலியன. பன்னிரெண்டு விநாயகர்: வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர். விநாயகர் என்ற சொல்லுக்கு சிறந்த தலைவர் என்று பொருள். வி - சிறந்த, நாயகர் - தலைவர். விநாயகரை உருவாக்க: கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், சுத்தி, வெள்ளை எருக்குவேர், பஞ்சலோகம், வெள்ளி, செம்பு, பொன், தந்தம், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம், முத்து, பவளம், மண், விருட்ச மரங்கள் முதலியன.


கணபதியின் 16 வடிவங்கள்
விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.
1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.
3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.
4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.
7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.
8. உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.
9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.
10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.
11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.
12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.
14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.
15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
ஐங்கரன்- பெயர்க்காரணம்
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
ஊத்துக்குளி நர்த்தன விநாயகர்
விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இக்கோயிலிலுள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் நர்த்தன விநாயகர் என்றழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி பெரியநாயகி கைலாசநாதர் கோயிலிலுள்ள விநாயகர் மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.
பிள்ளை மனம் கொண்டவர் வெள்ளை குணம் உடையவர்
விநாயகருக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு.
கணபதி பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்
விக்னேஸ்வரன் தடை அனைத்தையும் போக்குபவர்
லம்போதரன் தொந்தி உடையவர்
ஐங்கரன் ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்
வக்ரதுண்டன் வளைந்த துதிக்கை பெற்றவர்
பிள்ளையார் குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்
ஒற்றைக்கொம்பன் ஒரு கொம்பு உடையவர்
ஹேரம்பர் திக்கற்றவர்களுக்கு உதவுபவர்
விநாயகர் மேலான தலைவர்
தந்திமுகன் தந்தத்தை பெற்றவர்
தந்தையைப் போல் பிள்ளை
தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.
1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4) தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5) இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6) தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7) இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8) பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

எலி மீது யானை அமர்ந்தது எப்படி?
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக